Wednesday, March 13, 2013

வறட்சியிலும் சூடுபிடிக்கும் தண்ணீர் வியாபாரம்


"எப்போது தண்ணீர் பணமாய் கொட்டும்"

"ஒருபுறம் ஓட்டுக்கட்சி ஜனநாயகத்தில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஜனநாயகத்தை இயக்க வைக்கும் அடக்க விலை மட்டும் 50000 கோடி ரூபாய் என்கிறது ஒரு பார்வை (தினமணி / 5 மார்ச் /மக்களாட்சியின் அடக்கவிலை).  மறுபுறம் இத்தகைய ஆட்சியாளர்களின் முறையற்ற திட்டங்களால், தனியார் முதலாளிகள் வறுமையையும் காசாக்கி கொழுக்கின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டுகிறது இந்த கட்டுரை"

பரத்ரவுத் ஒவ்வொரு மாதமும் அவருக்கு தேவையான தண்ணீரை சேகரிப்பதற்காக பெட்ரோலுக்கு ரூ 800 செலவழிக்கிறார்.  மராத்வாடா மாநிலம், உஸட்மானாபாத் மாவட்டத்திலுள்ள டாக்விகி கிராமத்தில் இதே போல் பலர் செலவழிக்கிறார்கள்.  டாக்விகி மற்றும் இதர கிராமங்களில் ஒரு வீட்டிற்கு ஒருவர் வீதம் வெளியில் சென்று எங்கிருந்து தங்களால் தண்ணீர் சேகரித்து வரமுடியுமோ அங்கிருந்து எடுத்துவரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  உஸ்மானாபாத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்து விதமான வாகனங்களும் எங்கிருந்தாவது தண்ணீர் சேகரித்து வரும் பணியை மேற்கொண்டிருப்பதை பார்க்கலாம்.  அவை சைக்கிள்கள், இரு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள், ஜீப்கள், லாரிகள், வேன் மற்றும் டேங்கர்கள் ஆகும்.  பெண்கள் தலையில், இடுப்பில், தோள்களில் பானைகளை சுமந்து செல்வதை பார்க்க முடியும்.  கடுமையான வறட்சியிலிருந்து மீண்டு உயிர் வாழ்வதற்காக பெரும்பான்மை யானவர்கள் இந்த தண்ணீர் பிடிக்கும் பணியை செய்து வருகின்றனர். வேறு சிலரோ இதில் தெளிவாக லாபம் சம்பாதிக்கின்றனர்.

