Wednesday, March 13, 2013

வறட்சியிலும் சூடுபிடிக்கும் தண்ணீர் வியாபாரம்


"எப்போது தண்ணீர் பணமாய் கொட்டும்"

"ஒருபுறம் ஓட்டுக்கட்சி ஜனநாயகத்தில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஜனநாயகத்தை இயக்க வைக்கும் அடக்க விலை மட்டும் 50000 கோடி ரூபாய் என்கிறது ஒரு பார்வை (தினமணி / 5 மார்ச் /மக்களாட்சியின் அடக்கவிலை).  மறுபுறம் இத்தகைய ஆட்சியாளர்களின் முறையற்ற திட்டங்களால், தனியார் முதலாளிகள் வறுமையையும் காசாக்கி கொழுக்கின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டுகிறது இந்த கட்டுரை"

பரத்ரவுத் ஒவ்வொரு மாதமும் அவருக்கு தேவையான தண்ணீரை சேகரிப்பதற்காக பெட்ரோலுக்கு ரூ 800 செலவழிக்கிறார்.  மராத்வாடா மாநிலம், உஸட்மானாபாத் மாவட்டத்திலுள்ள டாக்விகி கிராமத்தில் இதே போல் பலர் செலவழிக்கிறார்கள்.  டாக்விகி மற்றும் இதர கிராமங்களில் ஒரு வீட்டிற்கு ஒருவர் வீதம் வெளியில் சென்று எங்கிருந்து தங்களால் தண்ணீர் சேகரித்து வரமுடியுமோ அங்கிருந்து எடுத்துவரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  உஸ்மானாபாத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்து விதமான வாகனங்களும் எங்கிருந்தாவது தண்ணீர் சேகரித்து வரும் பணியை மேற்கொண்டிருப்பதை பார்க்கலாம்.  அவை சைக்கிள்கள், இரு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள், ஜீப்கள், லாரிகள், வேன் மற்றும் டேங்கர்கள் ஆகும்.  பெண்கள் தலையில், இடுப்பில், தோள்களில் பானைகளை சுமந்து செல்வதை பார்க்க முடியும்.  கடுமையான வறட்சியிலிருந்து மீண்டு உயிர் வாழ்வதற்காக பெரும்பான்மை யானவர்கள் இந்த தண்ணீர் பிடிக்கும் பணியை செய்து வருகின்றனர். வேறு சிலரோ இதில் தெளிவாக லாபம் சம்பாதிக்கின்றனர்.

