Friday, January 3, 2014

சிபிஐ சிக்கல்களும் சர்ச்சைகளும்

ஏதாவதொரு குற்றம் நிகழ்ந்தால், அது குறித்த விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் நம்பினால், உடனே சிபிஐயைத்தான் அவர்கள் துணைக்கு அழைப்பது வழக்கம். குறிப்பிட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்யவேண்டும் என்றுதான் அவர்கள் கோருவது வழக்கம். குறிப்பாக அரசியல் வட்டாரங்களில் இந்தக் குரல் பலமாக ஒலிப்பதுண்டு. காரணம், சிபிஐ ஒரு வழக்கை எடுத்துக்கொண்டால் விசாரணையில் பாரபட்சம் இருக்காது என்பது பரவலான ஒரு நம்பிக்கை. ஐம்பது ஆண்டு கால பாரம்பரியம் மிக்க இந்த அமைப்பு குறித்து குவஹாத்தி உயர் நீதிமன்றம் வெளியிட்ட ஒரு தீர்ப்பு அதிர்ச்சியையும் வியப்பையும் ஒருசேர கிளப்பியுள்ளது.
தீர்ப்பு விவரத்தைப் பார்ப்பதற்கு முன்னால் சிபிஐ குறித்த ஒரு சிறு அறிமுகம்.
அறிமுகம்
1941ல் சிறப்புக் காவல் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. இது 1 ஏப்ரல் 1963 அன்று மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) என்று பெயர் மாற்றப்பட்டது. 5600க்கும் அதிகமானோர் சிபிஐயில் பணியாற்றுகின்றனர். புது டெல்லியில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 52 கிளைகள். சிபிஐக்காக ஒதுக்கப்படும் ஆண்டு பட்ஜெட் 303.79 கோடி.
தலைமை புலனாய்வு ஆணையர், உறுப்பினர் ஆணையர்கள், உள்துறை செயலாளர், மத்திய ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவால் முன்மொழியப்பட்டு இந்திய குடியரசுத் தலைவரால் சிபிஐயின் இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.
சிபிஐயின் முதல் இயக்குநர், டி.பி. கோலி. ஏப்ரல் 1963 முதல் மே 1968 வரை பதவியிலிருந்த இவருக்கு பதவிக் காலத்திலேயே 1967ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதுவரை 24 இயக்குநர்கள் சிபிஐயில் பணியாற்றியிருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த எஃப்.வி. அருள், ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த டி. கார்த்திகேயன், ஆர்.கே.ராகவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
வழக்குகள்
கொலை, கடத்தல், தீவிரவாதம், நிதி முறைகேடுகள், ஊழல் தடுப்பு போன்ற பல வழக்குகளை சிபிஐ விசாரித்துள்ளது. சில முக்கிய வழக்குகள்: ஹர்ஷத் மேத்தா ஹவாலா பங்கு பத்திர ஊழல், போபர்ஸ் பீரங்கி கொள்முதல் ஊழல், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதி மோசடி, உயர் காவல் அதிகாரியின் மகன் குற்றவாளியாக்கப்பட்ட பிரியதர்ஷனி மாட்டு என்ற 22 வயது சட்டக் கல்லூரி மாணவி கொலை வழக்கு, குஜராத் அமித் ஷா வழக்கு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் போன்றவை. நாடுகளுக்கிடையிலான குற்றப் புலனாய்வுகளில் இன்டர்போலுக்கு நிகராக சிபிஐ செயல்பட்டு வருகிறது.
குற்றச்சாட்டுகள்
சிபிஐமீது சில குற்றச்சாட்டுகளைப் பலரும் முன்வைக்கிறார்கள். குறிப்பாக, மத்திய அரசால் சிபிஐ ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்னும் குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களையும் மாற்று முகாம்களில் இருப்பவர்களையும் மிரட்டிப் பணிய வைக்க சிபிஐ பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் இவர்கள்.
இத்தகைய பிரச்னைகள் இருக்கக்கூடாது என்றால் சிபிஐக்குக் கூடுதல் சுதந்தரம் அளிக்கப்படவேண்டும், அரசியல் தலையீடு அகற்றப்படவேண்டும் என்கிறார் அதன் முன்னாள் இயக்குநரான ஆர்.கே. ராகவன்.
கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பாக 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் சிபிஐயின் செயல்பாடுகள் எதிர்கட்சிகளாலும் உச்ச நீதிமன்றத்தாலும் கடுமையாக விமரிசிக்கப்பட்டுள்ளன. அரசின் கொள்கை சார்ந்த பிரச்னைகளில் பிழைகள் நேர்வதை சிபிஐ பெரிதுபடுத்தக்கூடாது என்று பிரதமர், நிதியைமச்சர் இருவரும் சமீபத்தில் சுட்டிக்காட்டியதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
குவஹாத்தி தீர்ப்பு
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் நவேந்திரகுமார், தன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்ததை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பதிலுக்கு ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அன்சாரி, இந்திராஷா ஆகியோர் அமர்வு அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் சாரம் இது. ‘மத்திய உள்துறை அமைச்சகம் 1 ஏப்ரல் 1963 அன்று நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின் மூலம் சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் மத்திய அமைச்சரவையின் தீர்மானம் அல்ல. அந்தத் தீர்மானத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவில்லை. எனவே சிபிஐ அமைப்பை போலிஸ் படையாகக் கருத முடியாது. சிபிஐ குற்ற வழக்குகளைப் பதிவு செய்வது சட்ட விரோதம். மத்திய உள்துறை அமைச்சகம் 1963ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.’
50 ஆண்டு பாரம்பரியம் மிக்க சிபிஐ என்ற அமைப்பே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்ட ரீதியாக சிபிஐயின் இருப்பை நிலைநிறுத்தாமல் விட்டது விமரிசனத்துக்குரியது.
தற்போது பதவி வகிக்கும் இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவின் நியமனத்தின்போது இன்னொரு சர்ச்சை எழுந்தது. அதுவும் இப்போது விவாதப்பொருளாகியுள்ளது. பிரதம மந்திரி, எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுமூலம் இனிமேல் சிபிஐ இயக்குனர் நியமனம் முடிவு செய்யப்படவேண்டும் என்றும் கூண்டுக்கிளி போல் இல்லாமல் சிபிஐக்கு சுதந்தர அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்றும் கோருகிறார்கள்.
குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. முக்கியத்துவம் கருதி தலைமை நீதிபதி பி.சதாசிவம் வீட்டிலேயே வழக்கு ஏற்கப்பட்டு விசாரணையும் தொடங்கியது. அப்போது ஆஜரான அட்டர்னி ஜெனரல் குலாம் சி. வாகனவதி வெளியிட்ட கருத்து இது.
‘சிபிஐயை நிறுவிய தீர்மானத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதாலேயே அதைச் சட்ட விரோத அமைப்பு என கூற முடியாது. தில்லி சிறப்பு போலிஸ் சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் சிபிஐக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பல சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதை குவஹாத்தி நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. அதே தில்லி சிறப்பு போலிஸ் அமைப்பு சட்டத்தின் கீழ் புதிய சிறப்புக் காவல் அமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அந்த அதிகாரத்தைப் பல வழக்குகளில் உறுதிப்படுத்தியுள்ளது.
‘உயர் நீதிமன்ற தீர்ப்பால் சுமார் 9000 நீதிமன்றத் தீர்ப்புகள், விசாரணையில் உள்ள சுமார் 1000 வழக்குகள் பாதிக்கப்படும். சிபிஐயில் சுமார் 6000 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தீர்ப்பால் ஒட்டுமொத்த சிபிஐ காவல் கட்டமைப்பே குலைந்துவிடும் நிலை ஏற்படும். இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி வேறு சில வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், தற்போது வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆதாயம் தேடக்கூடும்.’
இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்து விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வேறொரு வழக்கில், உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு தீர்ப்பை இங்கே நினைவுபடுத்திக்கொள்வது பொருத்தமாக இருக்கும். இந்தத் தீர்ப்பின்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும் முறை நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. தற்போது, சிபிஐ விவகாரத்திலும் இத்தகைய ஒரு தீர்ப்புதான் தேவைப்படுகிறது. ஐம்பது ஆண்டு காலப் பாரம்பரியம் மிக்க சிபிஐ சட்டப்பூர்வமான ஓர் அமைப்பு என்று அறிவிக்கப்படவேண்டும். அரசியல் தலையீடுகள் அகற்றப்படவேண்டும். அனைவருடைய எதிர்பார்ப்பும் இதுதான்.
சிபிஐயின் 50 வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பேசும்போது சொன்ன ஒரு ‘பழமொழி’ பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிவிடும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
பெரும் சர்ச்சைக்குள்ளான ஐபிஎல் சூதாட்டங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ரஞ்சித் சின்ஹா இப்படிக் கூறினார். ‘விளையாட்டுகளில் நடைபெறும் முறைகேடுகளில் கோடிக்கணக்கான பணம் புரளுகிறது. ஆனால் தெளிவான ஒரு சட்டம் இல்லாத காரணத்தாலும், இவை நாடுகளுக்கு இடையே நடக்கும் குற்றங்களாக இருப்பதாலும் மத்தியப் புலனாய்வுத் துறையால் சரியான நடவடிக்கை எடுக்க முடிவதில்லை’. மேலும் தொடர்ந்தார். ‘சூதாட்டங்களைத் தடை செய்யவென்று இருக்கும் சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை என்று சொல்வது ‘கற்பழிப்புக் குற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை என்றால் அதைத் துய்த்து மகிழுங்கள்’ என்பதைப் போல இருக்கிறது’.
இந்தக் கடைசி வாக்கியம்தான் தேசிய பெண்கள் அமைப்பை கொதித்து எழச் செய்துவிட்டது. ‘மத்தியப் புலனாய்வுத்துறை இயக்குநரின் பேச்சு, ‘சூதாட்டத்தைப் போலவே கற்பழிப்பு என்பதும் மாற்றமுடியாத சமூக நிகழ்வு’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் வாயிலிருந்து இந்த மாதிரி பொறுப்பற்ற, உணர்வுபூர்வமற்ற, ஆட்சேபத்திற்குரிய பேச்சுகள் வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. தனது பேச்சுக்கு விளக்கமும், அப்படி பேசியதற்கு மன்னிப்பும் அவர் கேட்டே ஆக வேண்டும் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
‘நம் நாட்டில் லாட்டரி சீட்டுக்கள் இருக்கின்றன, ஓய்வு விடுதிகளில் சூதாட்டக்களங்கள் இருக்கின்றன; கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை சட்டபூர்வமாக அறிவிக்கலாம் என்றெல்லாம் அரசாங்கமே சொல்லும்போது, பெட்டிங் என்பதையும் சட்டபூர்வமாக்கி விடலாம். சூதாட்டங்களை ஒழித்து விடவேண்டும் என்று சொல்வது மிகவும் சுலபம். அதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கடினம்’ என்றெல்லாம்கூட ரஞ்சித் சின்ஹா பேசியிருக்கிறார்.
தேசிய பெண்கள் அமைப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் சின்ஹா மன்னிப்பு கேட்டிருக்கிறார். ‘என்னுடைய உரை யாருடைய மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன், மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதும் பெண்களிடம் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கிறேன். மத்தியப் புலனாய்வுத் துறை பல கற்பழிப்புக் குற்றங்களை விசாரித்து இருக்கிறது; எங்களிடம் வரும் குற்றங்களையும் பெண்களின் நிலையை மனத்தில் வைத்துக் கொண்டே விசாரித்திருக்கிறேன்.
‘லாட்டரி சட்டபூர்வமாக ஆக்கப்பட்டதைப்போல பெட்டிங்கையும் ஆக்கலாம்; பெட்டிங்கை தடை செய்யும் சட்டங்களை அமல்படுத்துவது கடினம். அதனால் பெட்டிங்கை தடை செய்யமுடியவில்லை என்று சொல்வது தவறு என்று வலியுறுத்த ஒரு பழமொழியை பயன்படுத்தினேன். அவ்வளவுதான். எந்தச் சூழ்நிலையில் அப்படிச் சொன்னேன் என்று பாருங்கள்.’

நன்றி - ஆழம் மாத இதழ் (எனது பதிவு)

காப்பீட்டில் அந்நிய முதலீடு சுருட்டலும் சேவையும்

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் சில்லறை வர்த்தகம், வங்கிப் பணிகள், தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ் என்று பல துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வரவேண்டும் என்றும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் துறைகளில் அந்நிய முதலீட்டின் சதவிகிதத்தை அதிகரிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் இன்சூரன்ஸ் துறையில் மிகப் பெரிய நிறுவனமாக இயங்கி வரும் ஐசிஐசிஐ லொம்பார்ட் என்ற நிறுவனம், போலியாகத் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் மற்றும் உரிமை கோரல்கள் வாயிலாக அரசிடம் இருந்து பல ஆயிரம் கோடிகளைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.  இதே நிறுவனத்தின்மீது இதே வகையான புகார் 2010லும் வெளிவந்தது என்றபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
முன்னதாக 20092010 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தகுதியற்ற நபர்களின் பெயரில் பாலிசி ஆவணங்கள் தயாரித்து ராஜிவ் காந்தி ஷில்பி ஸ்வாஸ்தய பீமா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அரசின் பணத்தை கோடிக்கணக்கில் இந்நிறுவனம் பெற்றுள்ளதாகக்குறிப்பிடுகிறது டிஎன்ஏ இந்தியா டாட் காம்.
அதே காலகட்டத்தில்தான் இந்திய அரசாங்கம் ஐசிஐசிஐ லொம்பார்டை தனது காப்பீட்டுத் திட்டங்களில் இணைத்துக்கொண்டது.  கைவினைக் கலைஞர்களுக்கான ராஜிவ் காந்தி மருத்துவக் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு பருவகால அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றுக்கு மத்திய அரசு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்தத் திட்டங்களை நிர்வகிக்கும் பணி ஐசிஐசிஐ லொம்பார்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் 8 லட்சம் கைவினைக் கலைஞர்களை இந்தத் திட்டத்தில் சேர்ப்பதாக ஒப்புக்கொண்டது ஐசிஐசிஐ. ஆனால் குறிப்பிட்ட கால அளவில் சேர்க்க முடியாமல் போனதால் போலி ஆவணங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த 8 லட்சம் நபர்களில் சுமார் 30,000 பேர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கைவினைத் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் பெயரில் உள்ள ஆவணங்களில் ஏறக்குறைய 11,000 போலியானவை என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் காதி கிராமோத்பவன் குழுமத்தை அணுகி அதன் தொழிலாளர்களைச் சேர்ப்பதாக ஐசிஐசிஐ லொம்பார்ட் தெரிவித்திருக்கிறது. காதி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் வருவதால் திட்டத்தில் சேர தகுதியற்றது என்று சொல்லப்பட்டது.  தொழில் துறை அமைச்சகத்தை காதி தொடர்பு கொண்டபோது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட (சொசைட்டி) குழுமங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்று பதிலளிக்கப்பட்டது.
ஆனால் ஐசிஐசிஐ லொம்பார்ட் விடுவதாகயில்லை. எப்படியும் 50,000 பணியாளர்களை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, காதி அதிகாரிகளைத் தக்க முறையில் ‘கவனித்துக்கொண்டது’. இருந்தும் 11,000 பேரை மட்டுமே சேர்க்கமுடிந்தது. டிஎன்ஏ இந்தியா டாட் காம் நிறுவனம் வைத்திருக்கும் ஆதாரத்தின்படி பல பாலிசி ஆவணங்கள் பின்னர் ஐசிஐசிஐ நிறுவனத்தால் அழிக்கப்பட்டுவிட்டன.
ஏப்ரல் 2012ல் ஸ்ரீவத்சவா என்பவரால் மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. தற்போது அது நிலுவையிலுள்ளது.  இவ்வளவு நடந்த பிறகும் இந்நிறுவனத்தின்மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இப்போது அரசை ஏமாற்றியதற்காக மற்றொரு பொது நல வழக்கு முளைத்துள்ளது. அதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், காப்பீட்டு ஓழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை (ஐஆர்டிஏ) கடுமையாகக் கடிந்து கொண்டுள்ளது. இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென் கடிதம் எழுதிய பிறகும் ஏன் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
‘இது ஓர் உதாரணம் மட்டுமே. பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்த 23 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பெரும்பாலானவை பாலிசிதாரர்களின் கிளைம்ஸ் பலவற்றை நிராகரித்துள்ளன. மேலும், பாதியில் கைவிடும் பாலிசிகளின் மீது பெரிய அளவில் தொகை இழப்பு ஏற்படுத்தி மிச்சத்தை மட்டும் வழங்குகிறார்கள். அல்லது, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைக் காண்பித்து, சேமிப்பு மதிப்பை மிகக் குறைத்துக் காட்டுகிறார்கள்.’ என்கிறார் தென் மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுவாமிநாதன்.
இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவு, ராபர்ட் வதேரா நில பரிவர்த்தனை முறைகேடு, நிலக்கரி ஊழல் கோப்புகள் மாயம், லடாக்கில் சீனா ஊடுறுவல், பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல்கள் போன்ற பலவற்றையும் மீறி இந்திய நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்காலக்கூட்டத் தொடர் நடைபெற்து. புதிய பென்ஷன் திட்ட மசோதா, பாராளுமன்ற (தகுதியிழப்பு) திருத்த மசோதா, உணவு பாதுகாப்பு மசோதா போன்றவை எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா 2008 விவாதிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுவிட்டது. அரசுத் துறை இன்சூரன்ஸ் ஊழியர்களும் தனியார்மய எதிர்ப்பாளர்களும் தாற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
முதன் முதலில் 1955ம் ஆண்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்மீது நாடாளுமன்ற உறுப்பினர் அமோல் பராதே எழுப்பிய புகாரைத் தொடர்ந்து அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தின் முதலாளியும், இந்தியாவின் மிகப்பெரிய வணிகருமான சச்சின் தேவ்கேகர் என்பவர்  இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் சட்டம் 1956ன் வாயிலாக ஏறக்குறைய 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை  (154 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், 16 அந்நிய நிறுவனங்கள் மற்றும் 75 வைப்புநிதி நிறுவனங்கள்) இணைத்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மற்றும் மத்திய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
அப்போது எல்ஐசியின் மூலதனப் பங்கு என்பது 100 சதவிகிதம் அரசின் வசமே இருந்தது. தனது முதல் ஆண்டான 1957ல் எல்ஐசி 7,94,585 பாலிசிகளை விற்றது. இது தேசியமயத்துக்கு முன்பு இருந்த 245 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் சேர்ந்து விற்ற பாலிசிகளைவிட 30% அதிகம்.
பின்னர் 1999ல் ஐஆர்டிஏ உருவாக்கத்துக்கான மசோதா நிறைவேற்றப்படும்போதே இந்தத் துறையில் 26% அந்நிய முதலீட்டுக்கான கதவும் திறந்து விடப்பட்டது. தற்போது இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா 2008 வாயிலாக அதை 49% ஆக உயர்த்துவதற்கான முயற்சியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது.
இதில் முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும். யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்தவர்கள் என்பதோடு, அதிகமான காங்கிரஸ் உறுப்பினர்களும்  அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழு காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு தேவையற்றது என்று அழுத்தமாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளது. அதன் காரணமாகக் காப்பீட்டுத் துறையில் நாடாளுமன்ற ஒப்புதலின்றி அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்த முடியாது என்ற நெருக்கடியில் உள்ளது அரசு.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்ட மசோதாவில், ஓய்வூதியத்தில் அந்நிய முதலீடு என்பது காப்பீட்டுத் துறையில் உயர்த்தப்படுவதைப் போலவே உயர்த்தியமைக்கப்படும் என்று ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அரசின் பிடிவாதப் போக்கைத் தெரிந்துகொண்டுவிடலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி  அரசுக் காப்பீட்டுத் துறையைப் பாதித்துள்ளதா? மதுரை கோட்ட ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் என்.சுரேஷ் குமார் மறுக்கிறார். ‘கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் காப்பீட்டுத் துறை பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.  ஆயுள் காப்பீட்டில் 200102ல் 19,857 கோடியாக இருந்த புது வணிக பிரீமியம், 200809ல் 87,006 கோடியாக வளர்ந்துள்ளது. 31 மார்ச் 2013 நிலவரப்படி, சொத்து மதிப்பீடு 15,60,481 கோடி (240 பில்லியன் அமெரிக்க டாலர்). மொத்த ஆயுள் நிதி 14,33,103 கோடி.’
