Monday, August 9, 2010

உள்ளே… வெளியே…




தோளில் துண்டு
தொனியில் கோபம்
தகிக்கும் சூடு
தலைவரின் பேச்சு
தினமொரு ஆர்ப்பாட்டம்
தெருவெங்கும் விளம்பரம்

தொழிலாளர்கள் சிலரின்
விடுப்பை மறுத்த
மேலாளர் முன்சென்று

அவசர வேலை
இயலாமை சூழல்
ஈன்றவர் வயோதிகம்
உற்றார் இறப்பு
பெண்ணின் பேறுகாலம்
எதிர்பாரா இடர்பாடு -என
விடுப்பு எடுப்பது
தவிர்க்க இயலாது
விடுப்பை மறுத்து
சம்பளம் பிடித்தால்
போராட்டம் வெடிக்கும்
தலைவரின் வேகமான
முழக்கத்தின் முடிவில்

“பெரிய சங்கம்”
நமக்கேன் வம்பென
மறுத்த விடுப்பு மனுக்களில்
மேலாளர் ஒப்பமிட
தலைவர் வாழ்கவென
தொழிலாளர் வாழ்த்துடன்

இரவு உணவிற்கு
இல்லம் திரும்பிய தலைவர்
“முனியம்மா” வரவில்லை
முழுதினமும் கடும் வேலை
சமைக்கவோ நேரமில்லை
சாப்பாடு வாங்கிவா -என
சகதர்மினி உத்திரவிட

அடிக்கடி விடுப்பா
அவளின் சம்பளத்தைப்பிடி
வழிக்கு வருவாள் தானாக
கட்டளையாய் முழங்கிவிட்டு
கடைக்குத்தான் புறப்பட்டார்
தொழிற்சங்க தலைவரும்
தூக்குவாளி கையிலெடுத்து..

Sunday, August 8, 2010

மறுக்கப்படும் நீதி….




சமீபத்தில் ஆந்திரப் பிரதேச போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி பணிக்காலத்தில் இறந்துவிட்ட தொழிலாளரின் மனைவி வாரிசுப் பணி கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ள “அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை கேட்பதற்கு அவரது வாரிசிற்கு உரிமையில்லை” எனவும், இந்த விஷயத்தில் “இறந்த அரசு ஊழியர் குடும்பத்தினரின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்” எனவும் தெரிவித்திருப்பது தொழிலாள வர்க்கத்தினரிடையே அதிர்ச்சியையும் வேதனையும் தோற்றுவித்திருக்கிறது.

படிக்கவில்லை. இந்த தனித் தீர்ப்பையும் விமரிசிக்க இதை எழுதவில்லை. தொழிலாளர்கள் சார்ந்த வழக்குகள் பல்வேறு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் மாதந்தோறும் முடிவடைவதின் தீர்ப்புக்கள் தொகுப்பாக பிரதிமாதம் வெளியிடும் லேபர் லா ஜர்னல் என்பதை கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சந்தா செலுத்தி படித்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பாக நீதியரசர்கள் மேதகு வி.ஆர்.கிருஷ்ணய்யர், மேதகு ஓ.சின்னப்பரெட்டி, மேதகு ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் நீதிபரிபாலனம் செய்த காலங்களில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் சுமார் 50 தீர்ப்புகளில் 35 தொழிலாளர்களுக்கு சாதகமாகவும், 10 நிர்வாகங்களுக்கு சாதகமாகவும், 5 தள்ளுபடி என்ற வகையிலும் தீர்ப்புக்கள் இருந்து வந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக 60 தீர்ப்புகள் வெளியானால் அவற்றில் 40 நிர்வாகங்களுக்கு சாதகமாகவும், 10 தொழிலாளிக்கு பகுதி சாதகமாகவும், 5 தள்ளுபடி என்ற வகையிலும் 5 நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற வகையிலும் அமைகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களெல்லாம் திருத்தப்பட்டு விட்டனவா? அல்லது முதலாளி / நிர்வாகி அனைவரும் மிகச் சரியாக செயல்படத் துவங்கிவிட்டனரா என்கிற ஐயம் எழுகிறது. இது போன்ற வழக்குகளில் மனுதாரர்களின் சமூக அந்தஸ்து என்பதை நீதியரசர்கள் / அரசு வழக்கறிஞர்கள் தாம் அமர்ந்து செல்லும் காரின் குளிரூட்டப்பட்ட கண்ணாடி வழியாக பார்க்கின்றனரோ என அச்சப்பட வேண்டியுள்ளது. இன்றைய உலகமயமாக்கம், தனியார் மயமாக்க சூழலில் பல நீதித்துறை சார்ந்தவர்களும் பங்கு வர்த்தகம், தொழில் போன்றவற்றில் பங்குதாரர்களாக / பகுதி முதலாளிகளாக இருப்பதால் முதலாளி அந்தஸ்தில் இருந்து போராடும் தொழிலாள வர்க்கத்தினரை காணுகின்றனரோ என்கிற ஐயம் எழுகிறது.