காலமும் தொலைவும்
 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயி பரத் கூறுகிறார், ஆம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் முழுநேரமாக தண்ணீர் எடுத்துவரும் பணியை மேற்கொள்கின்றனர்.  என்னுடைய குடும்பத்தில் நான் எனது சொந்த நிலத்திலுள்ள ஆழ்துளை கிணற்றில் சீரான இடைவெளியின்றி அவ்வப்போது கிடைக்கும் தண்ணீரை எடுத்து வருவேன் என்று கூறுவதோடு, அவர் வீட்டிற்கும் அந்த இடத்திற்கும் இடையே தொலைவு 3 கி.மீ.க்கு மேல் என்கிறார்.  எனவே 4 பிளாஸ்டிக் குடங்களை தனது ஹீரோ ஹோண்டா வாகனத்தில் வைத்து ஒரு முறைக்கு 60 லிட்டர வீதம் 4 நடை சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்.  "நான் அங்கு சென்று எங்கள் ஆழ்துளை குழாயில் கிடைக்கும் சொற்ப தண்ணீரை எடுத்து வருகிறேன், பயிர்களெல்லாம் நீரின்றி மடிகிறது" இந்த  கிராமத்தில் 25 ற்கும் மேற்பட்ட மோட்டார் இரு சக்கர வாகனங்கள் இதே பணியாக எந்நேரமும் சுற்றித் திரிவதை பார்க்கலாம் என்கிறார்.ஒவ்வொரு சுற்றும் ஏறக்குறைய 6 கி.மீ. என்பதால் பரத்தின் பணி என்பது தினமும் 20 கி.மீ. அல்லது மாதத்திற்கு 600 கி.மீ என்ற அளவில் முடிகிறது.  அதாவது 11 லிட்டர் பெட்ரோல்- ஏறக்குறைய 800 ரூபாய் இதற்காக மட்டும் செலவழிகிறது.  தண்ணீர் கிடைக்கும் நேரம் ஒவ்வொரு வாரமும் மாறிக் கொண்டிருக்கும் என்கிறார், அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிலையத்திற்கு சென்று வரும் அஜய் நிசூர்.  இந்த வாரம் மின்சாரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும், எனவே அந்த நேரத்தில் தண்ணீர் எடுத்து வருவோம்.  அடுத்த வாரம் நள்ளிரவிலிருந்து காலை 10 மணி வரை என மாறும் என்கிறார்.  அவர் தனது சைக்கிளில் 6, 7 குடங்களை கட்டிக் கொண்டு 2 - 3 கி.மீ. தொலைவிலான நடைகளை மேற் கொள்கிறார்.  அதனால் ஏற்படும் தோள்வலிக்காக இருமுறை உள்ளூர் மருத்துவ மனைக்கு சென்று வந்துள்ளார்.
நிலமில்லாமலிருக்கும் தொழிலாளர்கள் முதலாளிகளின் மூலம் சிரமத்தை சந்திக்கின்றனர்.  சில நேரம் மிகுந்த தாமதம் ஏற்படும், சில நேரம் (நீர்) ஒன்றுமே கிடைக்காமலும் திரும்ப நேரிடும் என்கிறார் ஜாம்பர்யாதவ்.  அந்த தாமதத்தால் வீட்டிலுள்ள கால்நடைகளுக்கு உணவளிப்பது தாமதப்பட்டு மோசமான நிலை ஏற்படும்.  இன்னும் 5 மாதங்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்கிறார் ஜாம்பர்.  ஏற்கனவே இந்த காலை நேரத்தில் தனது சைக்கிளில் 6 குடங்களை வைத்துக்கொண்டு இரண்டு நடைகள் முடித்துள்ளார் அவர்.
பெண்களை பாதிக்கும் சிரமம்
டாக்விகி கிராமத்தில் இரண்டு, மூன்று பானைகளை சுமந்து கொண்டு பெண்கள் நடந்தே பல முறை தண்ணீர் சுமக்கிறார்கள்.  அத்தகைய நீர் கிடைக்கும் இடத்திலிருந்து தண்ணீர் சுமந்து வர ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 மணி நேரம் அவர்கள் அந்த பணியை மேற்கொள்ள நேரிடுகிறது.  மேலும் அவர்கள் கூறும் போது ஒரே தண்ணீரையே மறு உபயோகப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.  முதலில் குளித்தபின், அதே தண்ணீரை கொண்டு துணிகளை துவைத்துவிட்டு, மீண்டும் அந்த நீரை பாத்திரங்கள் கழுவ பயன்படுத்துவோம் என்கின்றனர்.  ஆண்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுவரும் தூரத்தை விட அதிகமான தூரம் இங்குள்ள பெண்கள் நடந்து தண்ணீர் சுமக்கின்றனர்.  அவர்கள் ஏறக்குறைய 15- 20 கி.மீ. நடப்பதோடு, அதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர்.
புல்வந்திபாய் தாபே போன்ற பெண்கள் மிக மோசமாக பாதிக்கப் படுகின்றனர்.  அவர் ஒரு தலித் இனத்தவர் என்பதால் பெரும்பாலான தண்ணீர் கிடைக்கும் இடங்களில் அவர் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்.  அரசாங்கத்தால் வெட்டப்பட்டுள்ள கிணறுகளில் கூட நான் வரிசையில் கடைசியாகத்தான் நின்று தண்ணீர் எடுக்க முடியும் என்கிறார் அவர்.