காலமும் தொலைவும்
 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயி பரத் கூறுகிறார், ஆம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் முழுநேரமாக தண்ணீர் எடுத்துவரும் பணியை மேற்கொள்கின்றனர்.  என்னுடைய குடும்பத்தில் நான் எனது சொந்த நிலத்திலுள்ள ஆழ்துளை கிணற்றில் சீரான இடைவெளியின்றி அவ்வப்போது கிடைக்கும் தண்ணீரை எடுத்து வருவேன் என்று கூறுவதோடு, அவர் வீட்டிற்கும் அந்த இடத்திற்கும் இடையே தொலைவு 3 கி.மீ.க்கு மேல் என்கிறார்.  எனவே 4 பிளாஸ்டிக் குடங்களை தனது ஹீரோ ஹோண்டா வாகனத்தில் வைத்து ஒரு முறைக்கு 60 லிட்டர வீதம் 4 நடை சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்.  "நான் அங்கு சென்று எங்கள் ஆழ்துளை குழாயில் கிடைக்கும் சொற்ப தண்ணீரை எடுத்து வருகிறேன், பயிர்களெல்லாம் நீரின்றி மடிகிறது" இந்த  கிராமத்தில் 25 ற்கும் மேற்பட்ட மோட்டார் இரு சக்கர வாகனங்கள் இதே பணியாக எந்நேரமும் சுற்றித் திரிவதை பார்க்கலாம் என்கிறார்.ஒவ்வொரு சுற்றும் ஏறக்குறைய 6 கி.மீ. என்பதால் பரத்தின் பணி என்பது தினமும் 20 கி.மீ. அல்லது மாதத்திற்கு 600 கி.மீ என்ற அளவில் முடிகிறது.  அதாவது 11 லிட்டர் பெட்ரோல்- ஏறக்குறைய 800 ரூபாய் இதற்காக மட்டும் செலவழிகிறது.  தண்ணீர் கிடைக்கும் நேரம் ஒவ்வொரு வாரமும் மாறிக் கொண்டிருக்கும் என்கிறார், அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிலையத்திற்கு சென்று வரும் அஜய் நிசூர்.  இந்த வாரம் மின்சாரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும், எனவே அந்த நேரத்தில் தண்ணீர் எடுத்து வருவோம்.  அடுத்த வாரம் நள்ளிரவிலிருந்து காலை 10 மணி வரை என மாறும் என்கிறார்.  அவர் தனது சைக்கிளில் 6, 7 குடங்களை கட்டிக் கொண்டு 2 - 3 கி.மீ. தொலைவிலான நடைகளை மேற் கொள்கிறார்.  அதனால் ஏற்படும் தோள்வலிக்காக இருமுறை உள்ளூர் மருத்துவ மனைக்கு சென்று வந்துள்ளார்.
நிலமில்லாமலிருக்கும் தொழிலாளர்கள் முதலாளிகளின் மூலம் சிரமத்தை சந்திக்கின்றனர்.  சில நேரம் மிகுந்த தாமதம் ஏற்படும், சில நேரம் (நீர்) ஒன்றுமே கிடைக்காமலும் திரும்ப நேரிடும் என்கிறார் ஜாம்பர்யாதவ்.  அந்த தாமதத்தால் வீட்டிலுள்ள கால்நடைகளுக்கு உணவளிப்பது தாமதப்பட்டு மோசமான நிலை ஏற்படும்.  இன்னும் 5 மாதங்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்கிறார் ஜாம்பர்.  ஏற்கனவே இந்த காலை நேரத்தில் தனது சைக்கிளில் 6 குடங்களை வைத்துக்கொண்டு இரண்டு நடைகள் முடித்துள்ளார் அவர்.
பெண்களை பாதிக்கும் சிரமம்
டாக்விகி கிராமத்தில் இரண்டு, மூன்று பானைகளை சுமந்து கொண்டு பெண்கள் நடந்தே பல முறை தண்ணீர் சுமக்கிறார்கள்.  அத்தகைய நீர் கிடைக்கும் இடத்திலிருந்து தண்ணீர் சுமந்து வர ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 மணி நேரம் அவர்கள் அந்த பணியை மேற்கொள்ள நேரிடுகிறது.  மேலும் அவர்கள் கூறும் போது ஒரே தண்ணீரையே மறு உபயோகப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.  முதலில் குளித்தபின், அதே தண்ணீரை கொண்டு துணிகளை துவைத்துவிட்டு, மீண்டும் அந்த நீரை பாத்திரங்கள் கழுவ பயன்படுத்துவோம் என்கின்றனர்.  ஆண்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுவரும் தூரத்தை விட அதிகமான தூரம் இங்குள்ள பெண்கள் நடந்து தண்ணீர் சுமக்கின்றனர்.  அவர்கள் ஏறக்குறைய 15- 20 கி.மீ. நடப்பதோடு, அதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர்.
புல்வந்திபாய் தாபே போன்ற பெண்கள் மிக மோசமாக பாதிக்கப் படுகின்றனர்.  அவர் ஒரு தலித் இனத்தவர் என்பதால் பெரும்பாலான தண்ணீர் கிடைக்கும் இடங்களில் அவர் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்.  அரசாங்கத்தால் வெட்டப்பட்டுள்ள கிணறுகளில் கூட நான் வரிசையில் கடைசியாகத்தான் நின்று தண்ணீர் எடுக்க முடியும் என்கிறார் அவர்.