அவர் தொடர்கிறார். ‘பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் நுழைந்த பிறகு காலாவதியாகும் பாலிசிகள் குறித்து கவலை எழுந்துள்ளது. தவறான விற்பனைகூட அதிக அளவில் பாலிசிகள் காலாவதியாவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. ஐஆர்டிஏ கூற்றுப்படி  எல்ஐசி மட்டுமே மிகக் குறைந்த காலாவதி விகிதம், அதாவது 4% வைத்துள்ளது.  ஆனால் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, மாக்ஸ் நியூ யார்க்கில் இது 19% ஆகவும் ஐசிஐசிஐ புருடென்ஷியலில் 53% ஆகவும் உள்ளது. இதிலிருந்து, உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்தியக் காப்பீட்டு துறையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிகிறது. மாறாக, வளர்ச்சியே ஏற்பட்டு வருகிறது.’
தனியார் காப்பீட்டு நிறுவனங்களின்மீது மக்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது? தொழில் நகரமான கோவை மற்றும் திருப்பூரில் வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றும் ஆர். முரளியிடம் உரையாடினோம்.
‘பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டுத் திட்டங்கள் அனைத்தும் சந்தையோடு இணைந்து இருப்பதால் சேமிப்பின் மதிப்பு உயராமல் இருப்பதை வாடிக்கையாளர்கள் பார்க்கிறார்கள். இன்னொரு விஷயம், இங்கு முதலாளிகள் தங்கள் நிறுவனத்துக்கான காப்பீடு மற்றும் தனி நபர் காப்பீடுகளுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைத்தான் நாடுகின்றனர். கிளெய்ம்ஸ் தீர்வைப் பொருத்தவரை எல்ஐசியின் விகிதம் 99.74%. ஆனால் தனியார் துறையின் சராசரி 70%. ஆக மொத்தம் அரசுத் துறை காப்பீட்டின்மீதுதான் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.’
அந்நிய முதலீட்டை அதிகரித்தால் ஆரோக்கியமான போட்டி சூழல் உருவாகும், அது வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பலனையே பெற்றுத்தரும் என்றுதான் இதுவரை சொல்லி வருகிறார்கள். ஆனால், காப்பீட்டுத் துறையைப் பார்க்கும்போது உண்மை  அதற்கு நேர் எதிரானது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் எந்த வகையிலும் மக்களுக்கு நன்மை ஏற்படவில்லை என்பது மட்டுமின்றி ஊழல் பெருகிப்போயுள்ளது. கூடுதலாக அரசின் கஜானாவும் இத்தகையவர்களால் காலியாகிக்கொண்டிருக்கிறது.

நன்றி- ஆழம் மாத இதழ் (எனது பதிவு)

வெட்கப்பட வேண்டும்!


திண்ணியம், மேலவளவு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், நாய்க்கன் கொட்டாய்…. இந்த ஊர்களையெல்லாம் தமிழக வரைபடத்தில் அவ்வளவு    சுலபத்தில் கண்டுபிடித்துவிடமுடியாது. ஆனால் சாதிய பாகுபாடு, அவமரியாதை, மோதல், படுகொலை என்று கணக்கெடுத்தால் கடந்த பத்தாண்டுகளில் செய்தி ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட கிராமங்களாக இவையே இருக்கின்றன.
இந்த வரிசையில் தற்போது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிலுள்ள வடுகப்பட்டியும் சேர்ந்துள்ளது. இங்கு முக்குலத்தோர் உள்ளிட்ட ஆதிக்க (இந்து) சாதியினர் பெரும்பான்மையினராகவும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தலித் மக்களும் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பேருந்து நிழற்கூடையின் கீழுள்ள இருக்கைகளில் ஆதிக்க சாதி இந்துக்கள் முன்பாக தலித்துகள் அமரக்கூடாது. அதே போல் வடுகப்பட்டியின் மையத்தில் அமைந்திருக்கும் திண்ணைகளை தலித்துக்கள் பயன்படுத்தக்கூடாது. இது நடைமுறையில் உள்ள வழக்கம். கடந்த மாதத் தொடக்கத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டபோது, முதல் நாள் பள்ளிக்கு ஆசையுடன் புறப்பட்ட அருண்குமார் என்ற பட்டியல் சாதி மாணவன் குறிப்பிட்ட தெருவைக் கடந்து செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டான். அதே ஊரைச் சேர்ந்த நிலமாலை என்பவர் அந்த மாணவனைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அவனது செருப்பைக் கழற்றி தலையில் வைத்துக்கொண்டு செல்லுமாறு அருண்குமார் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். வேறு வழியின்றி அந்த மாணவன் அவ்வாறே செய்திருக்கிறான்.
இந்தச் சம்பவம் தலித் மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டினர். தருமபுரி, மரக்காணம் பகுதிகளில் சாதிக் கலவரங்கள் நடைபெற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பதால் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் இயக்குனர் வெங்கடேசன் தலைமையில் டிஎஸ்பி சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் வடுகப்பட்டி சென்று விசாரணை நடத்தி முடித்துள்ளனர். தமிழகத்தில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் சாதி மோதல்கள் குறித்து கேட்டதற்கு, ‘இப்பிரச்னை குறித்தும் அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆலோசிப்பதற்கு மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்தவுள்ளோம்’ என்று பதில் அளித்துள்ளனர். முன்னதாக மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து முதல் நாளிலேயே தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளியேற்றப்பட்டது குறித்தும் தேசிய ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து வடுகப்பட்டி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மதுரை, தேனி, ராமனாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களிடையே ஆங்காங்கு தொடர்ந்து சாதிய மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தலித் மக்கள்மீதான அவமதிப்புகள், பாகுபாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளும் என்ஜிஓ அமைப்புகள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்கீழ் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் யாரும் தண்டனை பெறுவதில்லை என்கிறார்கள். மாறாக சில தினங்களில் நீதிமன்றத்துக்கும் காவல்துறைக்கும் வெளியே பேசி பிரச்னையை முடித்துக்கொண்டு விடுகிறார்களாம்.
கடந்த ஜூன் 11ம் தேதி, சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை கிராமத்தில் புதிரை வண்ணார் என்ற தலித் பிரிவைச் சேர்ந்த வேட்டை வில்லன் என்பவரின் குடும்பத்தினர் தாக்கப்படுவதாகவும் விரட்டப்படுவதாகவும் புகார்கள் கிளம்பின. 2004ல் வேட்டை வில்லனின் நிலமும் வீடும் ஆதிக்கச் சாதியினரால் கையப்படுத்தப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் மதுரைக்கு அருகிலுள்ள உத்தங்குடியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, வேட்டை வில்லனின் மகன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.  சமீபத்தில் சாத்தரசன்கோட்டையில் வறட்சி நிவாரணம் வழங்கப்படுவது அறிந்து, அதை வாங்கச்சென்றபோது வீடும், நிலமும் இல்லாத உனக்கு எப்படி நிவாரணம் வரும் என்று அங்குள்ளவர்கள் தாக்கி, தரக்குறைவாக பேசி விரட்டியிருக்கின்றனர். உடனே வேட்டை வில்லனும் அவரது குடும்பத்தினரும் வித்தியாசமான முறையில் ஒருவர் தலையில் விறகு, ஒருவர் தலையில் அடுப்பு, ஒருவர் தலையில் குடம் என்று சுமந்து மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி வந்துள்ளனர். ஆனால் வழியிலேயே காவல்துறையினர் இவர்களை மடக்கி, புகாரைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம், இழப்பீடு பெறுவதற்காக சில சமயம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சில தலித் மக்களே தவறாகப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.
சட்டத்தால் மட்டுமே தீர்க்கமுடிந்த பிரச்னை அல்ல இது. கிராமங்கள் தோறும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த முதியவர்கள், இளைஞர்கள் அடங்கிய சமாதான குழுக்கள் ஏற்படுத்தப்படவேண்டும். மேற்படி சம்பவங்கள் நடக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு பேசி இந்தக் குழு சமரசம் செய்யவேண்டும். நாகரிகமும் கல்வியறிவும் வளர்ந்துள்ள இன்றைய சூழலிலும் சாதி மோதல்களையும் அவமதிப்புகளையும் அனுமதிப்பது வெட்கக்கேடான விஷயம்.
நன்றி - ஆழம் மாத இதழ் (எனது பதிவு)

Wednesday, November 6, 2013

நீயா- நானா ?


தன்முனைப்பினால் (EGO) எழும் விளைவுகள்

  சில மாதங்களுக்கு முன்பாக THE HINDU ஆங்கில நாளிதழில் முதன்மை ஆசிரியர் மற்றும் நிர்வாக குழுமத்தில் திரு என்.ராம்-ற்கு பதிலாக திரு சித்தார்த் வரதராஜன் பொறுப்பேற்றபின் சில நாட்களில் செய்திகளின் அச்சு வடிவமைப்பில் (LAY OUT - DESIGNING - PROVIDING SHORT CAPTIONS)குறிப்பிட்ட தலைப்புகளுக்கு பக்கத்தில் கலர் கட்டத்தில் குறியீட்டுச் சொல் குறித்து காண்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  சில வடிவமைப்பு மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டது.  பலரால் அது வரவேற்கப்பட்டது.  ஒரே மாதிரி பார்த்துப் பழகிய சிலர் எதிர் கருத்தும் தெரிவித்தனர்.
 
  ஆனால் அதற்கு முன்பு- அன்று- இன்று எல்லா நாட்களிலும் செய்தியாளர்களில் மாற்றம் ஏதும் இல்லாததால் ஆங்கில எழுத்து நடைகளில் மாற்றமின்றி சிறப்பாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்நிலையில் சமீபத்தில் முதன்மை ஆசிரியர் குழுமத்தில் திரு என்.ராம் பொறுப்பேற்று- அதனை தொடர்ந்து திரு சித்தார்த் வரதராஜன் ராஜினாமா போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது.  அது அவர்களின் உள் நிகழ்வு விவகாரம்.
 
  ஆனால் இன்றைய THE HINDU முதல் பக்கம் வலது மூலையில் "மீண்டும் பழைய பொலிவான வடிவமைப்பிற்கு திரும்பியுள்ளோம்" என கட்டம் கட்டி  குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஆட்சியமைப்பை, துறைவாரியான நிர்வாகத்தை, நீதித்துறையை இப்படி எவருடைய செயல்பாட்டையும் விமர்சிக்கும் தகுதிபடைத்த பத்திரிகையாளர்களிடையே இப்படி தனி மனித "தன் முனைப்பு (ஈகோ)" தலைதூக்கி முன்பிருந்தவர் செய்ததையெல்லாம் மாற்றுவேன் என தலைப்பட்டால், 5 வருடங்களுக்கொருமுறை ஆட்சி மாற்றத்தின் போது முன்னவர் செய்த பெரும்பாலான கொள்கை முடிவுகளை புதிய ஆட்சியாளர்களால் மாற்றப்படும் போது அதை எவ்வாறு விமர்சனம் செய்ய இயலும்?

  இந்து நாளிதழின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் செய்துவிட்டு போயிருக்கலாம்.  அதை கட்டம் கட்டி சொல்லி காண்பிக்கும் போது "தன் முனைப்பு (ஈகோ)" வெளிப்படையாக தெரிகிறது. "இடது" சிந்தனையாளர் என எண்ணப்படும் மூத்த பத்திரிகையாளரிடம் இது வெளிப்படுவது வேதனைக்குரிய ஒன்றே !!