கரும்பு விவசாயமும் மழையும்
பற்றாக்குறை என்பது வாழ்நிலையையும் பாதிக்கிறது.  தண்ணீர் பற்றாக்குறையால் என்னைப் போன்று ஒன்றிரண்டு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்வதும் சிரமமாகிவிடுகிறது.  என்னைப் போலவே எனது மாடுகளும் சிரமப்படுகின்றன.  நான் ஒரு நாளைக்கு பால் வியாபாரத்தின் மூலம் ரூ 300 சம்பாதிக்கிறேன் என்கிறார் சுரேஷ்வேட்பதக்.  தற்போது பெற்று வந்த பால் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்கிறார் அவர்.
உஸ்மானாபாத்தில் உள்ள டாக்விகி கிராம மக்கள் பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.  இங்கு 4000 ற்கும் குறைவான மக்கள் உள்ளனர்.  பாசனத்திற்கு 1500 க்கும் குறைவான ஆழ்துளை கிணறுகள் உள்ளது. தற்போது 550 அடிக்கும் கீழே துளையிட வேண்டியுள்ளது என்கிறார் பரத் ரவுத்.  இந்த வறட்சி பாதித்த பகுதியின் முக்கிய பயிர் கரும்பு ஆகும்.  எங்களது தேவையான சாதாரண மழை அளவு என்பது 767 மி.மீ. என்ற நிலையில் கடந்த பருவத்தில் 397 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது என்கிறார் உஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர் கே.எம்.நாகர்கோஜே.  800 மிமீ மழை என்பது மோசம் என கூற முடியாது, ஏனெனில் பல பகுதிகள் 400 மிமீ மழைதான் பெற்றுள்ளது என்கிறார் அவர் மேலும் கூறுகையில்.
800 மிமீ மழை பெய்தால் கூட 2.6 மெட்ரிக் டன் கரும்பு உற்பத்திக்கு அது போதாது.  ஒரு பயிரிடலுக்கு ஒரு ஏக்கருக்கு 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை (அதாவது ஒலிம்பிக் பந்தயங்களில் பயன்படுவது போன்ற    7 1/2 நீச்சல் குளங்களுக்கு சமமானது) டாக்விகி கிராமத்தில் சொட்டு நீர் பாசன முறையால் தண்ணீரை சேமிப்பவர்கள் மிகச் சிலரே.
மாவட்ட ஆட்சியர் நாகர்கோஜே மிக சிக்கலான பிரச்சனையை கையில் வைத்துள்ளார்.  நிலத்தடி நீர்  அரசுத் துறையில் உள்ள புள்ளி விபரங்களின்படி மிகக் குறைவாகவே உள்ளது.  அந்த மாவட்டத்தின் பெரிய, சிறிய நீர் திட்டங்கள் அனைத்திலும் தண்ணீர் இருப்பு ஏறக்குறைய "இல்லை" என்ற நிலைக்கு வந்து விட்டது.  மோட்டார் போன்ற சாதனங்களால் மேலே கொணர இயலாத சொற்ப அளவு என்பது சில மீன்களை உயிர்வாழ வைக்க மட்டுமே பயன்படும் விதமாக உள்ளது.  அந்த மாவட்டத்தின் சிறிய திட்டங்களின் மூலம் 3.45 மில்லியன் மெட்ரிக் சுற்று அடி அளவு மட்டுமே கையிருப்பு உள்ள நீரைக் கொண்டு சில நாட்கள் 1.7 மில்லியன் மக்களுக்கு வழங்க இயலும்.  அந்த மாவட்டத்தில்  தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் பாசனத்திற்கு நீர் வழங்குவதென்பது மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  இந்த மாவட்டத்தில் ஜனவரி நிலவரப்படி நிலத்தடி நீர் அளவு 10.75 மீட்டர்.  கடந்த 5 ஆண்டு சராசரியைவிட 5 மீட்டர் குறைவு.  சில பகுதிகளில் அதற்கும் குறைவாகவே உள்ளது.  இருப்பினும் அவர் இந்த ஆண்டு இந்த இருப்பை வைத்துக் கொண்டு நிலைமையை சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்.  இருப்பினும் தற்போதுள்ள பயிர் விளைச்சலை பார்க்கிற போது அடுத்த வருடம் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.
தனியாரின் வணிக ஆட்சி
டாக்விகியில் வருவாய் குறைந்து வருவதால் கடனாளிகள் அதிகரித்து வருகின்றனர்.  இங்கு ரூ 100 க்கு ஒரு மாதத்திற்கு ரூ 5 முதல் 10 வரை கந்து வட்டிக்காரர்களால் வட்டி வசூலிக்கப்படுகிறது என்கிறார் சந்தோஷ்யாதவ்.  அதாவது வருடத்திற்கு 60 முதல் 120 சதவீதம் வரை.  யாதவின் குடும்பத்தினர் மட்டும் ஆழ்துளை குழாய் பதிப்பில் ஏறக்குறைய ரூ 10 லட்சம் வரை செலவழித்துள்ளார்.  இருப்பினும் அவையாவும் வறண்டுவிட்டன.  வெயில் காலம் வெகு தொலைவில் இல்லை.  ஆனால் யார் அதைப்பற்றி எண்ணுகிறார்கள், அன்றாடம் கழிந்தால் போதும் என உழல்கின்றனர் என்கிறார் யாதவ்.
ஆனால் ஒருபுறம் வறட்சியை எதிர்த்து பலர் போராடி வருகையில், மறுபுறம் பற்றாக்குறையை பயன்படுத்தி தண்ணீர் வியாபாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.  இது எங்கு பார்த்தாலும் வெளிப்படையாக தெரியும்.  சமூக பணியாளர் பாரதி தாவாலே கூறுகையில் நாள் முழுவதும் நாங்கள் கைபேசி மூலம் எங்கிருந்து தண்ணீர் வாங்கலாம் என்பதற்காக பேசிக் கொண்டிருப்போம் என்கிறார்.  அது போல் ரூ 120 க்கு 500 லிட்டர் தண்ணீர் என்று ஒருவரிடம் விலை பேசியிருந்தேன்.  ஆனால் அவர் வரும் வழியிலேயே மற்றொருவருக்கு அதே அளவை ரூ 200 க்கு விற்றுவிட்டார்.  நான் பல முறை கேட்ட பிறகு முதல்நாள் தேவைக்கு கேட்டதை மறுநாள் இரவு 9 மணிக்கு கொண்டுவந்து கொடுத்தார்.  அதன்பிறகு நான் அருகில் இருப்பவரிடமே வாங்க துவங்கிவிட்டேன் என்கிறார்.
அந்த மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் விறுவிறுப்பாக தண்ணீர் வியாபாரம் நடைபெற்று வருகிறது.  பற்றாக்குறை அதிகரித்திருக்கும் போது விலை ஏறுகிறது.  அரசு 720 ஆழ்துளை கிணறுகளை குத்தகைக்கு எடுத்து அதன் உரிமையாளர்களுக்கு பிரதிமாதம்  ரூ 12000 வீதம் அளிக்கிறது.  அங்கு பொது மக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்க வேண்டும்.  ஆனால் நெடுந்தொலைவு, மற்றும் கூட்டம் அதிகமிருப்பதால் அங்கு தண்ணீர் பெறுவது சிரமமான ஒன்றாகிவிடுகிறது.  அங்கு தண்ணீர் தனியார் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது.  அவர்களிடம் பேரம் பேசி 500 லிட்டர் ரூ 200 கொடுத்து வாங்க வேண்டியதாகிறது.  நீங்கள் குறைவாக வாங்கினால் விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும்.  வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும்.  ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒருவர் ஆழ்துளை கிணறை வைத்துக் கொண்டு பற்றாக்குறையை பயன்படுத்தி பால் வியாபாரம் போல் தண்ணீர் வியாபாரம் செய்து வருகின்றனர்.  இங்கு தண்ணீர் பணமாக கொட்டுகிறது.