கரும்பு விவசாயமும் மழையும்
பற்றாக்குறை என்பது வாழ்நிலையையும் பாதிக்கிறது.  தண்ணீர் பற்றாக்குறையால் என்னைப் போன்று ஒன்றிரண்டு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்வதும் சிரமமாகிவிடுகிறது.  என்னைப் போலவே எனது மாடுகளும் சிரமப்படுகின்றன.  நான் ஒரு நாளைக்கு பால் வியாபாரத்தின் மூலம் ரூ 300 சம்பாதிக்கிறேன் என்கிறார் சுரேஷ்வேட்பதக்.  தற்போது பெற்று வந்த பால் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்கிறார் அவர்.
உஸ்மானாபாத்தில் உள்ள டாக்விகி கிராம மக்கள் பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.  இங்கு 4000 ற்கும் குறைவான மக்கள் உள்ளனர்.  பாசனத்திற்கு 1500 க்கும் குறைவான ஆழ்துளை கிணறுகள் உள்ளது. தற்போது 550 அடிக்கும் கீழே துளையிட வேண்டியுள்ளது என்கிறார் பரத் ரவுத்.  இந்த வறட்சி பாதித்த பகுதியின் முக்கிய பயிர் கரும்பு ஆகும்.  எங்களது தேவையான சாதாரண மழை அளவு என்பது 767 மி.மீ. என்ற நிலையில் கடந்த பருவத்தில் 397 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது என்கிறார் உஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர் கே.எம்.நாகர்கோஜே.  800 மிமீ மழை என்பது மோசம் என கூற முடியாது, ஏனெனில் பல பகுதிகள் 400 மிமீ மழைதான் பெற்றுள்ளது என்கிறார் அவர் மேலும் கூறுகையில்.
800 மிமீ மழை பெய்தால் கூட 2.6 மெட்ரிக் டன் கரும்பு உற்பத்திக்கு அது போதாது.  ஒரு பயிரிடலுக்கு ஒரு ஏக்கருக்கு 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை (அதாவது ஒலிம்பிக் பந்தயங்களில் பயன்படுவது போன்ற    7 1/2 நீச்சல் குளங்களுக்கு சமமானது) டாக்விகி கிராமத்தில் சொட்டு நீர் பாசன முறையால் தண்ணீரை சேமிப்பவர்கள் மிகச் சிலரே.
மாவட்ட ஆட்சியர் நாகர்கோஜே மிக சிக்கலான பிரச்சனையை கையில் வைத்துள்ளார்.  நிலத்தடி நீர்  அரசுத் துறையில் உள்ள புள்ளி விபரங்களின்படி மிகக் குறைவாகவே உள்ளது.  அந்த மாவட்டத்தின் பெரிய, சிறிய நீர் திட்டங்கள் அனைத்திலும் தண்ணீர் இருப்பு ஏறக்குறைய "இல்லை" என்ற நிலைக்கு வந்து விட்டது.  மோட்டார் போன்ற சாதனங்களால் மேலே கொணர இயலாத சொற்ப அளவு என்பது சில மீன்களை உயிர்வாழ வைக்க மட்டுமே பயன்படும் விதமாக உள்ளது.  அந்த மாவட்டத்தின் சிறிய திட்டங்களின் மூலம் 3.45 மில்லியன் மெட்ரிக் சுற்று அடி அளவு மட்டுமே கையிருப்பு உள்ள நீரைக் கொண்டு சில நாட்கள் 1.7 மில்லியன் மக்களுக்கு வழங்க இயலும்.  அந்த மாவட்டத்தில்  தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் பாசனத்திற்கு நீர் வழங்குவதென்பது மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  இந்த மாவட்டத்தில் ஜனவரி நிலவரப்படி நிலத்தடி நீர் அளவு 10.75 மீட்டர்.  கடந்த 5 ஆண்டு சராசரியைவிட 5 மீட்டர் குறைவு.  சில பகுதிகளில் அதற்கும் குறைவாகவே உள்ளது.  இருப்பினும் அவர் இந்த ஆண்டு இந்த இருப்பை வைத்துக் கொண்டு நிலைமையை சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்.  இருப்பினும் தற்போதுள்ள பயிர் விளைச்சலை பார்க்கிற போது அடுத்த வருடம் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.