கற்ற கல்வி, அனுபவத்தின் அடிப்படையில் நடு நிலைமை வகிக்க வேண்டிய நீதித்துறையில் யார் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் அந்த கட்சி சார்ந்து வழக்கறிஞர் பிரிவு. அவரின் சமூக பார்வை என்பது அவர் கட்சித்தலைவாpன் சொல்சாரிந்தே இருக்கும் என்பதால் நடுநிலைமை சிந்தனை எங்கிருந்து வரும். இவர்களே பின்னர் நீதியரசராகின்றனர்.

குறிப்பாக அரசு போக்குவரத்துப் பணியில் 24 மணி பணி நேர சுழற்சியில் அன்றாடம் பணிக்கு சென்றால் திரும்புவது நிச்சயமில்லை என்ற அபாயத்தில் பணிபுரியும் தொழிலாளி 20 வருட பணிக்குப் பிறகு இறந்து போகிறார் என்று கொண்டால், அவரின் பணிமுடிவிற்கு கிடைக்கும் பலன் தொகைகளை மட்டும் வைத்து அவருடைய குடும்ப வாழ்க்கை அந்தஸ்தை தீர்மானிக்கிறது நீதிமன்றங்கள். ஆனால் அந்த 20 ஆண்டு பணியில் அந்த பணியாளருக்கு குடும்பத்தினால் ஏற்பட்ட சமூக பொறுப்புக்கள் அதாவது குழந்தைகள் கல்வி, தாய், தந்தை குடும்பத்தினரின் மருத்துவ செலவினங்கள் போன்றவற்றிற்கு உறவினர்கள், நண்பர்களிடம் வாங்கிய கடன்களுக்கே பணியில் இறந்தால் கிடைக்கும் ரூ 1 லட்சம், பணிக்கொடையில் ஒன்றிரண்டு லட்சம், பணிக்கால கடன்கள் போக எஞ்சியிருக்கும் சொற்ப வருங்கால வைப்பு நிதி இருப்பு ஆகியவை அனைத்தும் சில நாட்களில் கரைந்து விடும். அதன்பின் குடும்பத்தலைவரை இழந்த அந்த குடும்பத்தின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என்பதை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் முழுமையாக எடுத்துரைப்பதில்லை.

வழக்கறிஞர்களில் சிலர் என்மீது கோபப்படக் கூடாது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் தனது ஆதங்கமாக தெரிவித்தது என்னவெனில், தற்போது புதிய வழக்கறிஞர்களில் பலர் முந்தைய தீர்ப்புக்கள், கடந்த கால வழக்குகள் ஆகியவற்றை படிப்பதில்லை. குறிப்பாக பணிநிலை (service matters) வழக்குகளில் நிறைய படிக்க வேண்டும். மாறாக மனுதாரர் ஒரு தாவாவுடன் வந்தால் அதை அப்படியே முதலாளி / நிர்வாகிக்கு ஒரு மனுவாக பதிவுத் தபாலில் அனுப்பிவிட்டு அந்த ஒப்புதல் கார்டுடன் ஒரு மாதம் கழித்து வரச்சொல்லி “மனுதாரர் மனு மீது எந்தவித பதிலுமில்லை - மனுவை பரிசீலனை செய்து இருவார காலத்தில் தீர்வளிக்க வேண்டும்” என்ற வகையில் நீதிமன்ற உத்திரவு கேட்டு மனுச்செய்து சில-பல ஆயிரங்களை கட்டணமாக பெற்றுக் கொண்டு சிரமப்படும் வாதங்களின்றி அத்தகைய மேலோட்டமான எளிய உத்திரவுகளை பெற்று விடுகின்றனர். நிர்வாகமும் குறிப்பிட்ட மனுவை பரிசீலனை செய்து இன்ன காரணங்களினால் கோரிக்கை ஏற்க இயலாது என பதிலுரை கொடுத்து நீதிமன்ற உத்திரவை மதித்து விடுகின்றனர். இத்தகைய சட்ட வழிகாட்டுதல்களினால் தீர்வின்றி தெருவில் நிற்பது தொழிலாளர் வர்க்கம் மட்டுமே.

நாடோடி மன்னன் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வசனம் ஓரிடத்தில் “நீ மாளிகையிலிருந்து குடிசையை பார்க்கிறாய் - நான் குடிசையிலுள்ளோருடன் இணைந்து நின்று மாளிகையைப் பார்க்கிறேன் - அதுதான் நமக்குள் வித்தியாசம்” என்றொரு வசனம் வரும். வாரிசுப் பணி, தலைமை தண்டனையான பணிநீக்கம் போன்ற வழக்குகளில் நீதித்துறை இன்னும் சற்று மனிதாபிமானத்துடன் பார்த்தால் நீதி மறுக்கப்படுவது குறையும்.

இந்த கட்டுரை நான் எழுதி கடந்த 19 ஏப்ரல் 2008ல் தினமணி நாளிதழ் நடுப்பக்க கட்டுரையில் பிரசுரமாகியது -நன்றி - தினமணி (இதில் ஒன்றிரண்டு வரிகளை நீக்கியிருந்தனர்/என்னிடம் தற்போது பழைய பேப்பர் இல்லாததால் அன்று எழுதியதை அப்படியே தற்போது இடுகைக்காக வெளியிட்டுள்ளேன்)

ஊடகங்களுக்குத் தேவை ஒழுக்கம்

எனக்கு வயதிற்கு வந்த ஒரு பெண் குழந்தையும், இன்னும் வயதிற்கு வராத ஒரு பெண் குழந்தையும் கல்லூரி மற்றும் பள்ளியில் படித்து வருகின்றனர். அடுத்த வீட்டிலுள்ள அவர்களது தோழி அல்லது தோழியின் தாயார் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வித்தியாசமான ஓவிய பயிற்சி, சிறிய குழந்தைகள் பாடுவது, மந்திர-தந்திர நிகழ்ச்சிகள் வரும் போது அவர்கள் வீட்டுவாசலிலிருந்து எட்டிப்பார்த்து என் குழந்தைகள் பெயர் சொல்லி தொலைக்காட்சி சானல் பெயர் சொல்லி உடன் பார்க்கச் சொல்வார்கள் உடனடியாக என் வீட்டிலுள்ளவர்களும் அதை பார்ப்பார்கள். இது ஏறக்குறைய அனைத்து இடத்திலும் சகஜமே.

இரண்டு தினங்களுக்கு முன்பாக என் பெண் குழந்தைகள் வீட்டின் முன்புறம் அமர்ந்து அவரவர் வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருக்கும் போது இரவு, பக்கத்து வீட்டு பெரியவர் என்னை அழைத்து சன் டி வி பார் என்றார். உடனே எனக்கு முன்பாக என் பெண்கள் எழுந்து என்னவென்ற ஆவலுடன் உள்ளே சென்று தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்து விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருக்கையில் தமிழக மின்வாரியத்தின் உபயத்தால் நல்ல வேளை மின்சாரம் தடை ஏற்பட்டது. அதற்குள் எனது அலுவலக நண்பரிடமிருந்து வீட்டு தொலைக்காட்சியில் நீலப்படம் ஓடுகிறது என ஒரு ஆன்மீக சொற்பொழிவாளரின் அந்தரங்கம் சந்தி சிரிப்பதை தெரிவித்தார். நான் மெழுகு திரி தேடுவது போல் உடனடியாக கேபிள் இணைப்பை துண்டித்து விட்டேன்.

இப்படி தப்பித்தார்கள் என்றோ, எத்தனை குடும்பத்தில் குழந்தைகளுடன் அமர்ந்து பார்த்து சானலை மாற்ற முடியாமல் தவித்தார்கள் என்றோ தொpயாது. பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்கள் நாட்டில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது அவசியமே. ஆனால் அதை எவ்விதம் கொண்டு செல்வது என்பதிலும் ஒரு நாகரிகம் கடைபிடிக்க வேண்டும் என்பதே இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் தனித்து பேசிக் கொள்ளும் போது கவலைப்படும் பொருளாக உள்ளது.

பலரும் ஆன்மீக சொற்பொழிவாளராக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றி, அவரது எழுத்துக்களை ஆராதித்து வரும் வேளையில் அவரது சற்று மோசமான அந்தரங்கம் வெளிப்பட்டதென்றால் அதை மக்கள் மத்தியில் கொண்டு போவதொன்றும் தவறான செயல் அல்ல, என்பதுடன் மக்களும் திடீரென ஒருவர் மீது மாயை கொண்டு ஏமாறக்கூடாது என்பதற்காக இத்தகைய செய்திகள் அவசியம்தான் என்றாலும், அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு நாகரிகம் கடை பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

இன்றைக்கு எந்த வாரப் பத்திரிகை எடுத்தாலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் நடிகைகளின், சில பிரமுகர்களின் அந்தரங்கம் என்ற பெயரில் பாலியல் வக்கிரங்கள் இல்லாமல் பத்திரிக்கை இல்லை என்ற அவலமான சூழல் ஏற்பட்டுள்ளது வருத்தமான ஒன்றாகும். அது மட்டுமல்லாமல் தொலைக் காட்சியின் அனைத்து விதமான சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல் எனப்படும் நாடகங்களிலும் தவறாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தர்மம் கண்டிப்பாக மீறப்பட்டு உறவின் ஒழுக்கேடு கண்டிப்பாக இடம் பெற்றால்தான் அந்த தொடர் மக்கள் மத்தியில் பேசப்படும் தொடர்ந்து பார்க்கப்படும் என்கிற நெறிமுறையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டதோ என அஞ்ச தோன்றுகிறது.

இந்த செய்திக்கு அடுத்த நாள் நகரப் பேருந்தில் காலை அலுவலகத்திற்கு சற்று முன்னதாக செல்வதற்காக பயணிக்கும் போது முன் இருக்கையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் கைபேசியில் படம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். எனது இறங்கும் இடம் வந்து எழுந்திருக்கையில் பார்த்தால் கும்பகோணம் குருக்கள் படம் ஓடிக்கொண்டிருந்தது. மாணவர்களின் நிலையை நினைத்து அழுவதா, வருந்துவதா என தெரியவில்லை.

பலமுறை மேற்குறித்த நித்தியானந்தா செய்தி ஓளிபரப்பானபின் நாட்டின் முதல்வர் அது ஒளிபரப்பிய விதத்தை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னதாக சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக காண்பிக்க முனைந்த நிருபர் கூட ஒரு மாணவர் மிக அதிகமான காயம் பட்டு ஒரு மரக்கிளையை பிடித்து எழ முடியாமல் திணறுவதை கூட மனிதாபிமானத்தில் அவரை காக்க முனைவதை விட படம் பிடிப்பதில் அதன் மூலம் தனது ஊடக நிறுவனத்தில் இன்சென்டிவ் பெறுவதை நோக்கமாக மாறிப்போனது கூட ஊடக செய்தி வெளியிடுதலில் மாறிப்போன மனித நேயத்தை சுட்டிக்காண்பித்தது நினைவிருக்கலாம்.

குழந்தைகளின் பாடும் திறனை போற்றும் வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் வெவ்வேறு பெயரில் எடுத்துக்கொண்டிருக்கிற நிகழ்வில் கூட கணவன், மனைவி, காதலன், காதலி ஊடலையும் நாசுக்காக சொன்ன அந்தக்கால பாடல்கள் இல்லாமல் பாடும் குழந்தையின் வயதிற்கு சற்றும் பொருத்தமில்லாத இந்தக்கால கொச்சைப்படுத்தப்பட்ட காதல் பாடலை குழந்தைகள் பாடுவதை பெற்றோர் அமர்ந்து ரசித்து மகிழந்து தாங்களும் தங்களின் குழந்தையும் தொலைக்காட்சியில் வந்ததை காலமெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்ற பெயரில் வக்கிரமும் ரசனையாகிப்போனதும் வருத்தமளிக்கிறது.

பேருந்து பயணத்தின் போது படிப்பதற்காக எந்த வாரப்பத்திரிகையை வாங்கினாலும் அதை நினைவாக பேருந்தின் இருக்கையிலேயே விட்டு விட்டு வந்து விட வேண்டும். ஏனெனில் குழந்தைகள் உள்ள வீட்டில் வந்து தவறியும் கூட பிரித்து பார்த்துவிட முடியாது என்ற நிலைதான் உள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னால் தினசரி பேப்பருடன் வாரப்பத்திரிகையை வாசலிலிருந்து பேப்பர் பையன் தூக்கி போட்டவுடன் பெரியவர் முதல் குழந்தைகள் வரை ஆவலுடன் எடுத்து படித்து விபரங்களை தெரிந்து கொள்ள ஆவல் மேலிட்ட நிலை மாறி இன்றைக்கு வாரப்பத்திரிகை வீட்டிற்கு கொண்டு வந்தால் வயதானவர்கள் வாங்கி வந்தவனை வசவு பாடும் நிலைக்கு மாறிவிட்டது.

பத்திரிக்கை சுதந்திரம் போற்றப்பட வேண்டும், ஊடகங்களுக்கு பாரபட்சமற்ற வகையில் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுதந்திரம் வேண்டும் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் உறவின் மேன்மையை, வாழ்கை நெறிகளை பண்பாடுடன் கலந்து சொல்வதில் பெயர் பெற்ற நற்றமிழ் நாட்டில் எதிர்கால சந்ததியினரை பாழ்படுத்தும், பண்பாட்டை சீர்குலைக்கும் சுதந்திரமாக இல்லாமல் ஒழுக்கத்துடன் கூடிய சுதந்திரமாக அது நெறிப்பட வேண்டும்.

(இது நித்தியானந்தா விவகாரம் சந்தி சிரித்த போது நான் எழுதி தினமணி மார்ச் 8ம் தேதி பேப்பரில் நடுப்பக்க கட்டுரையாக வெளிவந்தது. -நன்றி தினமணி)

Friday, August 6, 2010

மலிவாகிப் போன மனித உயிர்கள்



ஜுலை 19, 2010 அதிகாலை மேற்கு வங்க மாநிலம் சைந்தியா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது அதிவேகமாக வந்த உத்தர் பங்கா விரைவு ரயில் மோதியதில் 67 பேர் உயரிழந்ததுடன், நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ரயில்வே அமைச்சகத்தை குறைசொல்லி மம்தா பதவி விலக வேண்டுமென்ற அறிக்கையோடு எதிர் கட்சிகளின் பணி முடிந்துவிட்டது. ஆளும் காங்கிரஸ் அரசு தனது கூட்டணியில் ஒரு அங்கமான திரிணமுல் காங்கிரஸின் தலைவி ரயில்வே அமைச்சர் என்பதை மறந்து அவர் வேறு யார் கட்டுப்பாட்டிலோ இருப்பது போல் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க ரயில்வே அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிக்கை. இறுதியில் இறந்த ரயில் ஓட்டுனர்களின்மீதும் குற்றம் சுமத்தி ஒருவாறு அறிக்கைகள் முடிவிற்கு வந்துவிட்டது. இனி மேல் விசாரணைகள் நடைபெறும் இதன் விபரங்கள் வெளிச்சத்திற்கு வரும் முன் பலர் இந்த விபத்தை மறந்திருப்பார்கள்.

இது போன்ற விபத்துக்கள் நடைபெற்றவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பவர் கள் அத்துடன் அதை மறந்து விடுகிறோமா என்கிற ஐயம் எழுகிறது. டிசம்பர் 2000 லிருந்து இன்று வரை நடைபெற்ற 19 ரயில் விபத்துக்களில் 810 பேர் இறந்திருக்கிறார்கள் ஆயிரக் கணக்கானோர் காயமுற்றிருக்கின்றனர். மே 2009 லிருந்து இந்த 14 மாதங்களுக்குள் 12 ரயில் விபத்துக்கள் நடைபெற்றிருக்கிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

குறிப்பாக நோக்கினால் ஜன 5, 2002 செகந்திராபாத் மன்மாட் விரைவு ரயில் மகாராஷ்டிராவின் காட்நண்டுர் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எழுது பொருள் சரக்கு ரயிலின் மீது மோதி விபத்து. டிச 15, 2004ல் அஹமதாபாத் ஜம்முதாவி ரயில் பஞ்சாப் ஜலந்தர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உள்ளுர் ரயிலில் மோதி விபத்து. அக் 21, 2009 ல் உத்திரபிரதேசம் பஞ்சண்ணா ரயில் நிலையத்தில் கோவா விரைவு ரயிலும், மேவாரி விரைவு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து. ஜன 16, 2010ல் உத்திரபிரதேசத்தில் கலிந்தி விரைவு ரயிலும், சிராம் சக்தி விரைவு ரயிலும் மோதி விபத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்த ஒவ்வொரு விபத்தின் முடிவிலும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என ஆட்சியாளர்கள் அறிக்கை விட்டதுடன் தமது கடமை முடிந்ததாக எண்ணியிருப்பார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.

பெரிய உணவகங்களில் கை கழுவும் இடத்தில், டாய்லெட் டில் நீர் விரையம் ஆகாமல் இருப்பதற்காக மனிதர் முன் சென்று நின்றவுடன் தண்ணீர் வரத் துவங்குவதும், அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் தண்ணீர் வரத்து நிற்கும் விதத்திலும் ‘சென்சார்’ என சொல்லப்படும் முறை செயல் படுத்தும் அளவிற்கு அறிவியல் முன்னேறியிருக்கிறது. சாலையில் பேருந்து இரவில் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் முகப்பு விளக்குடன் ஒரு வாகனம் வருமானால் பேருந்தின் முகப்பு விளக்குகள் தானாக வெளிச்ச அலை குறைந்து, கூடும் (டிம், பிரைட்) கண்டுபிடிப்புகள் வந்துள்ளது. இந்த சூழலில் ரயில்களுக்கான ‘சமிஞ்கை” (சிக்னல்)களை முறைப்படுத்த அறிவியலில் மேம்பட்ட முறை புகுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

தவிர, மனித உயிர்களை மதிப்பிடுவதிலும் பாகுபாடு என்பது பரவலாக துவங்கியிருப்பதும் வேதனை அளிப்பதாக உள்ளது. சமீப மங்களுர் விமான விபத்தில் இறந்த ஒவ்வொரு வருக்கும் மாநில, மத்திய அரசு மற்றும் விமானத்துறை சேர்ந்து மொத்தம் 78 லட்சம் நஷ்டஈடாக அறிவித் திருக்கிறது. தற்போதைய ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு 3 லட்சம் நஷ்ட ஈடாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அனுதினமும் நடைபெறுகிற சாலை விபத்தில் பலரின் கவனத்தை கவர்கிற விபத்திற்கு மட்டும் 50 ஆயிரமும், 1 லட்சமும் நஷ்ட ஈடாக அறிவிக்கப்படுகிறது. இன்றைய விலைவாசி மற்றும் வாழ்க்கை முறையில் 1 முதல் 3 லட்சங்கள் என்பது சில நாட்களில் கரைந்து விடக்கூடிய ஒன்றே.

பங்கு மார்க்கெட் சரிவிற்கும், பன்னாட்டு வியாபாரத்திற்கும், டீசல் விலை உயர்விற்கும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து பேசுகிற அமைச்சரவைக் கூட்டம் உடனடியாக இது போன்ற பொது மக்கள் உயிரிழப்பு விஷயத்திற்கும் ஒரு துறை சார்ந்த பிரச்சனை அவர் ஆளும் கட்சியினராக இருந்தால் அவரை பாதுகாக்கும் விதத்தில் அறிக்கைகள் விடுவது, இதர கட்சி சார்ந்தவர் என்றால் குறை சொல்லி அறிக்கை விடுவது என்ற நிலை விடுத்து, அமர்ந்து பேசி பாதுகாப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து விரைவு முடிவெடுக்க வேண்டும். ஒரு துறையில் ஊழல் என்றாலோ, விபத்து போன்ற நடவடிக்கை என்றாலோ சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச் சொல்லிவிட்டால் போதும் அதனை தொடர்ந்த எந்த மேல் நடவடிக்கையும் வேண்டாம் என எண்ணும் அரசியல் வாதிகளின் போக்கு மாற வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பார்க்கிற போது உயிரிழப்பிற்கான இழப்பீடு வழங்குவதிலும் பாரபட்சம் என்பது கூடாது. முன்பதிவு ரத்தாகும் போது திருப்பியளிக்காமல் குவியும் நிதியிலிருந்தும், தக்கல் முறை பதிவிற்கு பணம் திருப்பியளிக்கும் நிலைகளே எழுவதில்லை என்ற அடிப்படையில் சேரும் நிதியிலிருந்தும் உடனடியாக பயணிகள் காப்பீடிற்காக ஒரு திட்டம் வகுத்து விபத்தில் உயிரிழந்தால் 10 லட்சத்திற்கு குறையாமல் நஷ்ட ஈடு வழங்கப் படவேண்டும்.
சாலை விபத்துக்களுக்கான நஷ்ட ஈட்டிற்கும் மாநில அரசுகள் ஒரு காப்பீடு திட்டத்தை வகுத்து அரசே செலவினை ஏற்று உடனுக்குடன் நஷ்ட ஈடு 10 லட்சத்திற்கு குறையாமல் வழங்கப்பட வேண்டும். மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும்.

(இந்த எனது கட்டுரை தினமணி சென்னை பதிப்பில் 2 ஆக 2010 அன்று கருத்துக்களம் என்ற பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது - நன்றி தினமணி)

ஊழலை பொறுக்கப் பழகு ?!


(கார்ட்டூன் - நன்றி - தினமணி)

அநீதியைக் கண்டால் கோபம் கொள்ள வேண்டுமென்பதற்காக ரெளத்திரம் பழகு என்றார் மகாகவி பாரதி. ஆனால் தொடர்ந்து சமீப வருடங்களாக வெளிவரும் ஊழலின் அளவைப் பார்க்கிற போது ஊழலைப் பொறுத்துக் கொள்ளப் பழகு என இந்திய மக்கள் பழகிக் கொண்டுவிட்டார்களோ என ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.சமீபத்திய செய்தி, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதுடில்லியில் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளில் 3000 கோடி ஊழல் என்பதாகும். 6 அரசுத் துறைகள் பொறுப்பேற்று 9 பொருட்கள் வாங்கியதில் இதுவரை கணக்கிற்கு வந்த ஊழல் ரூ 3000 கோடி என்கிறது கடந்த 3 தினங்களாக செய்தி ஊடகங்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் சுமார் 6000 லிருந்து 8000 விலையுள்ள குளிர்சாதனப் பெட்டி (ரெப்ரெஜிரேட்டர்) ரூ 42202 வீதம் வாங்கப்பட்டிருக்கிறது. ஒரு இருக்கை (சேர்) ரூ 1000 விலையுள்ளது ரூ 8000 வீதம் வாங்கப்பட்டிருக்கிறது. வீரர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான தானியங்கி ஓடுதள (டிரட்மில்) இயந்திரம் விலைக்கு வாங்கினாலே ரூ 66000 தான் ஆவதை 9.75 லட்சத்திற்கு 45 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள், இத்தகைய பட்டியலை படித்துக் கொண்டே போனால் நமக்கு தலை சுற்றுகிறது. கடந்த ஆண்டு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 60000 கோடி ஊழல் என்ற அலையடித்தது. பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் இருபதிற்கு இருபது போட்டிகள் தொடர்பான விளம்பர டெண்டர்களில், இதர நடவடிக்கைகளில் 20000 கோடி ஊழல் என்ற செய்திகள்.

தற்போது காமன் வெல்த் போட்டிகளுக்கு சாதனங்கள் வாங்கியதில், வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கார்கள் வாடகைக்கு எடுத்ததில் ஊழல் என்கிற விபரங்கள் வெளிவந்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் திரு மணிசங்கர் ஐயர், வறுமை அதிகமுள்ள இந்திய நாட்டில் இந்த அளவிற்கு மக்கள் பணத்தை செலவு செய்து போட்டிகள் நடத்த வேண்டுமா என்பது குறித்த தனது விமர்சன கருத்தை தெரிவித்தவுடன் காங்கிரஸ், பா.ஜ.க அவரது கருத்தை தேசவிரோதம் போல் சித்தரித்து எதிர்த்தன. திரு ஐயருக்கு இத்தகைய விமர்சனம் செய்வதற்கு தகுதியிருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு பதிலாக அவர் தெரிவித்ததில் தவறென்ன இருக்கிறது என சிந்திக்க வேண்டியிருக்கிறது. நமது எதிர்கட்சிககளோ ஒருவர் அளவிற்கு அதிகமாக ஊழல் செய்தால் அவரை பதவி விலக்கு என்பதைத்தான் உயர்ந்தபட்ச கோரிக்கையாக முன்வைக்கின்றனர். அதாவது அவர் சம்பாதித்தது போதும் அடுத்தவரை சம்பாதிக்க அந்த பதவியில் அமர்த்து என்பது அரசியல் சித்தாந்தம் போலும்.

அரசின் வெளிப்படை தன்மை, செயல்பாடு விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிக்கொணர யாரேனும் பொதுநல ஆர்வலர் விரும்பினால், ஆணையம் வரை முறையீடு செய்து தகவல் பெற 2 வருடம் ஆகிவிடுகிறது. அதற்குள் பல புதிய ஊழல்கள் வெளிவந்து, வெளிக்கொணர நினைக்கும் விஷ‌யம் பழையதாய் மறந்து போகிறது.கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன், அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்தார், பொது நிலங்களை வளைத்துப் போட்டுக் கொண்டார் என்கிற புயல் வீசி சில மாதங்கள் வாதப்பிரதிவாதங்களுக்கு பிறகு அவரை தற்போது சிக்கிம் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றியதன் மூலம் பிரச்சனை முடிவிற்கு வந்தது போல் மக்களை திருப்திப் படுத்த முனைகிறது அரசு.

முன்பெல்லாம் இது போன்ற ஊழல் செய்திகள் ஊடகங்கள் வாயிலாக தெரியவரும் போது நம் நாட்டினர் மட்டும் தெரிந்து வேதனைப்படுவது என்கிற நிலை மாறி இன்று இணையதளம் என்கிற உலகளாவிய தகவல் தொடர்பு மேம்பாட்டினால் ஒரு ஊழல் செய்தி வெளிவந்தால் சர்வ தேசத்திலும் சந்தி சிரிக்கும் நிலை வந்திருக்கிறது.இது போன்ற பிரச்சனைகள் வரும் போது மக்களால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பியிருக்கிற பிரதிநிதிகள் அவை குறித்து விவாதித்து இனி வரும் காலங்களில் அவை நேராமலிருக்க என்ன செய்ய வேண்டும், நேர்ந்த தவறை எப்படி சரி செய்ய வேண்டும் என பேசுவதற்கு பதிலாக கூச்சல், குழப்பம், அவை ஒத்திவைப்பு என்பதோடு நடவடிக்கைகள் முடிந்துவிடுகிறது. மக்களும் அடுத்த ஊழல் செய்தி வெளியானவுடன் முந்தைய செய்தியை மறந்து விடுகின்றனர். இப்படியே போனால் வெகுமதி வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட பழகிவிட்ட மக்களுக்கு ஊழலைப் பொறுக்கப்பழகு என்ற நியதி ஏற்பட்டுவிடுமோ என்கிற ஐயம் தான் மிஞ்சுகிறது.