நன்றி - தி இந்து - தமிழில் - எஸ்.சம்பத்

என்று மடியும் இந்த கொத்தடிமை முறை ?


என்று மடியும் இந்த கொத்தடிமை முறை ?
 அனுமேகா யாதவ் / தமிழில் எஸ்.சம்பத்

(கடனால் நெறிபடும் கோட்டா மாவட்ட கொத்தடிமைகள் என்ற தலைப்பில் தி இந்து நாளிதழில் 19 பிப்ரவரி 2013 அன்று வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)
கடன் எனும் சுத்தியலால் இடி - ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்ட கல்குவாரியில் குடும்பத்தோடு கொத்தடிமையாக பணிபுரியும் பாபுலால் கைர்வா
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் கிரானைட் கல் குவாரியில் சாம்பல்-பழுப்பு நிற பலகை கற்களின்  மீது சூரிய ஒளி அஸ்தமிக்கும் நேரம்.  பாபுலால் கைர்வா, குவாரியின் விளிம்பில் அமர்ந்து கொண்டு கல்லின் மேல் டான்கி என்ற பெரிய அளவிலான நகம் போன்ற உளியை வைத்து சுத்தியலால் முனைப்பாக தட்டிக் கொண்டிருக்கிறார்.  பாபுலால் அந்த கல் நேர் கோடாக உடையும் வரை தட்டிக் கொண்டிருப்பார்.  ஒவ்வொரு 2 க்கு 10 சதுர அடி அளவில் பலகை போன்று காலடிக்கு பதிக்கும் கல் சந்தையில் ரூ 1600 வரை ஈட்டித் தருகிறது.  ஆனால் 38 வயதாகும் அந்த தொழிலாளிக்கு எந்த கூலியையும் பெற்றுத் தருவதில்லை.
"நான் இந்த குவாரியின் முதலாளி பகதூர் பாபுவிடம் 5 வருடம் முன்பாக ரூ 10000 கடன் பெற்றேன்.  அவர் தற்போது எனது கடன் இரட்டிப்பாகியுள்ளது என்கிறார்.  அவர் எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 500 கூலியாக குடும்ப செலவிற்காக கொடுக்கிறார், வருட இறுதியில் முந்தைய கடனுக்காக அதை சரிக்கட்டிக் கொள்கிறார்" என்கிறார் அந்த தொழிலாளி.  அந்த கல் நேர் கோட்டில் உடையவில்லையென்றால், அவர் முதலிலிருந்து மீண்டும் உடைக்கத் துவங்க வேண்டும்.  அவரின் மனைவி ஹீராபாய் மற்றும் மூன்று மகள்கள் கற்களை சுமப்பதில் அவருக்கு உதவியாக இருக்கின்றனர். "கடன் வருடந்தோறும் அதிகரிக்கிறது, நான் ஒரு  ரூபாயை கூட கையில் பெறுவது கிடையாது.  நான் என் கிராமத்திற்கு ஓடிவிட்டால், குவாரி உரிமையாளர் ஜீப்பிலோ, மோட்டார் சைக்கிளிலோ வந்து என்னை மீண்டும் அழைத்து வந்துவிடுவார்" என்கிறார் அவர்.
அரிய வகை கடப்பா (சேண்ட் ஸ்டோன்) கல் உடைக்கும் குவாரிகள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்ட எல்லையிலிருந்து ராஜ்புரா - தாபி என்பவற்றிற் கிடையில் 100 கி,மீ நீளத்திற்கு தொடர்ச்சியாக அமைந்துள்ளது.  பெரும்பாலான கற்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தில் கட்டிட பணிகளுக்கு பயன்படுகிறது.  கடந்த சில வருடங்களாக அவை சவுதி அரேபியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  கோட்டாவில் கற்கள் வாங்க வந்திருக்கும் பாடக்சிங் "குவாரியின் அளவிற்கேற்ப அவர்களின் ஆண்டிறுதி லாபம் என்பது ரூபாய் ஐந்து கோடி வரை இருக்கும் என்கிறார்".  இங்கே கிடைக்கும் இந்த அரிய வகை கற்கள் கையால் செதுக்கித்தான் உடைக்க வேண்டும், இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது என்கிறார் வடக்கு ராஜஸ்தானை சேர்ந்த கற்கள் வாங்கி, விற்கும் வியாபாரி ஓம் பிரகாஷ் அகர்வால்.
பாபுலால் கைர்வா குடும்பத்துடன் சேர்ந்து 5 தொழிலாளிகள் அந்த குவாரியில் உள்ளனர்.  மிகப் பெரிய குவாரி என்பது நேவாஜி குஜ்ஜார் என்பவருக்கு சொந்தமாக உள்ளது.  அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.  பெரும்பாலான தொழிலாளர்கள் மேற்சொன்னவாறு கடன் பெற்று அதை அடைக்கும் வகையில் கொத்தடிமைகளாகத்தான் உள்ளனர்.  நான் இங்கு என் குடும்பத்துடன் 9 வருடம் முன்பாக வந்தபோது ரூ 20000 முன்பணமாக பெற்றேன்.  அந்த வருட முடிவில் குவாரி உரிமையாளர் எனது கடன்  ரூ 24000 என கூறியதாக சொல்கிறார் ஜேட்கா சாஹேப்.  அவர் ஒவ்வொரு 2 - 3 வாரத்திற்கொரு முறை கூலி  ரூ 400 லிருநது 500 வழங்குவதாக சொல்கிறார்மத்தியப் பிரதேசம், ஜாபுனா மாவட்டத்திலிருந்து வரும் தொழிலாளி மங்கள்ராமா. 

பாலைவனமாய் போன கிராமம்

பாபுலால் கைர்வாவின் கிராமத்திலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள பாரன் மண்டலத்தில் கிஷ‌ன்கைஞ்ச் பகுதியில் கிராமமே பாலைவனம் போல் வெறுமையாக இருக்கிறது.  அங்கிருந்து 500ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு, நிலங்களை இழந்து தீபாவளி முடிந்து கோட்டாவிலுள்ள குவாரிகளுக்கு சென்று விட்டனர்.  அவர்கள் மே மாதம் தான் திரும்ப முடியும்.  அந்த கிராமத்திலுள்ள முதியவர்கள் அங்கிருந்த கைர் என்ற மரத்தின் காரணமாக அவர்கள் குடும்ப பெயர் கைர்வா என அமைந்ததாக கூறுகின்றனர்.  நாங்கள் அந்த மரங்களை வெட்டி உருப்படிகளாக செய்து விற்போம் என விவரிக்கிறார் கணேஷ் ராம் கைர்வா.
மாநில அரசு இந்த வகை பணிகளுக்காக கைர்வாக்களுக்கு கூட்டுறவு சங்கங்களை அமைத்தது.  ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காடுகள் அழிந்து வந்ததால், கூட்டுறவு சங்கங்களும் மூடப்பட்டன.  "தற்பேழ எல்லோரும் குவாரிகளுக்கு செல்கிறோம், எனது மகன் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து கடந்த சங்கராந்தியின் (ஜனவரி) போது ரூ 25000 கடன் என்ற நிலையில் இறந்து விட்டான்.  நான் அவனுக்கு பதிலாக பணியை தொடர இயலாத வண்ணம் வயோதிகனாக உள்ளேன் என அதன் உரிமையாளரிடம் கூறினேன்.  எனது இரண்டு மகன்களும் இந்த குவாரியில் பணிபுரிந்துள்ளனர்.  தேவராஜ், எனது இளைய மகன் அங்கு சென்றபோது அவனுக்கு வயது 18குவாரி முதலாளி எனது அந்த மகனை ஜீப்பில் திரும்ப அழைத்து வந்தார்.  தேவராஜ் அவரது முதுகில் இருந்தவன் இரத்தமாக வாந்தி எடுத்தான்.  உடனடியாக அவனை பாரூனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்" என்கிறார் ஜசோதாபாய்.
கிராமத்திலுள்ளவர்கள் பாரூன் மற்றும் கோட்டா மாவட்டத்தில் கட்டிடப் பணியில் நன்கு சம்பாதிக்கலாம், ஆனால் ஒரு முறை குவாரிக்கு சென்றவர், கடனை அடைப்பதற்காக தொடர்ந்து அங்குதான் செல்ல வேண்டியுள்ளது என்கின்றனர்.  எனது மகன் மான் சிங் குவாரியில் பல வருடம் வேலை பார்த்தான்.  கல் உடைக்கும் போது இரண்டு விரல்களை இழந்தான்.  அப்போது அவன் கணக்கில் ரூ 40000 கடன் இருந்தது.  அவன் கிராமத்திற்கு திரும்பியவுடன், துரத்திக் கொண்டே முதலாளி வந்தார்.  இரண்டு விரல்களை இழந்த நிலையில் அவனால் எப்படி பணிபுரிய முடியும் என நான் கெஞ்சியவுடன், போகட்டும் என விட்டுவிட்டனர் என்கிறார் கோர்லால்.
அரசின் அக்கறையற்ற நிலை
தெற்கு ஆசியாவிலேயே இந்தியாதான் முதன் முறையாக கொத்தடிமை முறையை, கொத்தடிமை தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் 1976ன் மூலம் நீக்க முடிவு செய்தது.  சந்தர்ப்பவசமாக அவசர நிலை பிரகடன காலமான 1975 - 1977 ல் சில அதிகாரிகள் அதற்கான விதிகளை இந்திராகாந்தியின் 20 அம்ச திட்டங்களுள் ஒன்றாக முன்னிறுத்தி விவசாய தொழிலாளர்களின் கொத்தடிமை முறையை முடிவிற்கு கொண்டு வந்தனர்.
எப்போதுமில்லாத வகையில் காந்தி சமாதான நிறுவனம் 1978ல் மேற்கொண்ட ஆய்வில் 10 மாநிலங்களில் 26 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனர் எனவும் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆதிவாசிகள் எனவும், 60 சதவீதம் பேர் தலித்துக்கள் எனவும் ஆய்வு புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.  அதே வருடம் தேசிய மாதிரி ஆய்வு மையம் மேற்கொண்ட 32 வது சுற்று ஆய்வில் அலுவலக ரீதியாக 16 மாநிலங்களில் 3.43 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனர் என குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு இது குறித்து தேசிய அளவிலான ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.  மாநிலங்கள் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு 2012ல் அளித்த ஆய்வறிக்கையில் 18 மாநிலங்கள் கொத்தடிமை தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தில் "இல்லை" என தெரிவித்திருப்பதான விபரத்தை தி இந்து நாளிதழ் வெளிக் கொணர்ந்துள்ளது.
ஒன்றுபட்ட நடவடிக்கைகளின் மூலம் தொழிலாளர்களுக்கு வருமான பாதுகாப்பு, உணவிற்கான  பாதுகாப்புகளை உறுதி செய்வதன் மூலம்தான் கொத்தடிமையை ஒழிக்க முடியும்.  அலகாபாத் மாநிலத்தில் குவாரிகளில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த கோல் பழங்குடியினர் ஒன்றுபட்ட நீண்ட கால போராட்ட நடவடிக்கைகளின்  மூலம் சுரங்க உரிமையை வென்றெடுத்தனர் என்கிறார் பொருளாதார நிபுணர் ரவி ஸ்ரீவத்சவா.  அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004ல் நிறுவிய முறைசாரா பிரிவுகளில் தொழில் நடத்துவோருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினரும் ஆவார்.  தற்போது பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களுக்கான குறைந்த பட்ச கூலியை கணக்கிட்டு அறியக் கூட சிரமப்படுகின்றனர்.  ஏனெனில் சட்ட ரீதியாக தேசிய அளவிலான குறைந்த பட்ச கூலி நிர்ணயம் என்பதற்கான தளம் இல்லை.  நாங்கள் அதற்கான அழுத்தமாக பரிந்துரைத்ததோடு- அவர்களின் சமூக பாதுகாப்பு- உழைப்புத்திறன், போன்றவற்றை விளக்கி அனைத்து தொழிலாளர்களுக்குமான பயிற்சி முகாம்களை நடத்துகிறோம் என்கிறார் அவர்.  ஒரு தொழிலாளிக்கு அனைத்து பிரிவுகளிலும் ஒரு நாளைக்கு ரூ 115 குறைந்த பட்ச கூலி என்ற தொழிலாளர் துறை அமைச்சகம் முன் மொழிந்தது 2009 லிருந்து தற்போது வரை நிலுவையிலுள்ளது. 
பின்ஜனா கிராமத்திலுள்ளவர் எங்களின் கடன் சுற்று என்பது அந்தந்த தொழிலாளியின் உயிர் பிரிதலோடுதான் முடியும் என்கின்றனர் வேதனையுடன்.  ஒருவர் இறந்து, அவர் குடும்பத்தில் அவரின் கடனிற்காக மாற்றாக பணிபுரிய ஒருவரும் இல்லை என்ற நிலை வரும் போதுதான் அவரின் கடனும் சாகும் என்கிறார் கோர்லால்.
இந்திய உச்ச நீதிமன்றம் கொத்தடிமை குறித்து என்ன சொல்லியிருக்கிறது?
1994 - மாநிலங்கள் உடனடியாக கொத்தடிமை தொழிலாளர்கள், அவர்களிடம் பணி வாங்கும் முதலாளிகள், ஒப்பந்தகாரர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும், காலாண்டிற்கொருமுறை உச்ச நீதிமன்ற சட்ட உதவி மையத்திற்கு அது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டுமெனவும் உத்திரவிட்டது.
1997 - கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு அமுல்படுத்துவதை கண்காணிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நியமிக்கப்பட்டது
2001 - தேசிய மனித உரிமை ஆணையம் திரு எஸ்.ஏ.சங்கரன் தலைமையில் நியமித்த நிபுணர் குழு மாநில அரசுகளை விமரிசித்து தனது அறிக்கையை அளித்தது.
2004 - மாநிலங்கள் அரையாண்டுக்கு ஒரு முறை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உத்திரவிடப்பட்டது.  மேலும், புலனாய்வு குழுக்கள் அமைக்கவும், தொழிலாளர்கள் புனரமைப்பிற்காக நிலம் சார்ந்து, குறிப்பிட்ட திறன் சார்ந்து, பணி சார்ந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் உத்திரவிட்டது
2010 - 2001 லிருந்து 2010 வரை கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு ஆய்வுகளுக்காக தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய 4.94 கோடி தொகை எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் கேட்கப்பட்டது.
2012 - மாநிலங்களில் புதிதாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வறிக்கைகள் கணணி மயப்படுத்தப்பட்ட ஆவண புள்ளி விபரங்களாக வைக்கப்படவேண்டும் எனவும் உத்திரவிட்டது

நன்றி / தி இந்து ---

Wednesday, September 28, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே...

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளியில் இரு ஆசிரியைகள் யுகேஜி படிக்கும் 4 வயது மாணவியிடம் வன்புணர்ச்சி மேற்கொண்டதாக புகார். இரு ஆசிரியைகள் யார் எனில் எல்கேஜி ஆசிரியை ஒருவர் மற்றும் அந்த பள்ளியின் முதல்வர்?!


பள்ளி நிர்வாகம் மற்றும் சில 'உயர்மட்ட' அழுத்தங்களின் காரணமாக மந்தமானது காவல்துறை நடவடிக்கை. பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரின் மனு நேரடியாக தலைமை நீதியரசர் உள்ளிட்ட முதன்மை நீதிபதிகளின் கவனத்திற்கு வர அதிர்ச்சியில் உறைந்து போன நீதிமன்றம் மறுநாளே மாவட்ட காவல் உயர் அதிகாரி மற்றும் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆகியோரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி உத்திரவிடுகிறது. மறுநாள் ஆஜரான காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இரு ஆசிரியைகளுக்கும் உயர்நீதிமன்ற தனி நீதிபதி தனித்தனியே முன் பிணையம் வழங்கியுள்ளதை சுட்டிக் காண்பிக்கின்றனர்.