தனியாரின் வணிக ஆட்சி
டாக்விகியில் வருவாய் குறைந்து வருவதால் கடனாளிகள் அதிகரித்து வருகின்றனர்.  இங்கு ரூ 100 க்கு ஒரு மாதத்திற்கு ரூ 5 முதல் 10 வரை கந்து வட்டிக்காரர்களால் வட்டி வசூலிக்கப்படுகிறது என்கிறார் சந்தோஷ்யாதவ்.  அதாவது வருடத்திற்கு 60 முதல் 120 சதவீதம் வரை.  யாதவின் குடும்பத்தினர் மட்டும் ஆழ்துளை குழாய் பதிப்பில் ஏறக்குறைய ரூ 10 லட்சம் வரை செலவழித்துள்ளார்.  இருப்பினும் அவையாவும் வறண்டுவிட்டன.  வெயில் காலம் வெகு தொலைவில் இல்லை.  ஆனால் யார் அதைப்பற்றி எண்ணுகிறார்கள், அன்றாடம் கழிந்தால் போதும் என உழல்கின்றனர் என்கிறார் யாதவ்.
ஆனால் ஒருபுறம் வறட்சியை எதிர்த்து பலர் போராடி வருகையில், மறுபுறம் பற்றாக்குறையை பயன்படுத்தி தண்ணீர் வியாபாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.  இது எங்கு பார்த்தாலும் வெளிப்படையாக தெரியும்.  சமூக பணியாளர் பாரதி தாவாலே கூறுகையில் நாள் முழுவதும் நாங்கள் கைபேசி மூலம் எங்கிருந்து தண்ணீர் வாங்கலாம் என்பதற்காக பேசிக் கொண்டிருப்போம் என்கிறார்.  அது போல் ரூ 120 க்கு 500 லிட்டர் தண்ணீர் என்று ஒருவரிடம் விலை பேசியிருந்தேன்.  ஆனால் அவர் வரும் வழியிலேயே மற்றொருவருக்கு அதே அளவை ரூ 200 க்கு விற்றுவிட்டார்.  நான் பல முறை கேட்ட பிறகு முதல்நாள் தேவைக்கு கேட்டதை மறுநாள் இரவு 9 மணிக்கு கொண்டுவந்து கொடுத்தார்.  அதன்பிறகு நான் அருகில் இருப்பவரிடமே வாங்க துவங்கிவிட்டேன் என்கிறார்.
அந்த மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் விறுவிறுப்பாக தண்ணீர் வியாபாரம் நடைபெற்று வருகிறது.  பற்றாக்குறை அதிகரித்திருக்கும் போது விலை ஏறுகிறது.  அரசு 720 ஆழ்துளை கிணறுகளை குத்தகைக்கு எடுத்து அதன் உரிமையாளர்களுக்கு பிரதிமாதம்  ரூ 12000 வீதம் அளிக்கிறது.  அங்கு பொது மக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்க வேண்டும்.  ஆனால் நெடுந்தொலைவு, மற்றும் கூட்டம் அதிகமிருப்பதால் அங்கு தண்ணீர் பெறுவது சிரமமான ஒன்றாகிவிடுகிறது.  அங்கு தண்ணீர் தனியார் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது.  அவர்களிடம் பேரம் பேசி 500 லிட்டர் ரூ 200 கொடுத்து வாங்க வேண்டியதாகிறது.  நீங்கள் குறைவாக வாங்கினால் விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும்.  வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும்.  ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒருவர் ஆழ்துளை கிணறை வைத்துக் கொண்டு பற்றாக்குறையை பயன்படுத்தி பால் வியாபாரம் போல் தண்ணீர் வியாபாரம் செய்து வருகின்றனர்.  இங்கு தண்ணீர் பணமாக கொட்டுகிறது.

நன்றி - தி இந்து - தமிழில் - எஸ்.சம்பத்

No comments: