Wednesday, January 8, 2014

இந்தப் பிரசுரம் காலத்தின் கட்டாயம்..

           விகடன் குழுமத்தில் பணியாற்றும் திரு திருமாவேலன் ஜூனியர் விகடனில் இலங்கைப் பிரச்சனையில் சிபிஎம் -ன் நிலை தடுமாற்றத்தை விளக்கி தொடர் கட்டுரைகள் எழுதினார்அவைகளை தொகுத்து சில மாதங்களுக்கு முன்பாக "நீங்கள் எந்தப் பக்கம் - மார்க்சிஸ்டுகள் சிந்தனைக்கு" என புத்தகமாக விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளதுஅதை சமீபத்தில் படிக்க நேர்ந்ததுஅந்த புத்தகத்திற்கு அணிந்துரை ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சந்துரு அவர்கள் அற்புதமாக எழுதியுள்ளார்அந்த அணிந்துரையை படிப்பவர்கள் நிச்சயமாக புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைப்பார்கள்


இலங்கைப் பிரச்சினையில் மட்டுமல்ல  கூடங்குளம், முல்லைப் பெரியாறு, கஸ்தூரி ரெங்கன் அறிக்கை என்று பல விஷயங்களில் அவர்கள் தமிழர்களுக்கு பதில்சொல்ல வேண்டி இருக்கிறது.. நிச்சயம் எனக்கு மார்க்சிஸ்ட்டுகள் மீது வன்மமெதுவும் இல்லை.. ஆதங்கம்தான்.. நாம் குறிப்பிட்ட எல்லாபிரச்சினைகளிலும் தவறான வழிநடத்துதல் காரணமாக அவர்கள் எதிராகவே நிற்பதைத்தான் நாம் கண்டிக்கிறோம். எதிர்க்கிறோம்..  அம்பலப் படுத்துகிறோம்என்ற அடிப்படையில் திரு சந்துரு அவர்களின் அணிந்துரையை மட்டும் எனது வலைப்பதிவில், முகநூலில் பதிவு செய்வதற்கு திரு .திருமாவேலன் அவர்களை தொடர்பு கொண்டேன்அவரும் அனுமதி நல்கினார், அவருக்கு நன்றியுடன், பதிவு கீழே...

இந்தப் பிரசுரம் காலத்தின் கட்டாயம்..

திருமாவேலன் இன்று தமிழகத்திலேயே மிக முக்கியமான அரசியல் நோக்கர்அவரது அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தமிழக அரசியல் தலைவர்களே இல்லை எனலாம்அவர், ஈழப் பிரச்சனை தொடர்பான விஷயத்தை "மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு" என்று தலைப்பிட்டு எழுதிய தொடர் கட்டுரையைப் பிரசுரமாகக் கொண்டு வர இருப்பதாகவும், அதற்கு நான் முன்னுரை எழுத வேண்டும் என்றும் திடீரென்று ஒரு நாள் தொலைபேசியில் கேட்டபோது அதை எனக்கு அளித்த கெளரவமாகவே கருதுகிறேன்.
ஈழப்பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் முரண்பட்டு அதிகாரபூர்வமாக முதலில் வெளியேற்றபபட்ட அந்தஸ்து உடையவன் என்பதால் அவர் கேட்டாரோ என்று எனக்குத் தெரியாதுஅவரது கட்டுரைத் தொடர் பரவலாக தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் தோழர்களின் பார்வைக்குப் போக வேண்டும் என்று கருதிய பலரில் நானும் ஒருவன்.
          அவரது கட்டுரைக்கு எதிர்வினையாக தோழர் .வாசுகி எழுதியதை அதே அளவு அங்கீகாரம் கொடுத்துப் பிரசுரித்தது விகடனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. "ஆயிரம் பூக்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் மோதட்டும்" என்று கூறிய மாசேதுங்கின் பொன்மொழிக்கு உதாரணம் அந்தச் செயல்.

      உ.வாசுகியாகட்டும், அல்லது தினமணியில் நடுப்பக்க கட்டுரை எழுதிய தோழர் டி.கே.ரங்கராஜனாகட்டும் இருவருமே ஒரு விஷயத்தில் இசைந்த கருத்தை கூறியுள்ளனர். மார்க்சிய தத்துவத்தை இயந்திர கதியில் புரிந்து கொள்ளக் கூடாது, ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்பவே அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றுமற்றும் எந்தத் தேசியக் குழுவும் பிரிந்து போகும் உரிமையையோ அதை விளக்கிய தோழர் லெனினின் தேசிய இனங்களைப் பற்றிய கொள்கையையோ அவர்கள் ஏற்கத் தயாரில்லைஇந்த விதமாக உண்மையை ஒப்புக்கொண்ட அவர்களுக்கு நாம் முதலில் நன்றியைச் செலுத்த வேண்டும்திருமாவேலனுக்கும் வாசுகிக்கும் நடந்த ஈழத் தமிழர் பற்றிய கட்டுரை சிங்கிள்சில் அட்வான்டேஜ் திருமாவேலனுக்கே.
         சிபிஐ(எம்) கட்சியின் அகில இந்திய மாநாடு (காங்கிரஸ் என்று அவர்களால் அழைக்கப்படுகிறது) கொல்கத்தாவில் 1985 டிசம்பர் 25 முதல் 30 வரை நடைபெற்றதுநாடு முழுவதும் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் விவாதிக்க கட்சியின் மத்தியக் குழு (Central Committee) வரைவு அரசியல் அறிக்கை (draft political report) ஒன்றை தயார் செய்ததுஅதில் சர்வதேச பிரச்சனைகளில் தொடங்கி ஸ்தலப் பிரச்சனைகள் வரை கட்சியினர் நிலை என்ன என்பது பற்றி விவாதிக்க கருப்பொருட்கள் இருந்தன.
         அந்த வரைவு அறிக்கை புதுடெல்லியில் 1987 அக்டோபர் 1 முதல் 4 வரை நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதுஅந்தக் கூட்டத்தில் கட்சியின் தமிழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு தயாரான அந்த வரைவு அறிக்கை, கட்சித் தோழர்களுக்கு அனுப்பப்பட்டது. மேலும், கட்சியின் அதிகாரபூர்வமான வார இதழ் பீப்பிள்ஸ் டெமாக்ரசி 20/10/1985 தேதியிட்ட இதழுடன் பின் இணைப்பாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.  இதை எல்லா மட்டங்களிலும் விவாதித்து உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்து மாநாட்டில் பங்கு பெறும் பிரதிநிதிகள் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
         மத்தியக் குழுக் கூட்டம் புதுடில்லியில் நடைபெற்ற ஒரு வாரத்துக்கு முன்பு (சரியாக 24/09/1985 அன்று) தமிழகத்தில் சிபிஐ(எம்) உள்ளிட்ட அனைத்துக் கட்சி பந்த் நடைபெற்றது.  அன்று தமிழகத்தை ஆண்ட அ.இ.அ.தி.மு.க அதில் கலந்து கொள்ளவில்லை.  கட்சியின் அணிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் தமிழ் மாநிலக் குழு அறிக்கை விட்டது.
ஸ்ரீலங்காவில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைகளையும், வன்முறைகளையும் கண்டித்து நடைபெற்ற பந்த் போராட்டம் தமிழகம் தழுவிய போராட்டம்.  அதில் சிபிஐ (எம்) கட்சியும் பங்கெடுத்தது.  அதுவும் ஒரு வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான போராட்டம்.  தமிழகத்திலுள்ள முக்கிய சிபிஐ(எம்) தலைவர்கள் அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.  சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஏ.நல்லசிவன், கே.ரமணி எம்.எல்.ஏ., என்.சங்கரையா, வி.வரதராஜன், அப்துல் வஹாப் மற்றும் கே.முத்தையா ஆகியோர் தலைமை வகித்தனர்.  அவர்களில் முக்கால் வாசிப் பேர் அன்றைய மத்தியக் குழு உறுப்பினர்கள்.
             இந்த போராட்டத்தில் பங்கு பெற்ற பின் மத்தியக் குழுவுக்குச் சென்றனர்.  அப்போது வரைவு அரசியல் அறிக்கை அகில இந்திய காங்கிரஸூக்குத் தயாராகிறது.  அதில் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலைப் பற்றி ஒரு வரிகூடக் கிடையாது.  அதற்குப் பதிலாக ஸ்ரீலங்காவில் தேசிய வெறியைத் தூண்டிவிட மட்டுமே, அமெரிக்கா இன மோதல்களைப் பயன்படுத்துகிறது எதை குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
          ஆசியாவில் அமெரிக்காவின் முயற்சிகள், என்ற தலைப்பில் ஒரு குறிப்பு.  அதில் ஒன்பது வரிகளில் இந்தியத் துணைக் கண்டத்தில் அமெரிக்க ஏகாதியபத்தியத்தின் தந்திர முயற்சிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  அதிலும் ஸ்ரீலங்காவின் நிலை பற்றி ஒன்றே அரைக்கால் வரிதான் உள்ளது.  அரசியல் அறிக்கையில் இது பற்றிக் கூறப்பட்டதை மொழிபெயர்த்துக் கூற வேண்டும்.
           "இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள, தனக்குக் கீழ்படியக்கூடிய பிற்போக்கு அரசுகளின் வளையத்தின் உதவியுடன் இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சதியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. பாக்கிஸ்தானின் ஆக்கிரமிப்புக்கு நவீன ஆயுதங்களை வழங்குகிறது.  ஸ்ரீலங்காவிலுள்ள இன மோதல்களைப் பயன்படுத்திக் கொண்டு இனவெறியைத் தூண்டிவிட முயற்சிக்கிறது (இந்தியாவை துண்டாட வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில்) உள்நாட்டு சீர்குலைவு சக்திகளையும், பிரிவினை வாத கும்பல்களையும் பகிரங்கமாக ஆதரிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம் பாக்கிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள விரோத முகாம்களை வைத்து இந்தியாவையும், இந்து மகாக் கடவுளையும் வளைக்கப்பார்க்கிறது"
           ஏன் இப்படிப்பட்ட காமாலைப் பார்வைமாநிலத்திலோ மிகப் பெரும் பிரச்சனை.  ஆனால், அகில இந்திய அளவில் ஒரு கொசுக்கடி அளவுக்குக் கூட இந்த பிரச்சனை கையாளப்படவில்லை.  தமிழகத்தலைமை இது பற்றிப் பேசவில்லையா? அல்லது அவர்கள் என்ன பேசினாலும் அகில இந்திய தலைமை அரசியல் பார்வைக்கு அதில் உடன்பாடில்லையா?
        இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலைகளை என்றைக்குமே தமிழ்நாட்டு சிபிஐ(எம்) தலைவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.  கொல்கத்தா அகில இந்திய காங்கிரஸுக்குப் பிறகு ஸ்ரீலங்காவில் தமிழ் மக்கள் நிலை இன்னும் மோசமடைந்து கொண்டேதான் இருந்தது.  வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் கற்காலத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  மின்சாரம் இன்றி இருளில் தள்ளப்பட்ட அவர்களுக்கு உணவுப் பெபாருட்கள், டீசல் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் செல்லும் வழிகள் முற்றிலும் அடைக்கப்பட்டன.  தன்னுடைய தேசத்திலேயே ஒரு பகுதியை முற்றுகையிட்டுப் போர் புரிந்த நாடு உலகிலேயே ஸ்ரீலங்கா மட்டும்தான் இருக்க முடியும்.
          அந்த மக்களின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார முற்றுகையை எதிர்த்து உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  தமிழகம் எங்கும் வரலாறு காணாத ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், மாபெரும் மனித சங்கிலிகள் முளைத்தன.
        இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறோம் என்று கூறி சிங்கள அரசின் அதிபர் ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சிக்குப் பலியாகி இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.  29/07/1986 அன்று இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒப்பந்தம் (Indo Srilankan Treaty) செய்து கொண்டன.  பாதிக்கப்பட்ட மக்களின், கட்சிகளின் ஒப்புதல் இன்றியே அந்த ஒப்பந்தம் தமிழ் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கப்பட்டது.  விடுதலைப்புலிகளைத்தவிர பல ஜனநாயக சக்திகள் அந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு அளிக்காது என்று எதிர்த்தனர்.  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதோடு அல்லாமல் அன்றைய ராஜிவ் காந்தி அரசு ஸ்ரீலங்காவின் 'அமைதி' காக்க இந்திய ராணுவத்தை IPKF  என்ற பெயரில் அனுப்பியது.  தன்னால் சாதிக்க முடியாததை சிங்கள அரசு, இந்திய அரசின் ராணுவ பலத்தால் சாதிக்க முயன்றது. IPKF நடத்திய கொடுமைகளைக் கண்ட இந்திய மக்கள் கொதித்து எழுந்தனர்.  யாழ்ப்பாணத்தில் சிங்கள முற்றுகையைத் தகர்க்க யாரெல்லாம் இந்திய ராணுவத்தை அனுப்பு என்ற கோரிக்கையை வைத்தார்களோ அவர்களே IPKF ஐ வாபஸ் வாங்கு என்று கூறும்படியாகிவிட்டது.  பக்கத்திலுள்ளவன் கையை எடுத்து அடுத்தவன் கண்ணைக் குத்து என்னும் வகையில் ஜெயவர்த்தனாவின் நரித்தந்திரம் செயல்பட்டது.
           இதையெல்லாம் பார்த்து எந்த நடவடிக்கையும் எடுக்காத சிபிஐ (எம்) தலைமையின் மீது அதன் தமிழக ஆதரவாளர்களுக்கு வெறுப்பு எழுந்தது.  பல மட்டங்களில் இது பற்றி வெளிப்படையாகவே விவாதிக்க முயன்றனர்.
        சிபிஐ(எம்) தலைமையிலான மேற்கு வங்க அரசின் நிதியமைச்சராக இருந்த அசோக் மித்ரா புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்.  அவர் மார்க்சிய தத்துவத்தை நம்பினாலும், மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவில்லை.  மேற்கு வங்கத்தில் பதவியில் இல்லாத போதும் அவர் சிபிஐ(எம்) தலைமையிலான கேரள அரசுக்குப் பொருளாதார ஆலோசகராக இருந்தார்.
           அவர், இலங்கைப் பிரச்சனைகள் பற்றி கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் 'டெலிகிராப்' ஆங்கில நாளிதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.  இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கடுமையாகச் சாடினார்.  அவரது கட்டுரைகளில் தெரிவித்த கருத்துக்களுக்கு சிபிஐ(எம்) தலைமை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு தமிழக சிபிஐ(எம்) கட்சி வழக்கறிஞர்கள் சும்மா இருக்கத் தயாரில்லை.  ஆகவே, கட்சி வழக்கறிஞர்கள் இலங்கைப் பிரச்சனையில் சிபிஐ(எம்) கட்சியின் அணுகுமுறை பற்றி அதிருப்தி தெரிவித்தனர்.  தேசியப் பிரச்சனையில் அவர்களது நிலைமையையும், இலங்கைப் பிரச்சனையில் அவர்கள் காட்டும் மக்கள் விரோதப் போக்கையும் கண்டித்து ஒரு நீண்ட குறிப்பை மத்திய குழுவுக்கு அனுப்பினர்.
          21/11/1987ல் ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் பாரிமுனையிலிருந்து சைதாப்பேட்டை வரை அறிஞர்கள், கலைஞர்கள் நடத்திய மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.  மனித உரிமைக்கு தினமும் நீதிமன்றத்தில் குரல் கொடுக்கும் கட்சி வழக்கறிஞர்களும் அந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டோம்.  செய்தித்தாள்களில் வெளிவந்த எனது பெயரைப் பார்த்த கட்சித் தலைமை அந்தச் செயல் பற்றி என்னிடம் விளக்கம் கேட்டது.  மனிதாபிமானம் மார்க்சிசத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்று நான் கூறினேன்.
          தமிழகத்திலுள்ள அறிவுஜீவிகளுக்கு, குறிப்பாக சிபிஐ(எம்)-க்கு ஆதரவான அறிவுஜீவிகளுக்கு இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளையும், இந்திய இலங்கை துரோக ஒப்பந்தத்தையும் விளக்க முற்பட்டேன்.  இலங்கையில் அன்றைய நிலை பற்றிப் பேச நானும், பேராசிரியர் மோசஸ் அவர்களும், "அக்கறையுள்ள குடி மக்கள் சங்கம்" என்ற பெயரில் சேத்துப்பட்டு, உலகப் பல்கலைக்கழக சேவை மைய அரங்கில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.  அந்தப் பொதுக் கூட்டத்தில் பேச சிபிஐ(எம்) கட்சியினர் பெருமதிப்பு வைத்திருந்த பொருளாதார நிபுணரும், தொடர்ந்து தனது கருத்தை ஊடகங்களில் பதிவு செய்தவருமான அசோக் மித்ராவை அழைத்தேன்.  அவர் எனது நல்ல நண்பரும் கூட.  அவரும் கூட்டத்தில் பேச இசைந்தார்.
           திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வழியாக அவர் கொல்கத்தா செல்லும் முன் கூட்டத்தில் பேச இசைந்தார்.  கூட்டத்துக்கான அழைப்பிதழ்கள் கிடைத்தவுடன் சிபிஐ(எம்) தலைமை அதிர்ந்தது.  இப்படி ஒரு கூட்டம் நடைபெற்றால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் பரவ நேரிடும் என்று அந்தக் கூட்டம் நடக்காமல் இருக்க முயற்சி செய்தனர்.  அதனால் அப்போது கேரள முதலமைச்சர் ஈ.கே.நாயனார் அவர்களைத் தொடர்பு கொண்டு திருவனந்தபுரத்திலிருந்த அசோக் மித்ராவை கூட்டத்தில் கலந்து கொள்ளாதிருக்கும்படி செய்துவிட்டனர்.  கடைசி நேரத்தில் தொலை பேசியில் என்னை அழைத்த அசோக் மித்ரா அடுத்த முறை வரும்போது கூட்டத்தில் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.
          திடீரென்று முக்கிய பேச்சாளர் வராததால் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அறிவாலையத்தில் சந்தித்து வை.கோ-வை கூட்டத்திற்கு அனுப்பித் தருமாறு கேட்டோம்.  அவர், தமிழர் பிரச்சனைக்கு வங்கத் தலைவரை அழைத்து ஏமாந்து விட்டீர்கள், தமிழனைத் தமிழன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தனக்கே உரித்தான பாணியில் கேலி செய்தார்.  ஆனால் கடைசி வரை வை.கோ-வை அனுப்ப மறுத்துவிட்டார்.  ஆக தமிழினத் தலைவரும் தமிழர் பிரச்சனையில் கைவிரித்ததுதான் மிச்சம்.
              22/11/1987 அன்று சிபிஐ(எம்) தலைமையின் திட்டத்துக்கு எதிரான கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.  இதற்கு இடையில் மார்க்சிஸ்ட் வழக்கறிஞர்களுக்கு இலங்கைப் பிரச்சனையில் இருக்கும் குழப்பத்தைத் தீர்க்கக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.எம்.எஸ்.நம்பூதரிபாட் சென்னைக்கு வந்தார்.  கூட்டம் அரை மணி நேரத்தில் முடிந்தது.  மார்க்சிஸ்ட் வக்கீல்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அவரால் தீர்க்க முடியவில்லை.  நமக்கு இசைவான ஒரு கருத்தில்லை என்று ஒருமித்த கருத்துடன் கூட்டம் கலையலாம் (we agree to disagree) என்று கூட்டத்தை முடித்து வைத்தார்.
            அதன் பின்னர் கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கையில் இறங்கி, விசாரணைக்குழு ஏற்பாடு செய்யப்பட்டது.  அசோக் மித்ராவை அழைத்துக் கூட்டம் போட ஏற்பாடு செய்தது யார் என்பதாக விசாரணை தொடங்கியது.  கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது நான்தான் என்றும் கட்சியில் ஈழத்தமிழ் மக்கள் கொள்கை பற்றி எனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறினேன்.  உடனே என்னைக் கட்சியை விட்டு வெளியேற்ற முடிவு செய்தனர்.  13/01/1988 அன்று டெலிகிராப், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்களில் என்னைக் கட்சியைவிட்டு வெளியேற்றிய நிகழ்வு முக்கியச் செய்தியாக வெளிவந்தது.
               அடுத்த நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று கட்சித் தலைமையில் அதிகாரபூர்வ செய்திக் குறிப்பு பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டது.  கட்சி விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக நான் வெளியேற்றப் பட்டதாகக் கூறி சிபிஐ(எம்)-ன் தலைமை திருப்திப்பட்டுக் கொண்டது.  நான் எப்போது திடீரென்று தொழிலாளர் விரோதியானேன் என்று எனக்கும் புரியவில்லை.  என் வழக்கறிஞர், கிளைத் தோழர்களுக்கும் புரியவில்லை.  1968 முதல் 1988 வரை தொடர்ந்து மாணவர் அணியிலும் தொழிலாளர் பிரிவிலும் தொண்டனாகவும், உயர்நீதிமன்றத்தல் அவர்களது வழக்குகளை திறம்பட நடத்தியதைத் தவிர, தொழிலாளர்களுக்கு விரோதச் செயலைக் கனவிலும் நினைக்காத எனக்கு அப்படி ஒரு பட்டம் வழங்கியது கட்சித் தலைமை.
இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து கொச்சியிலிருந்து என்னை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் சொன்னார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.  அவர் சொன்னதன் சுருக்கம் இதோ! "தோழரே நமது சிவப்பு நிறம் அவர்களுக்குப் போதவில்லை போலிருக்கிறது. வேண்டுமானால் நாம் ஒரு பிங்க் நிறத்தில் (pink party) கட்சி ஆரம்பிக்கலாம்"
இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு அதை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசியல் சட்டத்தில் 13-வது சட்டத் திருத்தம் சிங்கள அரசால் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டது.  13-வது சட்டத் திருத்தத்தின்படி தமிழ் மக்களின் மரபுரீதியான வாழ் நிலங்களாகிய வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு பற்றிய பிரிவை ஸ்ரீலங்கா சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து விட்டது.  மிச்சமுள்ள திருத்தங்களை வாபஸ் பெற தற்போது ராஜபக் ஷ‌ேஅரசு புதிய சட்ட வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இன்னும் அந்த ஒப்பந்தத்தில் என்ன மிச்சம் இருக்கிறது என்றே யாருக்கும் தெரியாது.  இருப்பினும் 13-வது அரசியல் சட்டப்பிரிவை அமுல்படுத்தவும், அரசியல் தீர்வு காணவும் மார்க்சிஸ்ட்டுகள் கூறி வருவது வேதனையைத்தான் அளிக்கிறது.
           இன்று வரை ஈழத் தமிழர் பிரச்சனையில் முறையான விவாதமோ அல்லது சரியான அணுகுமுறையோ இல்லாத சிபிஐ(எம்) கட்சியின் மீது அதன் ஆதரவாளர்களுக்கே பெரும் ஏமாற்றம் உண்டு.  ஆகவே காலம் கடந்து போனாலும் அந்த கட்சியின் ஈழத் தமிழர் கொள்கையை விமர்சனம் செய்து மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு விருந்து படைத்த திருமாவேலனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.  தொடர் கட்டுரையை வாசிக்க முடியாத தோழர்கள் பயனடையும் வகையில் அது ஒரு தனிப்பிரசுரமாக வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.  மறுபடியும் மார்க்சிஸ்ட் தோழர்கள் ஆத்ம பரிசோதனை ஒன்றுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள உதவும் இந்தப் பிரசுரம் காலத்தின் கட்டாயம்.
கே.சந்துரு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
சென்னை - 01/07/2013