Monday, May 27, 2013

100 கோடி ஜனநாயகம்

100 கோடி ஜனநாயகம்



கர்நாடகத்தின் சட்டப்பேரவைக்கு 2013 மே முதல் வாரம் தேர்தல் நடைபெற உள்ளது.  முன்பெல்லாம் ஆட்சி அதிகாரத்துக்கு யார் வரவேண்டும் என்று சாராய வியாபாரிகளும் தரகர்களும் திரை மறைவில் இருந்து தீர்மானித்தார்கள். அதன் பிறகு கார்ப்பரேட் முதலாளிகள் யார் எந்தத் துறையின் அமைச்சராக வரவேண்டும் என்பதைத் தீர்மானித்தார்கள். இப்போது அனைத்தும் மாறிவிட்டன. பணம் படைத்த முதலாளிகள் நேரடியாகவே அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள். சில கோடிகளை முதலீடாக விதைத்து 5 வருட பதவி காலத்தில் ஏராளமான கோடிகளை அறுவடை செய்துவிடுகிறார்கள்.
கர்நாடகாவின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் பல வேட்பாளர்கள் அவர்களாக மனமுவந்து தாக்கல் செய்துள்ள விபவங்களின் அடிப்படையில் மட்டும் பார்த்தாலே 10 வேட்பாளர்கள் ரூபாய் நூறு கோடி தாண்டி சொத்து சேகரித்து வைத்துள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் வீடு, மனை விற்பனையாளர்கள் (ரியல் எஸ்டேட்), சுரங்கத் தொழில் புரிவோர், கல்வி நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் நேரடியாகவே அரசியலில் களத்தில் இறங்கியுள்ளனர்.  யார் வேட்பாளராக களம் இறங்க வேண்டுமென்பதை அவருடைய சொத்து மதிப்பைக் கொண்டுதான் அனைத்து கட்சிகளும் முடிவுசெய்கின்றன.
சுரங்கம்
பெல்லாரி, தும்கூர் மாவட்டங்களில் பெருமளவில் இரும்பு தாது வெட்டி எடுக்கப்படுகிறது. இருப்பினும் 2010 &11ல் கர்நாடகா லோக்யுக்தா விசாரணை, உச்ச நீதிமன்ற கெடுபிடிகள் போன்றவற்றால் சுரங்கத் தொழில் சற்று சுணக்கம் கண்டிருந்தது.  பல்லாயிரம் கோடி வருவாய் தரும் தொழில் என்பதோடு பல்லாயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த மாநிலத்தின் சுரங்க ஜாம்பவான்கள் ஜி ஜனார்த்தன ரெட்டி (தற்போது ஹைதராபாத்தில் நீதிமன்ற காவலில் உள்ளார்), அனில் லாட், சந்தோஷ் லாட் ஆகியோர் நேரடியாக அரசியலில் ஈடுபடுகின்றனர். இதில் சந்தோஷ் லாட் என்பவரின் சொத்து மதிப்பு ரூ 186.40 கோடி
கல்வி
கல்வி நிறுவனம் என்பது பணம் கொழிக்கும் தொழிலாகிவிட்டது. கர்நாடகாவில் பல அரசியல்வாதிகள் சங்கிலித் தொடராக கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளனர். ஏறக்குறைய பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் அனைவருடைய பெயரிலும் கல்வி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
ரியல் எஸ்டேட்
சுரங்கத் தொழில் தொய்வடைந்ததைத் தொடர்ந்து அதிலுள்ள கோடிகள் ரியல் எஸ்டேட்டில் பாய ஆரம்பித்தது. குறிப்பாக பெங்களூரு, மைசூர், மங்களூர், தும்கூர், ஹாசன் மற்றும் ஷிமோகா ஆகிய இடங்களில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தார்கள். நில மதிப்புகள் பெங்களூருவில் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள நகரங்களிலும் அதிகரித்தது. விவசாயமற்ற நிலத்தின் மதிப்பு பெங்களூருவில் குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ.1500 முதல் அதிகபட்சம் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து லட்சம் வரை விலை போகிறது.
பல ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஏற்கெனவே அரசியலில் உள்ளனர். எம்.கிருஷ்ணப்பா (லே அவுட் கிருஷ்ணப்பா) நந்தீஷ் ரெட்டி, சதீஷ் ரெட்டி, கிருஷ்ண பலேமர் ஆகியோர் தங்கள் அதிர்ஷ்டத்தை மீண்டும் ஒருமுறை சோதித்துப் பார்க்க களம் இறங்கியுள்ளனர்.
சாராயம் மற்றும் சுரங்கத் தரகு வியாபாரத்துக்கு மாற்றாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானப் பணிகள் அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நந்தீஷ் ரெட்டி தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு ரூ.107.05 கோடி
  • காங்கிரஸின் ப்ரியா கிருஷ்ணா ரூ.910.98 கோடி
  • பாஜக ஆனந்த் சிங் ரூ.104.50 கோடி
  • ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஹெச் டி குமாரசாமி ரூ.123.02 கோடி
  • காங்கிரஸின் ஆர்வி தேஷ் பாண்டே ரூ.113.93 கோடி
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அனைவரும் களத்தில் உள்ளனர்.  காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களில் பலர் ரூ. 10 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு காண்பித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் கடுமையாகக் கண்காணித்தபோதிலும் அவர்கள் கண்களுக்கு படாதவாறு இலவசங்களும் பணம் கொடுப்பதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த நடைமுறைகளால் ஒரு சாதாரண வாக்காளர்கூட பணம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார். மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள், அதிலிருந்து சிறிது கொடுத்தால் அதைப் பெறுவதில் என்ன தவறு என்றும் வாக்காளர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
2008 தேர்தலுக்கு பிறகு பாஜக தனிப் பெரும்பான்மைக்கு 5 இருப்பிடங்கள் குறைவாக (224 இடங்களில் 110ல் வெற்றி பெற்றது) கைப்பற்றியபோது, 9 வேட்பாளர்கள் சுரங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்தார்கள். பாஜக தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக தாமரை திட்டம் என்று களம் இறக்கி எதிர்கட்சி உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து. அவர்களுக்கு கட்சியில் வாய்ப்பு கொடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்தது.  இதன் பின்னணியில் முழுமையாக ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்க முதலாளிகள் இருந்தனர்.
28 கோடி மக்களுக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ. 3075 கோடி. இந்தியாவில் 80% மக்கள் ஒரு நாளைக்கு ரூ.100 க்கும் குறைவான வருமானம் பெறுகிறார்கள். ஆனால் எம்.பிக்களின் சராசரி சொத்து மதிப்பு 5 கோடிக்கு மேல். 2009ல் தேர்வு செய்யப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 300க்கு மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள்.
பணத்தின் அதிகாரம் கர்நாடகாவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.  இருப்பினும் 2004 தேர்தலில் அது முடிவெடுக்கும் சக்தியாக அமைந்தது.  2004 தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் காங்கிரஸ்  65, பாஜக 79, ஜனதாதளம் (ம.சா) 58 என இடங்கள் கிடைத்தன.  அதன் காரணமாக அதிகாரம் மாறுவதும், முதல்வர் மாறுவதுமாக இருந்தது.
அதன் பிறகு ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்கத் தொழில் முதலாளிகள் நேரடியாக அரசியலில் இறங்க ஆரம்பித்தனர். தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 16 லட்சம்தான் செலவழிக்கவேண்டும் என தெரிவித்திருப்பது கேலிக்கூத்து என்கிறார்கள் இத்தகைய கோடீஸ்வர வேட்பாளர்கள்.
வருமான வரி நெருக்கடி என்பதெல்லாம் சாதாரண சம்பளம் பெறுவோருக்குத்தான்.  இத்தகைய கோடீஸ்வரர்களை யாரும் நெருங்கமாட்டார்கள். எப்போதாவது பழி வாங்கும் நோக்கில் இவர்கள்மீது பாய்ந்தால்தான் உண்டு. அதுவும்கூட மறக்கடிக்கப்பட்டுவிடும்.

நன்றி - ஆழம் - சித்ரகுப்தன்

Wednesday, March 13, 2013

வறட்சியிலும் சூடுபிடிக்கும் தண்ணீர் வியாபாரம்


"எப்போது தண்ணீர் பணமாய் கொட்டும்"

"ஒருபுறம் ஓட்டுக்கட்சி ஜனநாயகத்தில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஜனநாயகத்தை இயக்க வைக்கும் அடக்க விலை மட்டும் 50000 கோடி ரூபாய் என்கிறது ஒரு பார்வை (தினமணி / 5 மார்ச் /மக்களாட்சியின் அடக்கவிலை).  மறுபுறம் இத்தகைய ஆட்சியாளர்களின் முறையற்ற திட்டங்களால், தனியார் முதலாளிகள் வறுமையையும் காசாக்கி கொழுக்கின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டுகிறது இந்த கட்டுரை"

பரத்ரவுத் ஒவ்வொரு மாதமும் அவருக்கு தேவையான தண்ணீரை சேகரிப்பதற்காக பெட்ரோலுக்கு ரூ 800 செலவழிக்கிறார்.  மராத்வாடா மாநிலம், உஸட்மானாபாத் மாவட்டத்திலுள்ள டாக்விகி கிராமத்தில் இதே போல் பலர் செலவழிக்கிறார்கள்.  டாக்விகி மற்றும் இதர கிராமங்களில் ஒரு வீட்டிற்கு ஒருவர் வீதம் வெளியில் சென்று எங்கிருந்து தங்களால் தண்ணீர் சேகரித்து வரமுடியுமோ அங்கிருந்து எடுத்துவரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  உஸ்மானாபாத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்து விதமான வாகனங்களும் எங்கிருந்தாவது தண்ணீர் சேகரித்து வரும் பணியை மேற்கொண்டிருப்பதை பார்க்கலாம்.  அவை சைக்கிள்கள், இரு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள், ஜீப்கள், லாரிகள், வேன் மற்றும் டேங்கர்கள் ஆகும்.  பெண்கள் தலையில், இடுப்பில், தோள்களில் பானைகளை சுமந்து செல்வதை பார்க்க முடியும்.  கடுமையான வறட்சியிலிருந்து மீண்டு உயிர் வாழ்வதற்காக பெரும்பான்மை யானவர்கள் இந்த தண்ணீர் பிடிக்கும் பணியை செய்து வருகின்றனர். வேறு சிலரோ இதில் தெளிவாக லாபம் சம்பாதிக்கின்றனர்.

காலமும் தொலைவும்
 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயி பரத் கூறுகிறார், ஆம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் முழுநேரமாக தண்ணீர் எடுத்துவரும் பணியை மேற்கொள்கின்றனர்.  என்னுடைய குடும்பத்தில் நான் எனது சொந்த நிலத்திலுள்ள ஆழ்துளை கிணற்றில் சீரான இடைவெளியின்றி அவ்வப்போது கிடைக்கும் தண்ணீரை எடுத்து வருவேன் என்று கூறுவதோடு, அவர் வீட்டிற்கும் அந்த இடத்திற்கும் இடையே தொலைவு 3 கி.மீ.க்கு மேல் என்கிறார்.  எனவே 4 பிளாஸ்டிக் குடங்களை தனது ஹீரோ ஹோண்டா வாகனத்தில் வைத்து ஒரு முறைக்கு 60 லிட்டர வீதம் 4 நடை சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்.  "நான் அங்கு சென்று எங்கள் ஆழ்துளை குழாயில் கிடைக்கும் சொற்ப தண்ணீரை எடுத்து வருகிறேன், பயிர்களெல்லாம் நீரின்றி மடிகிறது" இந்த  கிராமத்தில் 25 ற்கும் மேற்பட்ட மோட்டார் இரு சக்கர வாகனங்கள் இதே பணியாக எந்நேரமும் சுற்றித் திரிவதை பார்க்கலாம் என்கிறார்.ஒவ்வொரு சுற்றும் ஏறக்குறைய 6 கி.மீ. என்பதால் பரத்தின் பணி என்பது தினமும் 20 கி.மீ. அல்லது மாதத்திற்கு 600 கி.மீ என்ற அளவில் முடிகிறது.  அதாவது 11 லிட்டர் பெட்ரோல்- ஏறக்குறைய 800 ரூபாய் இதற்காக மட்டும் செலவழிகிறது.  தண்ணீர் கிடைக்கும் நேரம் ஒவ்வொரு வாரமும் மாறிக் கொண்டிருக்கும் என்கிறார், அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிலையத்திற்கு சென்று வரும் அஜய் நிசூர்.  இந்த வாரம் மின்சாரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும், எனவே அந்த நேரத்தில் தண்ணீர் எடுத்து வருவோம்.  அடுத்த வாரம் நள்ளிரவிலிருந்து காலை 10 மணி வரை என மாறும் என்கிறார்.  அவர் தனது சைக்கிளில் 6, 7 குடங்களை கட்டிக் கொண்டு 2 - 3 கி.மீ. தொலைவிலான நடைகளை மேற் கொள்கிறார்.  அதனால் ஏற்படும் தோள்வலிக்காக இருமுறை உள்ளூர் மருத்துவ மனைக்கு சென்று வந்துள்ளார்.
நிலமில்லாமலிருக்கும் தொழிலாளர்கள் முதலாளிகளின் மூலம் சிரமத்தை சந்திக்கின்றனர்.  சில நேரம் மிகுந்த தாமதம் ஏற்படும், சில நேரம் (நீர்) ஒன்றுமே கிடைக்காமலும் திரும்ப நேரிடும் என்கிறார் ஜாம்பர்யாதவ்.  அந்த தாமதத்தால் வீட்டிலுள்ள கால்நடைகளுக்கு உணவளிப்பது தாமதப்பட்டு மோசமான நிலை ஏற்படும்.  இன்னும் 5 மாதங்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்கிறார் ஜாம்பர்.  ஏற்கனவே இந்த காலை நேரத்தில் தனது சைக்கிளில் 6 குடங்களை வைத்துக்கொண்டு இரண்டு நடைகள் முடித்துள்ளார் அவர்.
பெண்களை பாதிக்கும் சிரமம்
டாக்விகி கிராமத்தில் இரண்டு, மூன்று பானைகளை சுமந்து கொண்டு பெண்கள் நடந்தே பல முறை தண்ணீர் சுமக்கிறார்கள்.  அத்தகைய நீர் கிடைக்கும் இடத்திலிருந்து தண்ணீர் சுமந்து வர ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 மணி நேரம் அவர்கள் அந்த பணியை மேற்கொள்ள நேரிடுகிறது.  மேலும் அவர்கள் கூறும் போது ஒரே தண்ணீரையே மறு உபயோகப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.  முதலில் குளித்தபின், அதே தண்ணீரை கொண்டு துணிகளை துவைத்துவிட்டு, மீண்டும் அந்த நீரை பாத்திரங்கள் கழுவ பயன்படுத்துவோம் என்கின்றனர்.  ஆண்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுவரும் தூரத்தை விட அதிகமான தூரம் இங்குள்ள பெண்கள் நடந்து தண்ணீர் சுமக்கின்றனர்.  அவர்கள் ஏறக்குறைய 15- 20 கி.மீ. நடப்பதோடு, அதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர்.
புல்வந்திபாய் தாபே போன்ற பெண்கள் மிக மோசமாக பாதிக்கப் படுகின்றனர்.  அவர் ஒரு தலித் இனத்தவர் என்பதால் பெரும்பாலான தண்ணீர் கிடைக்கும் இடங்களில் அவர் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்.  அரசாங்கத்தால் வெட்டப்பட்டுள்ள கிணறுகளில் கூட நான் வரிசையில் கடைசியாகத்தான் நின்று தண்ணீர் எடுக்க முடியும் என்கிறார் அவர்.


கரும்பு விவசாயமும் மழையும்
பற்றாக்குறை என்பது வாழ்நிலையையும் பாதிக்கிறது.  தண்ணீர் பற்றாக்குறையால் என்னைப் போன்று ஒன்றிரண்டு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்வதும் சிரமமாகிவிடுகிறது.  என்னைப் போலவே எனது மாடுகளும் சிரமப்படுகின்றன.  நான் ஒரு நாளைக்கு பால் வியாபாரத்தின் மூலம் ரூ 300 சம்பாதிக்கிறேன் என்கிறார் சுரேஷ்வேட்பதக்.  தற்போது பெற்று வந்த பால் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்கிறார் அவர்.
உஸ்மானாபாத்தில் உள்ள டாக்விகி கிராம மக்கள் பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.  இங்கு 4000 ற்கும் குறைவான மக்கள் உள்ளனர்.  பாசனத்திற்கு 1500 க்கும் குறைவான ஆழ்துளை கிணறுகள் உள்ளது. தற்போது 550 அடிக்கும் கீழே துளையிட வேண்டியுள்ளது என்கிறார் பரத் ரவுத்.  இந்த வறட்சி பாதித்த பகுதியின் முக்கிய பயிர் கரும்பு ஆகும்.  எங்களது தேவையான சாதாரண மழை அளவு என்பது 767 மி.மீ. என்ற நிலையில் கடந்த பருவத்தில் 397 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது என்கிறார் உஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர் கே.எம்.நாகர்கோஜே.  800 மிமீ மழை என்பது மோசம் என கூற முடியாது, ஏனெனில் பல பகுதிகள் 400 மிமீ மழைதான் பெற்றுள்ளது என்கிறார் அவர் மேலும் கூறுகையில்.
800 மிமீ மழை பெய்தால் கூட 2.6 மெட்ரிக் டன் கரும்பு உற்பத்திக்கு அது போதாது.  ஒரு பயிரிடலுக்கு ஒரு ஏக்கருக்கு 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை (அதாவது ஒலிம்பிக் பந்தயங்களில் பயன்படுவது போன்ற    7 1/2 நீச்சல் குளங்களுக்கு சமமானது) டாக்விகி கிராமத்தில் சொட்டு நீர் பாசன முறையால் தண்ணீரை சேமிப்பவர்கள் மிகச் சிலரே.
மாவட்ட ஆட்சியர் நாகர்கோஜே மிக சிக்கலான பிரச்சனையை கையில் வைத்துள்ளார்.  நிலத்தடி நீர்  அரசுத் துறையில் உள்ள புள்ளி விபரங்களின்படி மிகக் குறைவாகவே உள்ளது.  அந்த மாவட்டத்தின் பெரிய, சிறிய நீர் திட்டங்கள் அனைத்திலும் தண்ணீர் இருப்பு ஏறக்குறைய "இல்லை" என்ற நிலைக்கு வந்து விட்டது.  மோட்டார் போன்ற சாதனங்களால் மேலே கொணர இயலாத சொற்ப அளவு என்பது சில மீன்களை உயிர்வாழ வைக்க மட்டுமே பயன்படும் விதமாக உள்ளது.  அந்த மாவட்டத்தின் சிறிய திட்டங்களின் மூலம் 3.45 மில்லியன் மெட்ரிக் சுற்று அடி அளவு மட்டுமே கையிருப்பு உள்ள நீரைக் கொண்டு சில நாட்கள் 1.7 மில்லியன் மக்களுக்கு வழங்க இயலும்.  அந்த மாவட்டத்தில்  தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் பாசனத்திற்கு நீர் வழங்குவதென்பது மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  இந்த மாவட்டத்தில் ஜனவரி நிலவரப்படி நிலத்தடி நீர் அளவு 10.75 மீட்டர்.  கடந்த 5 ஆண்டு சராசரியைவிட 5 மீட்டர் குறைவு.  சில பகுதிகளில் அதற்கும் குறைவாகவே உள்ளது.  இருப்பினும் அவர் இந்த ஆண்டு இந்த இருப்பை வைத்துக் கொண்டு நிலைமையை சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்.  இருப்பினும் தற்போதுள்ள பயிர் விளைச்சலை பார்க்கிற போது அடுத்த வருடம் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.
தனியாரின் வணிக ஆட்சி
டாக்விகியில் வருவாய் குறைந்து வருவதால் கடனாளிகள் அதிகரித்து வருகின்றனர்.  இங்கு ரூ 100 க்கு ஒரு மாதத்திற்கு ரூ 5 முதல் 10 வரை கந்து வட்டிக்காரர்களால் வட்டி வசூலிக்கப்படுகிறது என்கிறார் சந்தோஷ்யாதவ்.  அதாவது வருடத்திற்கு 60 முதல் 120 சதவீதம் வரை.  யாதவின் குடும்பத்தினர் மட்டும் ஆழ்துளை குழாய் பதிப்பில் ஏறக்குறைய ரூ 10 லட்சம் வரை செலவழித்துள்ளார்.  இருப்பினும் அவையாவும் வறண்டுவிட்டன.  வெயில் காலம் வெகு தொலைவில் இல்லை.  ஆனால் யார் அதைப்பற்றி எண்ணுகிறார்கள், அன்றாடம் கழிந்தால் போதும் என உழல்கின்றனர் என்கிறார் யாதவ்.
ஆனால் ஒருபுறம் வறட்சியை எதிர்த்து பலர் போராடி வருகையில், மறுபுறம் பற்றாக்குறையை பயன்படுத்தி தண்ணீர் வியாபாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.  இது எங்கு பார்த்தாலும் வெளிப்படையாக தெரியும்.  சமூக பணியாளர் பாரதி தாவாலே கூறுகையில் நாள் முழுவதும் நாங்கள் கைபேசி மூலம் எங்கிருந்து தண்ணீர் வாங்கலாம் என்பதற்காக பேசிக் கொண்டிருப்போம் என்கிறார்.  அது போல் ரூ 120 க்கு 500 லிட்டர் தண்ணீர் என்று ஒருவரிடம் விலை பேசியிருந்தேன்.  ஆனால் அவர் வரும் வழியிலேயே மற்றொருவருக்கு அதே அளவை ரூ 200 க்கு விற்றுவிட்டார்.  நான் பல முறை கேட்ட பிறகு முதல்நாள் தேவைக்கு கேட்டதை மறுநாள் இரவு 9 மணிக்கு கொண்டுவந்து கொடுத்தார்.  அதன்பிறகு நான் அருகில் இருப்பவரிடமே வாங்க துவங்கிவிட்டேன் என்கிறார்.
அந்த மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் விறுவிறுப்பாக தண்ணீர் வியாபாரம் நடைபெற்று வருகிறது.  பற்றாக்குறை அதிகரித்திருக்கும் போது விலை ஏறுகிறது.  அரசு 720 ஆழ்துளை கிணறுகளை குத்தகைக்கு எடுத்து அதன் உரிமையாளர்களுக்கு பிரதிமாதம்  ரூ 12000 வீதம் அளிக்கிறது.  அங்கு பொது மக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்க வேண்டும்.  ஆனால் நெடுந்தொலைவு, மற்றும் கூட்டம் அதிகமிருப்பதால் அங்கு தண்ணீர் பெறுவது சிரமமான ஒன்றாகிவிடுகிறது.  அங்கு தண்ணீர் தனியார் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது.  அவர்களிடம் பேரம் பேசி 500 லிட்டர் ரூ 200 கொடுத்து வாங்க வேண்டியதாகிறது.  நீங்கள் குறைவாக வாங்கினால் விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும்.  வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும்.  ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒருவர் ஆழ்துளை கிணறை வைத்துக் கொண்டு பற்றாக்குறையை பயன்படுத்தி பால் வியாபாரம் போல் தண்ணீர் வியாபாரம் செய்து வருகின்றனர்.  இங்கு தண்ணீர் பணமாக கொட்டுகிறது.

நன்றி - தி இந்து - தமிழில் - எஸ்.சம்பத்

என்று மடியும் இந்த கொத்தடிமை முறை ?


என்று மடியும் இந்த கொத்தடிமை முறை ?
 அனுமேகா யாதவ் / தமிழில் எஸ்.சம்பத்

(கடனால் நெறிபடும் கோட்டா மாவட்ட கொத்தடிமைகள் என்ற தலைப்பில் தி இந்து நாளிதழில் 19 பிப்ரவரி 2013 அன்று வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)
கடன் எனும் சுத்தியலால் இடி - ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்ட கல்குவாரியில் குடும்பத்தோடு கொத்தடிமையாக பணிபுரியும் பாபுலால் கைர்வா
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் கிரானைட் கல் குவாரியில் சாம்பல்-பழுப்பு நிற பலகை கற்களின்  மீது சூரிய ஒளி அஸ்தமிக்கும் நேரம்.  பாபுலால் கைர்வா, குவாரியின் விளிம்பில் அமர்ந்து கொண்டு கல்லின் மேல் டான்கி என்ற பெரிய அளவிலான நகம் போன்ற உளியை வைத்து சுத்தியலால் முனைப்பாக தட்டிக் கொண்டிருக்கிறார்.  பாபுலால் அந்த கல் நேர் கோடாக உடையும் வரை தட்டிக் கொண்டிருப்பார்.  ஒவ்வொரு 2 க்கு 10 சதுர அடி அளவில் பலகை போன்று காலடிக்கு பதிக்கும் கல் சந்தையில் ரூ 1600 வரை ஈட்டித் தருகிறது.  ஆனால் 38 வயதாகும் அந்த தொழிலாளிக்கு எந்த கூலியையும் பெற்றுத் தருவதில்லை.
"நான் இந்த குவாரியின் முதலாளி பகதூர் பாபுவிடம் 5 வருடம் முன்பாக ரூ 10000 கடன் பெற்றேன்.  அவர் தற்போது எனது கடன் இரட்டிப்பாகியுள்ளது என்கிறார்.  அவர் எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 500 கூலியாக குடும்ப செலவிற்காக கொடுக்கிறார், வருட இறுதியில் முந்தைய கடனுக்காக அதை சரிக்கட்டிக் கொள்கிறார்" என்கிறார் அந்த தொழிலாளி.  அந்த கல் நேர் கோட்டில் உடையவில்லையென்றால், அவர் முதலிலிருந்து மீண்டும் உடைக்கத் துவங்க வேண்டும்.  அவரின் மனைவி ஹீராபாய் மற்றும் மூன்று மகள்கள் கற்களை சுமப்பதில் அவருக்கு உதவியாக இருக்கின்றனர். "கடன் வருடந்தோறும் அதிகரிக்கிறது, நான் ஒரு  ரூபாயை கூட கையில் பெறுவது கிடையாது.  நான் என் கிராமத்திற்கு ஓடிவிட்டால், குவாரி உரிமையாளர் ஜீப்பிலோ, மோட்டார் சைக்கிளிலோ வந்து என்னை மீண்டும் அழைத்து வந்துவிடுவார்" என்கிறார் அவர்.
அரிய வகை கடப்பா (சேண்ட் ஸ்டோன்) கல் உடைக்கும் குவாரிகள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்ட எல்லையிலிருந்து ராஜ்புரா - தாபி என்பவற்றிற் கிடையில் 100 கி,மீ நீளத்திற்கு தொடர்ச்சியாக அமைந்துள்ளது.  பெரும்பாலான கற்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தில் கட்டிட பணிகளுக்கு பயன்படுகிறது.  கடந்த சில வருடங்களாக அவை சவுதி அரேபியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  கோட்டாவில் கற்கள் வாங்க வந்திருக்கும் பாடக்சிங் "குவாரியின் அளவிற்கேற்ப அவர்களின் ஆண்டிறுதி லாபம் என்பது ரூபாய் ஐந்து கோடி வரை இருக்கும் என்கிறார்".  இங்கே கிடைக்கும் இந்த அரிய வகை கற்கள் கையால் செதுக்கித்தான் உடைக்க வேண்டும், இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது என்கிறார் வடக்கு ராஜஸ்தானை சேர்ந்த கற்கள் வாங்கி, விற்கும் வியாபாரி ஓம் பிரகாஷ் அகர்வால்.
பாபுலால் கைர்வா குடும்பத்துடன் சேர்ந்து 5 தொழிலாளிகள் அந்த குவாரியில் உள்ளனர்.  மிகப் பெரிய குவாரி என்பது நேவாஜி குஜ்ஜார் என்பவருக்கு சொந்தமாக உள்ளது.  அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.  பெரும்பாலான தொழிலாளர்கள் மேற்சொன்னவாறு கடன் பெற்று அதை அடைக்கும் வகையில் கொத்தடிமைகளாகத்தான் உள்ளனர்.  நான் இங்கு என் குடும்பத்துடன் 9 வருடம் முன்பாக வந்தபோது ரூ 20000 முன்பணமாக பெற்றேன்.  அந்த வருட முடிவில் குவாரி உரிமையாளர் எனது கடன்  ரூ 24000 என கூறியதாக சொல்கிறார் ஜேட்கா சாஹேப்.  அவர் ஒவ்வொரு 2 - 3 வாரத்திற்கொரு முறை கூலி  ரூ 400 லிருநது 500 வழங்குவதாக சொல்கிறார்மத்தியப் பிரதேசம், ஜாபுனா மாவட்டத்திலிருந்து வரும் தொழிலாளி மங்கள்ராமா. 

பாலைவனமாய் போன கிராமம்

பாபுலால் கைர்வாவின் கிராமத்திலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள பாரன் மண்டலத்தில் கிஷ‌ன்கைஞ்ச் பகுதியில் கிராமமே பாலைவனம் போல் வெறுமையாக இருக்கிறது.  அங்கிருந்து 500ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு, நிலங்களை இழந்து தீபாவளி முடிந்து கோட்டாவிலுள்ள குவாரிகளுக்கு சென்று விட்டனர்.  அவர்கள் மே மாதம் தான் திரும்ப முடியும்.  அந்த கிராமத்திலுள்ள முதியவர்கள் அங்கிருந்த கைர் என்ற மரத்தின் காரணமாக அவர்கள் குடும்ப பெயர் கைர்வா என அமைந்ததாக கூறுகின்றனர்.  நாங்கள் அந்த மரங்களை வெட்டி உருப்படிகளாக செய்து விற்போம் என விவரிக்கிறார் கணேஷ் ராம் கைர்வா.
மாநில அரசு இந்த வகை பணிகளுக்காக கைர்வாக்களுக்கு கூட்டுறவு சங்கங்களை அமைத்தது.  ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காடுகள் அழிந்து வந்ததால், கூட்டுறவு சங்கங்களும் மூடப்பட்டன.  "தற்பேழ எல்லோரும் குவாரிகளுக்கு செல்கிறோம், எனது மகன் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து கடந்த சங்கராந்தியின் (ஜனவரி) போது ரூ 25000 கடன் என்ற நிலையில் இறந்து விட்டான்.  நான் அவனுக்கு பதிலாக பணியை தொடர இயலாத வண்ணம் வயோதிகனாக உள்ளேன் என அதன் உரிமையாளரிடம் கூறினேன்.  எனது இரண்டு மகன்களும் இந்த குவாரியில் பணிபுரிந்துள்ளனர்.  தேவராஜ், எனது இளைய மகன் அங்கு சென்றபோது அவனுக்கு வயது 18குவாரி முதலாளி எனது அந்த மகனை ஜீப்பில் திரும்ப அழைத்து வந்தார்.  தேவராஜ் அவரது முதுகில் இருந்தவன் இரத்தமாக வாந்தி எடுத்தான்.  உடனடியாக அவனை பாரூனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்" என்கிறார் ஜசோதாபாய்.
கிராமத்திலுள்ளவர்கள் பாரூன் மற்றும் கோட்டா மாவட்டத்தில் கட்டிடப் பணியில் நன்கு சம்பாதிக்கலாம், ஆனால் ஒரு முறை குவாரிக்கு சென்றவர், கடனை அடைப்பதற்காக தொடர்ந்து அங்குதான் செல்ல வேண்டியுள்ளது என்கின்றனர்.  எனது மகன் மான் சிங் குவாரியில் பல வருடம் வேலை பார்த்தான்.  கல் உடைக்கும் போது இரண்டு விரல்களை இழந்தான்.  அப்போது அவன் கணக்கில் ரூ 40000 கடன் இருந்தது.  அவன் கிராமத்திற்கு திரும்பியவுடன், துரத்திக் கொண்டே முதலாளி வந்தார்.  இரண்டு விரல்களை இழந்த நிலையில் அவனால் எப்படி பணிபுரிய முடியும் என நான் கெஞ்சியவுடன், போகட்டும் என விட்டுவிட்டனர் என்கிறார் கோர்லால்.
அரசின் அக்கறையற்ற நிலை
தெற்கு ஆசியாவிலேயே இந்தியாதான் முதன் முறையாக கொத்தடிமை முறையை, கொத்தடிமை தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் 1976ன் மூலம் நீக்க முடிவு செய்தது.  சந்தர்ப்பவசமாக அவசர நிலை பிரகடன காலமான 1975 - 1977 ல் சில அதிகாரிகள் அதற்கான விதிகளை இந்திராகாந்தியின் 20 அம்ச திட்டங்களுள் ஒன்றாக முன்னிறுத்தி விவசாய தொழிலாளர்களின் கொத்தடிமை முறையை முடிவிற்கு கொண்டு வந்தனர்.
எப்போதுமில்லாத வகையில் காந்தி சமாதான நிறுவனம் 1978ல் மேற்கொண்ட ஆய்வில் 10 மாநிலங்களில் 26 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனர் எனவும் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆதிவாசிகள் எனவும், 60 சதவீதம் பேர் தலித்துக்கள் எனவும் ஆய்வு புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.  அதே வருடம் தேசிய மாதிரி ஆய்வு மையம் மேற்கொண்ட 32 வது சுற்று ஆய்வில் அலுவலக ரீதியாக 16 மாநிலங்களில் 3.43 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனர் என குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு இது குறித்து தேசிய அளவிலான ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.  மாநிலங்கள் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு 2012ல் அளித்த ஆய்வறிக்கையில் 18 மாநிலங்கள் கொத்தடிமை தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தில் "இல்லை" என தெரிவித்திருப்பதான விபரத்தை தி இந்து நாளிதழ் வெளிக் கொணர்ந்துள்ளது.
ஒன்றுபட்ட நடவடிக்கைகளின் மூலம் தொழிலாளர்களுக்கு வருமான பாதுகாப்பு, உணவிற்கான  பாதுகாப்புகளை உறுதி செய்வதன் மூலம்தான் கொத்தடிமையை ஒழிக்க முடியும்.  அலகாபாத் மாநிலத்தில் குவாரிகளில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த கோல் பழங்குடியினர் ஒன்றுபட்ட நீண்ட கால போராட்ட நடவடிக்கைகளின்  மூலம் சுரங்க உரிமையை வென்றெடுத்தனர் என்கிறார் பொருளாதார நிபுணர் ரவி ஸ்ரீவத்சவா.  அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004ல் நிறுவிய முறைசாரா பிரிவுகளில் தொழில் நடத்துவோருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினரும் ஆவார்.  தற்போது பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களுக்கான குறைந்த பட்ச கூலியை கணக்கிட்டு அறியக் கூட சிரமப்படுகின்றனர்.  ஏனெனில் சட்ட ரீதியாக தேசிய அளவிலான குறைந்த பட்ச கூலி நிர்ணயம் என்பதற்கான தளம் இல்லை.  நாங்கள் அதற்கான அழுத்தமாக பரிந்துரைத்ததோடு- அவர்களின் சமூக பாதுகாப்பு- உழைப்புத்திறன், போன்றவற்றை விளக்கி அனைத்து தொழிலாளர்களுக்குமான பயிற்சி முகாம்களை நடத்துகிறோம் என்கிறார் அவர்.  ஒரு தொழிலாளிக்கு அனைத்து பிரிவுகளிலும் ஒரு நாளைக்கு ரூ 115 குறைந்த பட்ச கூலி என்ற தொழிலாளர் துறை அமைச்சகம் முன் மொழிந்தது 2009 லிருந்து தற்போது வரை நிலுவையிலுள்ளது. 
பின்ஜனா கிராமத்திலுள்ளவர் எங்களின் கடன் சுற்று என்பது அந்தந்த தொழிலாளியின் உயிர் பிரிதலோடுதான் முடியும் என்கின்றனர் வேதனையுடன்.  ஒருவர் இறந்து, அவர் குடும்பத்தில் அவரின் கடனிற்காக மாற்றாக பணிபுரிய ஒருவரும் இல்லை என்ற நிலை வரும் போதுதான் அவரின் கடனும் சாகும் என்கிறார் கோர்லால்.
இந்திய உச்ச நீதிமன்றம் கொத்தடிமை குறித்து என்ன சொல்லியிருக்கிறது?
1994 - மாநிலங்கள் உடனடியாக கொத்தடிமை தொழிலாளர்கள், அவர்களிடம் பணி வாங்கும் முதலாளிகள், ஒப்பந்தகாரர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும், காலாண்டிற்கொருமுறை உச்ச நீதிமன்ற சட்ட உதவி மையத்திற்கு அது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டுமெனவும் உத்திரவிட்டது.
1997 - கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு அமுல்படுத்துவதை கண்காணிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நியமிக்கப்பட்டது
2001 - தேசிய மனித உரிமை ஆணையம் திரு எஸ்.ஏ.சங்கரன் தலைமையில் நியமித்த நிபுணர் குழு மாநில அரசுகளை விமரிசித்து தனது அறிக்கையை அளித்தது.
2004 - மாநிலங்கள் அரையாண்டுக்கு ஒரு முறை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உத்திரவிடப்பட்டது.  மேலும், புலனாய்வு குழுக்கள் அமைக்கவும், தொழிலாளர்கள் புனரமைப்பிற்காக நிலம் சார்ந்து, குறிப்பிட்ட திறன் சார்ந்து, பணி சார்ந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் உத்திரவிட்டது
2010 - 2001 லிருந்து 2010 வரை கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு ஆய்வுகளுக்காக தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய 4.94 கோடி தொகை எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் கேட்கப்பட்டது.
2012 - மாநிலங்களில் புதிதாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வறிக்கைகள் கணணி மயப்படுத்தப்பட்ட ஆவண புள்ளி விபரங்களாக வைக்கப்படவேண்டும் எனவும் உத்திரவிட்டது

நன்றி / தி இந்து ---