Friday, January 3, 2014

சிபிஐ சிக்கல்களும் சர்ச்சைகளும்

ஏதாவதொரு குற்றம் நிகழ்ந்தால், அது குறித்த விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் நம்பினால், உடனே சிபிஐயைத்தான் அவர்கள் துணைக்கு அழைப்பது வழக்கம். குறிப்பிட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்யவேண்டும் என்றுதான் அவர்கள் கோருவது வழக்கம். குறிப்பாக அரசியல் வட்டாரங்களில் இந்தக் குரல் பலமாக ஒலிப்பதுண்டு. காரணம், சிபிஐ ஒரு வழக்கை எடுத்துக்கொண்டால் விசாரணையில் பாரபட்சம் இருக்காது என்பது பரவலான ஒரு நம்பிக்கை. ஐம்பது ஆண்டு கால பாரம்பரியம் மிக்க இந்த அமைப்பு குறித்து குவஹாத்தி உயர் நீதிமன்றம் வெளியிட்ட ஒரு தீர்ப்பு அதிர்ச்சியையும் வியப்பையும் ஒருசேர கிளப்பியுள்ளது.
தீர்ப்பு விவரத்தைப் பார்ப்பதற்கு முன்னால் சிபிஐ குறித்த ஒரு சிறு அறிமுகம்.
அறிமுகம்
1941ல் சிறப்புக் காவல் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. இது 1 ஏப்ரல் 1963 அன்று மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) என்று பெயர் மாற்றப்பட்டது. 5600க்கும் அதிகமானோர் சிபிஐயில் பணியாற்றுகின்றனர். புது டெல்லியில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 52 கிளைகள். சிபிஐக்காக ஒதுக்கப்படும் ஆண்டு பட்ஜெட் 303.79 கோடி.
தலைமை புலனாய்வு ஆணையர், உறுப்பினர் ஆணையர்கள், உள்துறை செயலாளர், மத்திய ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவால் முன்மொழியப்பட்டு இந்திய குடியரசுத் தலைவரால் சிபிஐயின் இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.
சிபிஐயின் முதல் இயக்குநர், டி.பி. கோலி. ஏப்ரல் 1963 முதல் மே 1968 வரை பதவியிலிருந்த இவருக்கு பதவிக் காலத்திலேயே 1967ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதுவரை 24 இயக்குநர்கள் சிபிஐயில் பணியாற்றியிருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த எஃப்.வி. அருள், ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த டி. கார்த்திகேயன், ஆர்.கே.ராகவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
வழக்குகள்
கொலை, கடத்தல், தீவிரவாதம், நிதி முறைகேடுகள், ஊழல் தடுப்பு போன்ற பல வழக்குகளை சிபிஐ விசாரித்துள்ளது. சில முக்கிய வழக்குகள்: ஹர்ஷத் மேத்தா ஹவாலா பங்கு பத்திர ஊழல், போபர்ஸ் பீரங்கி கொள்முதல் ஊழல், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதி மோசடி, உயர் காவல் அதிகாரியின் மகன் குற்றவாளியாக்கப்பட்ட பிரியதர்ஷனி மாட்டு என்ற 22 வயது சட்டக் கல்லூரி மாணவி கொலை வழக்கு, குஜராத் அமித் ஷா வழக்கு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் போன்றவை. நாடுகளுக்கிடையிலான குற்றப் புலனாய்வுகளில் இன்டர்போலுக்கு நிகராக சிபிஐ செயல்பட்டு வருகிறது.
குற்றச்சாட்டுகள்
சிபிஐமீது சில குற்றச்சாட்டுகளைப் பலரும் முன்வைக்கிறார்கள். குறிப்பாக, மத்திய அரசால் சிபிஐ ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்னும் குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களையும் மாற்று முகாம்களில் இருப்பவர்களையும் மிரட்டிப் பணிய வைக்க சிபிஐ பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் இவர்கள்.
இத்தகைய பிரச்னைகள் இருக்கக்கூடாது என்றால் சிபிஐக்குக் கூடுதல் சுதந்தரம் அளிக்கப்படவேண்டும், அரசியல் தலையீடு அகற்றப்படவேண்டும் என்கிறார் அதன் முன்னாள் இயக்குநரான ஆர்.கே. ராகவன்.
கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பாக 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் சிபிஐயின் செயல்பாடுகள் எதிர்கட்சிகளாலும் உச்ச நீதிமன்றத்தாலும் கடுமையாக விமரிசிக்கப்பட்டுள்ளன. அரசின் கொள்கை சார்ந்த பிரச்னைகளில் பிழைகள் நேர்வதை சிபிஐ பெரிதுபடுத்தக்கூடாது என்று பிரதமர், நிதியைமச்சர் இருவரும் சமீபத்தில் சுட்டிக்காட்டியதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
குவஹாத்தி தீர்ப்பு
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் நவேந்திரகுமார், தன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்ததை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பதிலுக்கு ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அன்சாரி, இந்திராஷா ஆகியோர் அமர்வு அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் சாரம் இது. ‘மத்திய உள்துறை அமைச்சகம் 1 ஏப்ரல் 1963 அன்று நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின் மூலம் சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் மத்திய அமைச்சரவையின் தீர்மானம் அல்ல. அந்தத் தீர்மானத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவில்லை. எனவே சிபிஐ அமைப்பை போலிஸ் படையாகக் கருத முடியாது. சிபிஐ குற்ற வழக்குகளைப் பதிவு செய்வது சட்ட விரோதம். மத்திய உள்துறை அமைச்சகம் 1963ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.’
50 ஆண்டு பாரம்பரியம் மிக்க சிபிஐ என்ற அமைப்பே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்ட ரீதியாக சிபிஐயின் இருப்பை நிலைநிறுத்தாமல் விட்டது விமரிசனத்துக்குரியது.
தற்போது பதவி வகிக்கும் இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவின் நியமனத்தின்போது இன்னொரு சர்ச்சை எழுந்தது. அதுவும் இப்போது விவாதப்பொருளாகியுள்ளது. பிரதம மந்திரி, எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுமூலம் இனிமேல் சிபிஐ இயக்குனர் நியமனம் முடிவு செய்யப்படவேண்டும் என்றும் கூண்டுக்கிளி போல் இல்லாமல் சிபிஐக்கு சுதந்தர அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்றும் கோருகிறார்கள்.
குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. முக்கியத்துவம் கருதி தலைமை நீதிபதி பி.சதாசிவம் வீட்டிலேயே வழக்கு ஏற்கப்பட்டு விசாரணையும் தொடங்கியது. அப்போது ஆஜரான அட்டர்னி ஜெனரல் குலாம் சி. வாகனவதி வெளியிட்ட கருத்து இது.
‘சிபிஐயை நிறுவிய தீர்மானத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதாலேயே அதைச் சட்ட விரோத அமைப்பு என கூற முடியாது. தில்லி சிறப்பு போலிஸ் சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் சிபிஐக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பல சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதை குவஹாத்தி நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. அதே தில்லி சிறப்பு போலிஸ் அமைப்பு சட்டத்தின் கீழ் புதிய சிறப்புக் காவல் அமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அந்த அதிகாரத்தைப் பல வழக்குகளில் உறுதிப்படுத்தியுள்ளது.
‘உயர் நீதிமன்ற தீர்ப்பால் சுமார் 9000 நீதிமன்றத் தீர்ப்புகள், விசாரணையில் உள்ள சுமார் 1000 வழக்குகள் பாதிக்கப்படும். சிபிஐயில் சுமார் 6000 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தீர்ப்பால் ஒட்டுமொத்த சிபிஐ காவல் கட்டமைப்பே குலைந்துவிடும் நிலை ஏற்படும். இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி வேறு சில வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், தற்போது வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆதாயம் தேடக்கூடும்.’
இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்து விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வேறொரு வழக்கில், உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு தீர்ப்பை இங்கே நினைவுபடுத்திக்கொள்வது பொருத்தமாக இருக்கும். இந்தத் தீர்ப்பின்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும் முறை நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. தற்போது, சிபிஐ விவகாரத்திலும் இத்தகைய ஒரு தீர்ப்புதான் தேவைப்படுகிறது. ஐம்பது ஆண்டு காலப் பாரம்பரியம் மிக்க சிபிஐ சட்டப்பூர்வமான ஓர் அமைப்பு என்று அறிவிக்கப்படவேண்டும். அரசியல் தலையீடுகள் அகற்றப்படவேண்டும். அனைவருடைய எதிர்பார்ப்பும் இதுதான்.
சிபிஐயின் 50 வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பேசும்போது சொன்ன ஒரு ‘பழமொழி’ பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிவிடும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
பெரும் சர்ச்சைக்குள்ளான ஐபிஎல் சூதாட்டங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ரஞ்சித் சின்ஹா இப்படிக் கூறினார். ‘விளையாட்டுகளில் நடைபெறும் முறைகேடுகளில் கோடிக்கணக்கான பணம் புரளுகிறது. ஆனால் தெளிவான ஒரு சட்டம் இல்லாத காரணத்தாலும், இவை நாடுகளுக்கு இடையே நடக்கும் குற்றங்களாக இருப்பதாலும் மத்தியப் புலனாய்வுத் துறையால் சரியான நடவடிக்கை எடுக்க முடிவதில்லை’. மேலும் தொடர்ந்தார். ‘சூதாட்டங்களைத் தடை செய்யவென்று இருக்கும் சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை என்று சொல்வது ‘கற்பழிப்புக் குற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை என்றால் அதைத் துய்த்து மகிழுங்கள்’ என்பதைப் போல இருக்கிறது’.
இந்தக் கடைசி வாக்கியம்தான் தேசிய பெண்கள் அமைப்பை கொதித்து எழச் செய்துவிட்டது. ‘மத்தியப் புலனாய்வுத்துறை இயக்குநரின் பேச்சு, ‘சூதாட்டத்தைப் போலவே கற்பழிப்பு என்பதும் மாற்றமுடியாத சமூக நிகழ்வு’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் வாயிலிருந்து இந்த மாதிரி பொறுப்பற்ற, உணர்வுபூர்வமற்ற, ஆட்சேபத்திற்குரிய பேச்சுகள் வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. தனது பேச்சுக்கு விளக்கமும், அப்படி பேசியதற்கு மன்னிப்பும் அவர் கேட்டே ஆக வேண்டும் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
‘நம் நாட்டில் லாட்டரி சீட்டுக்கள் இருக்கின்றன, ஓய்வு விடுதிகளில் சூதாட்டக்களங்கள் இருக்கின்றன; கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை சட்டபூர்வமாக அறிவிக்கலாம் என்றெல்லாம் அரசாங்கமே சொல்லும்போது, பெட்டிங் என்பதையும் சட்டபூர்வமாக்கி விடலாம். சூதாட்டங்களை ஒழித்து விடவேண்டும் என்று சொல்வது மிகவும் சுலபம். அதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கடினம்’ என்றெல்லாம்கூட ரஞ்சித் சின்ஹா பேசியிருக்கிறார்.
தேசிய பெண்கள் அமைப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் சின்ஹா மன்னிப்பு கேட்டிருக்கிறார். ‘என்னுடைய உரை யாருடைய மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன், மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதும் பெண்களிடம் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கிறேன். மத்தியப் புலனாய்வுத் துறை பல கற்பழிப்புக் குற்றங்களை விசாரித்து இருக்கிறது; எங்களிடம் வரும் குற்றங்களையும் பெண்களின் நிலையை மனத்தில் வைத்துக் கொண்டே விசாரித்திருக்கிறேன்.
‘லாட்டரி சட்டபூர்வமாக ஆக்கப்பட்டதைப்போல பெட்டிங்கையும் ஆக்கலாம்; பெட்டிங்கை தடை செய்யும் சட்டங்களை அமல்படுத்துவது கடினம். அதனால் பெட்டிங்கை தடை செய்யமுடியவில்லை என்று சொல்வது தவறு என்று வலியுறுத்த ஒரு பழமொழியை பயன்படுத்தினேன். அவ்வளவுதான். எந்தச் சூழ்நிலையில் அப்படிச் சொன்னேன் என்று பாருங்கள்.’

நன்றி - ஆழம் மாத இதழ் (எனது பதிவு)

காப்பீட்டில் அந்நிய முதலீடு சுருட்டலும் சேவையும்

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் சில்லறை வர்த்தகம், வங்கிப் பணிகள், தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ் என்று பல துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வரவேண்டும் என்றும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் துறைகளில் அந்நிய முதலீட்டின் சதவிகிதத்தை அதிகரிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் இன்சூரன்ஸ் துறையில் மிகப் பெரிய நிறுவனமாக இயங்கி வரும் ஐசிஐசிஐ லொம்பார்ட் என்ற நிறுவனம், போலியாகத் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் மற்றும் உரிமை கோரல்கள் வாயிலாக அரசிடம் இருந்து பல ஆயிரம் கோடிகளைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.  இதே நிறுவனத்தின்மீது இதே வகையான புகார் 2010லும் வெளிவந்தது என்றபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
முன்னதாக 20092010 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தகுதியற்ற நபர்களின் பெயரில் பாலிசி ஆவணங்கள் தயாரித்து ராஜிவ் காந்தி ஷில்பி ஸ்வாஸ்தய பீமா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அரசின் பணத்தை கோடிக்கணக்கில் இந்நிறுவனம் பெற்றுள்ளதாகக்குறிப்பிடுகிறது டிஎன்ஏ இந்தியா டாட் காம்.
அதே காலகட்டத்தில்தான் இந்திய அரசாங்கம் ஐசிஐசிஐ லொம்பார்டை தனது காப்பீட்டுத் திட்டங்களில் இணைத்துக்கொண்டது.  கைவினைக் கலைஞர்களுக்கான ராஜிவ் காந்தி மருத்துவக் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு பருவகால அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றுக்கு மத்திய அரசு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்தத் திட்டங்களை நிர்வகிக்கும் பணி ஐசிஐசிஐ லொம்பார்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் 8 லட்சம் கைவினைக் கலைஞர்களை இந்தத் திட்டத்தில் சேர்ப்பதாக ஒப்புக்கொண்டது ஐசிஐசிஐ. ஆனால் குறிப்பிட்ட கால அளவில் சேர்க்க முடியாமல் போனதால் போலி ஆவணங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த 8 லட்சம் நபர்களில் சுமார் 30,000 பேர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கைவினைத் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் பெயரில் உள்ள ஆவணங்களில் ஏறக்குறைய 11,000 போலியானவை என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் காதி கிராமோத்பவன் குழுமத்தை அணுகி அதன் தொழிலாளர்களைச் சேர்ப்பதாக ஐசிஐசிஐ லொம்பார்ட் தெரிவித்திருக்கிறது. காதி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் வருவதால் திட்டத்தில் சேர தகுதியற்றது என்று சொல்லப்பட்டது.  தொழில் துறை அமைச்சகத்தை காதி தொடர்பு கொண்டபோது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட (சொசைட்டி) குழுமங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்று பதிலளிக்கப்பட்டது.
ஆனால் ஐசிஐசிஐ லொம்பார்ட் விடுவதாகயில்லை. எப்படியும் 50,000 பணியாளர்களை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, காதி அதிகாரிகளைத் தக்க முறையில் ‘கவனித்துக்கொண்டது’. இருந்தும் 11,000 பேரை மட்டுமே சேர்க்கமுடிந்தது. டிஎன்ஏ இந்தியா டாட் காம் நிறுவனம் வைத்திருக்கும் ஆதாரத்தின்படி பல பாலிசி ஆவணங்கள் பின்னர் ஐசிஐசிஐ நிறுவனத்தால் அழிக்கப்பட்டுவிட்டன.
ஏப்ரல் 2012ல் ஸ்ரீவத்சவா என்பவரால் மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. தற்போது அது நிலுவையிலுள்ளது.  இவ்வளவு நடந்த பிறகும் இந்நிறுவனத்தின்மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இப்போது அரசை ஏமாற்றியதற்காக மற்றொரு பொது நல வழக்கு முளைத்துள்ளது. அதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், காப்பீட்டு ஓழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை (ஐஆர்டிஏ) கடுமையாகக் கடிந்து கொண்டுள்ளது. இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென் கடிதம் எழுதிய பிறகும் ஏன் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
‘இது ஓர் உதாரணம் மட்டுமே. பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்த 23 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பெரும்பாலானவை பாலிசிதாரர்களின் கிளைம்ஸ் பலவற்றை நிராகரித்துள்ளன. மேலும், பாதியில் கைவிடும் பாலிசிகளின் மீது பெரிய அளவில் தொகை இழப்பு ஏற்படுத்தி மிச்சத்தை மட்டும் வழங்குகிறார்கள். அல்லது, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைக் காண்பித்து, சேமிப்பு மதிப்பை மிகக் குறைத்துக் காட்டுகிறார்கள்.’ என்கிறார் தென் மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுவாமிநாதன்.
இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவு, ராபர்ட் வதேரா நில பரிவர்த்தனை முறைகேடு, நிலக்கரி ஊழல் கோப்புகள் மாயம், லடாக்கில் சீனா ஊடுறுவல், பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல்கள் போன்ற பலவற்றையும் மீறி இந்திய நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்காலக்கூட்டத் தொடர் நடைபெற்து. புதிய பென்ஷன் திட்ட மசோதா, பாராளுமன்ற (தகுதியிழப்பு) திருத்த மசோதா, உணவு பாதுகாப்பு மசோதா போன்றவை எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா 2008 விவாதிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுவிட்டது. அரசுத் துறை இன்சூரன்ஸ் ஊழியர்களும் தனியார்மய எதிர்ப்பாளர்களும் தாற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
முதன் முதலில் 1955ம் ஆண்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்மீது நாடாளுமன்ற உறுப்பினர் அமோல் பராதே எழுப்பிய புகாரைத் தொடர்ந்து அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தின் முதலாளியும், இந்தியாவின் மிகப்பெரிய வணிகருமான சச்சின் தேவ்கேகர் என்பவர்  இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் சட்டம் 1956ன் வாயிலாக ஏறக்குறைய 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை  (154 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், 16 அந்நிய நிறுவனங்கள் மற்றும் 75 வைப்புநிதி நிறுவனங்கள்) இணைத்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மற்றும் மத்திய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
அப்போது எல்ஐசியின் மூலதனப் பங்கு என்பது 100 சதவிகிதம் அரசின் வசமே இருந்தது. தனது முதல் ஆண்டான 1957ல் எல்ஐசி 7,94,585 பாலிசிகளை விற்றது. இது தேசியமயத்துக்கு முன்பு இருந்த 245 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் சேர்ந்து விற்ற பாலிசிகளைவிட 30% அதிகம்.
பின்னர் 1999ல் ஐஆர்டிஏ உருவாக்கத்துக்கான மசோதா நிறைவேற்றப்படும்போதே இந்தத் துறையில் 26% அந்நிய முதலீட்டுக்கான கதவும் திறந்து விடப்பட்டது. தற்போது இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா 2008 வாயிலாக அதை 49% ஆக உயர்த்துவதற்கான முயற்சியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது.
இதில் முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும். யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்தவர்கள் என்பதோடு, அதிகமான காங்கிரஸ் உறுப்பினர்களும்  அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழு காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு தேவையற்றது என்று அழுத்தமாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளது. அதன் காரணமாகக் காப்பீட்டுத் துறையில் நாடாளுமன்ற ஒப்புதலின்றி அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்த முடியாது என்ற நெருக்கடியில் உள்ளது அரசு.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்ட மசோதாவில், ஓய்வூதியத்தில் அந்நிய முதலீடு என்பது காப்பீட்டுத் துறையில் உயர்த்தப்படுவதைப் போலவே உயர்த்தியமைக்கப்படும் என்று ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அரசின் பிடிவாதப் போக்கைத் தெரிந்துகொண்டுவிடலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி  அரசுக் காப்பீட்டுத் துறையைப் பாதித்துள்ளதா? மதுரை கோட்ட ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் என்.சுரேஷ் குமார் மறுக்கிறார். ‘கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் காப்பீட்டுத் துறை பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.  ஆயுள் காப்பீட்டில் 200102ல் 19,857 கோடியாக இருந்த புது வணிக பிரீமியம், 200809ல் 87,006 கோடியாக வளர்ந்துள்ளது. 31 மார்ச் 2013 நிலவரப்படி, சொத்து மதிப்பீடு 15,60,481 கோடி (240 பில்லியன் அமெரிக்க டாலர்). மொத்த ஆயுள் நிதி 14,33,103 கோடி.’
அவர் தொடர்கிறார். ‘பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் நுழைந்த பிறகு காலாவதியாகும் பாலிசிகள் குறித்து கவலை எழுந்துள்ளது. தவறான விற்பனைகூட அதிக அளவில் பாலிசிகள் காலாவதியாவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. ஐஆர்டிஏ கூற்றுப்படி  எல்ஐசி மட்டுமே மிகக் குறைந்த காலாவதி விகிதம், அதாவது 4% வைத்துள்ளது.  ஆனால் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, மாக்ஸ் நியூ யார்க்கில் இது 19% ஆகவும் ஐசிஐசிஐ புருடென்ஷியலில் 53% ஆகவும் உள்ளது. இதிலிருந்து, உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்தியக் காப்பீட்டு துறையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிகிறது. மாறாக, வளர்ச்சியே ஏற்பட்டு வருகிறது.’
தனியார் காப்பீட்டு நிறுவனங்களின்மீது மக்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது? தொழில் நகரமான கோவை மற்றும் திருப்பூரில் வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றும் ஆர். முரளியிடம் உரையாடினோம்.
‘பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டுத் திட்டங்கள் அனைத்தும் சந்தையோடு இணைந்து இருப்பதால் சேமிப்பின் மதிப்பு உயராமல் இருப்பதை வாடிக்கையாளர்கள் பார்க்கிறார்கள். இன்னொரு விஷயம், இங்கு முதலாளிகள் தங்கள் நிறுவனத்துக்கான காப்பீடு மற்றும் தனி நபர் காப்பீடுகளுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைத்தான் நாடுகின்றனர். கிளெய்ம்ஸ் தீர்வைப் பொருத்தவரை எல்ஐசியின் விகிதம் 99.74%. ஆனால் தனியார் துறையின் சராசரி 70%. ஆக மொத்தம் அரசுத் துறை காப்பீட்டின்மீதுதான் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.’
அந்நிய முதலீட்டை அதிகரித்தால் ஆரோக்கியமான போட்டி சூழல் உருவாகும், அது வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பலனையே பெற்றுத்தரும் என்றுதான் இதுவரை சொல்லி வருகிறார்கள். ஆனால், காப்பீட்டுத் துறையைப் பார்க்கும்போது உண்மை  அதற்கு நேர் எதிரானது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் எந்த வகையிலும் மக்களுக்கு நன்மை ஏற்படவில்லை என்பது மட்டுமின்றி ஊழல் பெருகிப்போயுள்ளது. கூடுதலாக அரசின் கஜானாவும் இத்தகையவர்களால் காலியாகிக்கொண்டிருக்கிறது.

நன்றி- ஆழம் மாத இதழ் (எனது பதிவு)

வெட்கப்பட வேண்டும்!


திண்ணியம், மேலவளவு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், நாய்க்கன் கொட்டாய்…. இந்த ஊர்களையெல்லாம் தமிழக வரைபடத்தில் அவ்வளவு    சுலபத்தில் கண்டுபிடித்துவிடமுடியாது. ஆனால் சாதிய பாகுபாடு, அவமரியாதை, மோதல், படுகொலை என்று கணக்கெடுத்தால் கடந்த பத்தாண்டுகளில் செய்தி ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட கிராமங்களாக இவையே இருக்கின்றன.
இந்த வரிசையில் தற்போது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிலுள்ள வடுகப்பட்டியும் சேர்ந்துள்ளது. இங்கு முக்குலத்தோர் உள்ளிட்ட ஆதிக்க (இந்து) சாதியினர் பெரும்பான்மையினராகவும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தலித் மக்களும் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பேருந்து நிழற்கூடையின் கீழுள்ள இருக்கைகளில் ஆதிக்க சாதி இந்துக்கள் முன்பாக தலித்துகள் அமரக்கூடாது. அதே போல் வடுகப்பட்டியின் மையத்தில் அமைந்திருக்கும் திண்ணைகளை தலித்துக்கள் பயன்படுத்தக்கூடாது. இது நடைமுறையில் உள்ள வழக்கம். கடந்த மாதத் தொடக்கத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டபோது, முதல் நாள் பள்ளிக்கு ஆசையுடன் புறப்பட்ட அருண்குமார் என்ற பட்டியல் சாதி மாணவன் குறிப்பிட்ட தெருவைக் கடந்து செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டான். அதே ஊரைச் சேர்ந்த நிலமாலை என்பவர் அந்த மாணவனைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அவனது செருப்பைக் கழற்றி தலையில் வைத்துக்கொண்டு செல்லுமாறு அருண்குமார் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். வேறு வழியின்றி அந்த மாணவன் அவ்வாறே செய்திருக்கிறான்.
இந்தச் சம்பவம் தலித் மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டினர். தருமபுரி, மரக்காணம் பகுதிகளில் சாதிக் கலவரங்கள் நடைபெற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பதால் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் இயக்குனர் வெங்கடேசன் தலைமையில் டிஎஸ்பி சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் வடுகப்பட்டி சென்று விசாரணை நடத்தி முடித்துள்ளனர். தமிழகத்தில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் சாதி மோதல்கள் குறித்து கேட்டதற்கு, ‘இப்பிரச்னை குறித்தும் அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆலோசிப்பதற்கு மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்தவுள்ளோம்’ என்று பதில் அளித்துள்ளனர். முன்னதாக மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து முதல் நாளிலேயே தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளியேற்றப்பட்டது குறித்தும் தேசிய ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து வடுகப்பட்டி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மதுரை, தேனி, ராமனாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களிடையே ஆங்காங்கு தொடர்ந்து சாதிய மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தலித் மக்கள்மீதான அவமதிப்புகள், பாகுபாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளும் என்ஜிஓ அமைப்புகள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்கீழ் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் யாரும் தண்டனை பெறுவதில்லை என்கிறார்கள். மாறாக சில தினங்களில் நீதிமன்றத்துக்கும் காவல்துறைக்கும் வெளியே பேசி பிரச்னையை முடித்துக்கொண்டு விடுகிறார்களாம்.
கடந்த ஜூன் 11ம் தேதி, சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை கிராமத்தில் புதிரை வண்ணார் என்ற தலித் பிரிவைச் சேர்ந்த வேட்டை வில்லன் என்பவரின் குடும்பத்தினர் தாக்கப்படுவதாகவும் விரட்டப்படுவதாகவும் புகார்கள் கிளம்பின. 2004ல் வேட்டை வில்லனின் நிலமும் வீடும் ஆதிக்கச் சாதியினரால் கையப்படுத்தப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் மதுரைக்கு அருகிலுள்ள உத்தங்குடியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, வேட்டை வில்லனின் மகன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.  சமீபத்தில் சாத்தரசன்கோட்டையில் வறட்சி நிவாரணம் வழங்கப்படுவது அறிந்து, அதை வாங்கச்சென்றபோது வீடும், நிலமும் இல்லாத உனக்கு எப்படி நிவாரணம் வரும் என்று அங்குள்ளவர்கள் தாக்கி, தரக்குறைவாக பேசி விரட்டியிருக்கின்றனர். உடனே வேட்டை வில்லனும் அவரது குடும்பத்தினரும் வித்தியாசமான முறையில் ஒருவர் தலையில் விறகு, ஒருவர் தலையில் அடுப்பு, ஒருவர் தலையில் குடம் என்று சுமந்து மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி வந்துள்ளனர். ஆனால் வழியிலேயே காவல்துறையினர் இவர்களை மடக்கி, புகாரைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம், இழப்பீடு பெறுவதற்காக சில சமயம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சில தலித் மக்களே தவறாகப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.
சட்டத்தால் மட்டுமே தீர்க்கமுடிந்த பிரச்னை அல்ல இது. கிராமங்கள் தோறும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த முதியவர்கள், இளைஞர்கள் அடங்கிய சமாதான குழுக்கள் ஏற்படுத்தப்படவேண்டும். மேற்படி சம்பவங்கள் நடக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு பேசி இந்தக் குழு சமரசம் செய்யவேண்டும். நாகரிகமும் கல்வியறிவும் வளர்ந்துள்ள இன்றைய சூழலிலும் சாதி மோதல்களையும் அவமதிப்புகளையும் அனுமதிப்பது வெட்கக்கேடான விஷயம்.
நன்றி - ஆழம் மாத இதழ் (எனது பதிவு)

Wednesday, November 6, 2013

நீயா- நானா ?


தன்முனைப்பினால் (EGO) எழும் விளைவுகள்

  சில மாதங்களுக்கு முன்பாக THE HINDU ஆங்கில நாளிதழில் முதன்மை ஆசிரியர் மற்றும் நிர்வாக குழுமத்தில் திரு என்.ராம்-ற்கு பதிலாக திரு சித்தார்த் வரதராஜன் பொறுப்பேற்றபின் சில நாட்களில் செய்திகளின் அச்சு வடிவமைப்பில் (LAY OUT - DESIGNING - PROVIDING SHORT CAPTIONS)குறிப்பிட்ட தலைப்புகளுக்கு பக்கத்தில் கலர் கட்டத்தில் குறியீட்டுச் சொல் குறித்து காண்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  சில வடிவமைப்பு மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டது.  பலரால் அது வரவேற்கப்பட்டது.  ஒரே மாதிரி பார்த்துப் பழகிய சிலர் எதிர் கருத்தும் தெரிவித்தனர்.
 
  ஆனால் அதற்கு முன்பு- அன்று- இன்று எல்லா நாட்களிலும் செய்தியாளர்களில் மாற்றம் ஏதும் இல்லாததால் ஆங்கில எழுத்து நடைகளில் மாற்றமின்றி சிறப்பாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்நிலையில் சமீபத்தில் முதன்மை ஆசிரியர் குழுமத்தில் திரு என்.ராம் பொறுப்பேற்று- அதனை தொடர்ந்து திரு சித்தார்த் வரதராஜன் ராஜினாமா போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது.  அது அவர்களின் உள் நிகழ்வு விவகாரம்.
 
  ஆனால் இன்றைய THE HINDU முதல் பக்கம் வலது மூலையில் "மீண்டும் பழைய பொலிவான வடிவமைப்பிற்கு திரும்பியுள்ளோம்" என கட்டம் கட்டி  குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஆட்சியமைப்பை, துறைவாரியான நிர்வாகத்தை, நீதித்துறையை இப்படி எவருடைய செயல்பாட்டையும் விமர்சிக்கும் தகுதிபடைத்த பத்திரிகையாளர்களிடையே இப்படி தனி மனித "தன் முனைப்பு (ஈகோ)" தலைதூக்கி முன்பிருந்தவர் செய்ததையெல்லாம் மாற்றுவேன் என தலைப்பட்டால், 5 வருடங்களுக்கொருமுறை ஆட்சி மாற்றத்தின் போது முன்னவர் செய்த பெரும்பாலான கொள்கை முடிவுகளை புதிய ஆட்சியாளர்களால் மாற்றப்படும் போது அதை எவ்வாறு விமர்சனம் செய்ய இயலும்?

  இந்து நாளிதழின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் செய்துவிட்டு போயிருக்கலாம்.  அதை கட்டம் கட்டி சொல்லி காண்பிக்கும் போது "தன் முனைப்பு (ஈகோ)" வெளிப்படையாக தெரிகிறது. "இடது" சிந்தனையாளர் என எண்ணப்படும் மூத்த பத்திரிகையாளரிடம் இது வெளிப்படுவது வேதனைக்குரிய ஒன்றே !!

Monday, May 27, 2013

100 கோடி ஜனநாயகம்

100 கோடி ஜனநாயகம்



கர்நாடகத்தின் சட்டப்பேரவைக்கு 2013 மே முதல் வாரம் தேர்தல் நடைபெற உள்ளது.  முன்பெல்லாம் ஆட்சி அதிகாரத்துக்கு யார் வரவேண்டும் என்று சாராய வியாபாரிகளும் தரகர்களும் திரை மறைவில் இருந்து தீர்மானித்தார்கள். அதன் பிறகு கார்ப்பரேட் முதலாளிகள் யார் எந்தத் துறையின் அமைச்சராக வரவேண்டும் என்பதைத் தீர்மானித்தார்கள். இப்போது அனைத்தும் மாறிவிட்டன. பணம் படைத்த முதலாளிகள் நேரடியாகவே அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள். சில கோடிகளை முதலீடாக விதைத்து 5 வருட பதவி காலத்தில் ஏராளமான கோடிகளை அறுவடை செய்துவிடுகிறார்கள்.
கர்நாடகாவின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் பல வேட்பாளர்கள் அவர்களாக மனமுவந்து தாக்கல் செய்துள்ள விபவங்களின் அடிப்படையில் மட்டும் பார்த்தாலே 10 வேட்பாளர்கள் ரூபாய் நூறு கோடி தாண்டி சொத்து சேகரித்து வைத்துள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் வீடு, மனை விற்பனையாளர்கள் (ரியல் எஸ்டேட்), சுரங்கத் தொழில் புரிவோர், கல்வி நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் நேரடியாகவே அரசியலில் களத்தில் இறங்கியுள்ளனர்.  யார் வேட்பாளராக களம் இறங்க வேண்டுமென்பதை அவருடைய சொத்து மதிப்பைக் கொண்டுதான் அனைத்து கட்சிகளும் முடிவுசெய்கின்றன.
சுரங்கம்
பெல்லாரி, தும்கூர் மாவட்டங்களில் பெருமளவில் இரும்பு தாது வெட்டி எடுக்கப்படுகிறது. இருப்பினும் 2010 &11ல் கர்நாடகா லோக்யுக்தா விசாரணை, உச்ச நீதிமன்ற கெடுபிடிகள் போன்றவற்றால் சுரங்கத் தொழில் சற்று சுணக்கம் கண்டிருந்தது.  பல்லாயிரம் கோடி வருவாய் தரும் தொழில் என்பதோடு பல்லாயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த மாநிலத்தின் சுரங்க ஜாம்பவான்கள் ஜி ஜனார்த்தன ரெட்டி (தற்போது ஹைதராபாத்தில் நீதிமன்ற காவலில் உள்ளார்), அனில் லாட், சந்தோஷ் லாட் ஆகியோர் நேரடியாக அரசியலில் ஈடுபடுகின்றனர். இதில் சந்தோஷ் லாட் என்பவரின் சொத்து மதிப்பு ரூ 186.40 கோடி
கல்வி
கல்வி நிறுவனம் என்பது பணம் கொழிக்கும் தொழிலாகிவிட்டது. கர்நாடகாவில் பல அரசியல்வாதிகள் சங்கிலித் தொடராக கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளனர். ஏறக்குறைய பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் அனைவருடைய பெயரிலும் கல்வி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
ரியல் எஸ்டேட்
சுரங்கத் தொழில் தொய்வடைந்ததைத் தொடர்ந்து அதிலுள்ள கோடிகள் ரியல் எஸ்டேட்டில் பாய ஆரம்பித்தது. குறிப்பாக பெங்களூரு, மைசூர், மங்களூர், தும்கூர், ஹாசன் மற்றும் ஷிமோகா ஆகிய இடங்களில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தார்கள். நில மதிப்புகள் பெங்களூருவில் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள நகரங்களிலும் அதிகரித்தது. விவசாயமற்ற நிலத்தின் மதிப்பு பெங்களூருவில் குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ.1500 முதல் அதிகபட்சம் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து லட்சம் வரை விலை போகிறது.
பல ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஏற்கெனவே அரசியலில் உள்ளனர். எம்.கிருஷ்ணப்பா (லே அவுட் கிருஷ்ணப்பா) நந்தீஷ் ரெட்டி, சதீஷ் ரெட்டி, கிருஷ்ண பலேமர் ஆகியோர் தங்கள் அதிர்ஷ்டத்தை மீண்டும் ஒருமுறை சோதித்துப் பார்க்க களம் இறங்கியுள்ளனர்.
சாராயம் மற்றும் சுரங்கத் தரகு வியாபாரத்துக்கு மாற்றாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானப் பணிகள் அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நந்தீஷ் ரெட்டி தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு ரூ.107.05 கோடி
  • காங்கிரஸின் ப்ரியா கிருஷ்ணா ரூ.910.98 கோடி
  • பாஜக ஆனந்த் சிங் ரூ.104.50 கோடி
  • ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஹெச் டி குமாரசாமி ரூ.123.02 கோடி
  • காங்கிரஸின் ஆர்வி தேஷ் பாண்டே ரூ.113.93 கோடி
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அனைவரும் களத்தில் உள்ளனர்.  காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களில் பலர் ரூ. 10 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு காண்பித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் கடுமையாகக் கண்காணித்தபோதிலும் அவர்கள் கண்களுக்கு படாதவாறு இலவசங்களும் பணம் கொடுப்பதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த நடைமுறைகளால் ஒரு சாதாரண வாக்காளர்கூட பணம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார். மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள், அதிலிருந்து சிறிது கொடுத்தால் அதைப் பெறுவதில் என்ன தவறு என்றும் வாக்காளர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
2008 தேர்தலுக்கு பிறகு பாஜக தனிப் பெரும்பான்மைக்கு 5 இருப்பிடங்கள் குறைவாக (224 இடங்களில் 110ல் வெற்றி பெற்றது) கைப்பற்றியபோது, 9 வேட்பாளர்கள் சுரங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்தார்கள். பாஜக தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக தாமரை திட்டம் என்று களம் இறக்கி எதிர்கட்சி உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து. அவர்களுக்கு கட்சியில் வாய்ப்பு கொடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்தது.  இதன் பின்னணியில் முழுமையாக ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்க முதலாளிகள் இருந்தனர்.
28 கோடி மக்களுக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ. 3075 கோடி. இந்தியாவில் 80% மக்கள் ஒரு நாளைக்கு ரூ.100 க்கும் குறைவான வருமானம் பெறுகிறார்கள். ஆனால் எம்.பிக்களின் சராசரி சொத்து மதிப்பு 5 கோடிக்கு மேல். 2009ல் தேர்வு செய்யப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 300க்கு மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள்.
பணத்தின் அதிகாரம் கர்நாடகாவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.  இருப்பினும் 2004 தேர்தலில் அது முடிவெடுக்கும் சக்தியாக அமைந்தது.  2004 தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் காங்கிரஸ்  65, பாஜக 79, ஜனதாதளம் (ம.சா) 58 என இடங்கள் கிடைத்தன.  அதன் காரணமாக அதிகாரம் மாறுவதும், முதல்வர் மாறுவதுமாக இருந்தது.
அதன் பிறகு ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்கத் தொழில் முதலாளிகள் நேரடியாக அரசியலில் இறங்க ஆரம்பித்தனர். தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 16 லட்சம்தான் செலவழிக்கவேண்டும் என தெரிவித்திருப்பது கேலிக்கூத்து என்கிறார்கள் இத்தகைய கோடீஸ்வர வேட்பாளர்கள்.
வருமான வரி நெருக்கடி என்பதெல்லாம் சாதாரண சம்பளம் பெறுவோருக்குத்தான்.  இத்தகைய கோடீஸ்வரர்களை யாரும் நெருங்கமாட்டார்கள். எப்போதாவது பழி வாங்கும் நோக்கில் இவர்கள்மீது பாய்ந்தால்தான் உண்டு. அதுவும்கூட மறக்கடிக்கப்பட்டுவிடும்.

நன்றி - ஆழம் - சித்ரகுப்தன்