அதேசமயம் மனுதாரர் தரப்பில் குற்றம் நடைபெற்றது ஆகஸ்ட் 2 ம் தேதி, ஆகஸ்ட் 4ம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனை மருத்துவர் குழந்தையை பரிசோதனை செய்த ஆவணத்தையும் தாக்கல் செய்து, முன் ஜாமீன் என்பது செப் 8ல் தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காண்பித்துள்ளனர். தலைமை நீதிபதி குற்றத்தின் கடுமையைச் சுட்டிக் காண்பித்து வழக்கை மாநில காவல்துறை மீது நம்பிக்கையிழந்து சிபிசிஐடி விசாரைணக்கு மாற்ற உத்திரவிட்டதுடன், அளிக்கப்பட்ட முன் பிணையத்தை ரத்து செய்ய தனியாக மனுச்செய்துகொள்ளாமெனவும் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பாக மதுரைக்கு அருகிலுள்ள பொதும்பு எனும் கிராமத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் சிறிய பெண் குழந்தையுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்ற செய்தி. சமீப காலமாக குழந்தைகளுக் கெதிரான வன்முறை, குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது என்கிறது ஆய்வு செய்திகள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகாதது, கணவனைவிட மனைவி அல்லது மனைவியைவிட கணவர் கூடுதல் சம்பாதிப்பது, தனிமனித ஈகோ, தொலைகாட்சி, பத்திரிகை போன்ற ஊடகங்களில் 'இது மிக சாதாரணம்' என்பது போல் பரப்பப்படுகிற முறைதவறிய உறவுகள்- ஆகியவை சம்பாதிப்பவர்கள் மத்தியில் முறை தவறல்களை தோற்றுவிக்கிறது.
பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை முடிந்து போய் குழந்தைகள் தனிமையில் பாசமற்று விடப்படுவதால், குழந்தைப்பருவ குற்றங்கள், தவறான எண்ணங்கள் தோன்றுகின்றது எனலாம். ஆனால் அறியாப்பருவ குழந்தைகளை பயன்படுத்தி பெரியவர்களின் வன்புணர்ச்சி, பாலியல் பலாத்காரம் என்பதை ஏன், எவ்வாறு என்றும், எங்கே இந்த சமூக அமைப்பு கற்றுக் கொடுத்தலில் தோற்றிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவே பதைக்கிறது நெஞ்சம். ஒரு கரிசல்காட்டு சிறுகதையில் எழுத்தாளர் திரு கி.ராஜநாராயணன், ஒரு கிராமத்தில் கழிப்பறையை பயன்படுத்த மக்களுக்கு கற்றுத் தருவதற்கு அங்குள்ள பள்ளியிலிருந்து துவங்க வேண்டுமென சொல்லியிருப்பார்.
தினக்கூலி வேலை பார்ப்பவர் தொடங்கி ஏழைகளும், எளியவர்களும் தன் நிலை தனது சந்ததிக்கு வரக்கூடாதென கற்பதற்கு பள்ளிகளுக்கு தம் குழந்தைகைள அனுப்புகின்றனர். அதுவே பாதுகாப்பானது என்றும் எண்ணுகின்றனர். அத்தகைய எழுத்தறிவிக்கும் இறைவனே எமனாகிப் போனால், நெஞ்சு பொறுக்குதில்லையை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்-- என உரக்கக் கூவத் தோன்றுகிறது.

உரிய கல்வித்தகுதி மற்றும் ஆசிரியர் பயிற்சியுடன் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு முதலில் உறவுகளின் மென்மை, மேன்மை மற்றும் வாழ்வியலை கற்றுக் கொடுத்துவிட்டு பின்னர் அவர்களை பாடம் எடுக்கச் சொல்வதே குற்றங்கள் குறைய தீர்வாக இருக்குமோ? முதலில் அவர்கள் உறவுகைள நேசிக்க கற்றுக் கொள்ளட்டும், பின்னர் வாசிக்க கற்றுக் கொடுக்கட்டும்.

Monday, August 9, 2010

உள்ளே… வெளியே…




தோளில் துண்டு
தொனியில் கோபம்
தகிக்கும் சூடு
தலைவரின் பேச்சு
தினமொரு ஆர்ப்பாட்டம்
தெருவெங்கும் விளம்பரம்

தொழிலாளர்கள் சிலரின்
விடுப்பை மறுத்த
மேலாளர் முன்சென்று

அவசர வேலை
இயலாமை சூழல்
ஈன்றவர் வயோதிகம்
உற்றார் இறப்பு
பெண்ணின் பேறுகாலம்
எதிர்பாரா இடர்பாடு -என
விடுப்பு எடுப்பது
தவிர்க்க இயலாது
விடுப்பை மறுத்து
சம்பளம் பிடித்தால்
போராட்டம் வெடிக்கும்
தலைவரின் வேகமான
முழக்கத்தின் முடிவில்

“பெரிய சங்கம்”
நமக்கேன் வம்பென
மறுத்த விடுப்பு மனுக்களில்
மேலாளர் ஒப்பமிட
தலைவர் வாழ்கவென
தொழிலாளர் வாழ்த்துடன்

இரவு உணவிற்கு
இல்லம் திரும்பிய தலைவர்
“முனியம்மா” வரவில்லை
முழுதினமும் கடும் வேலை
சமைக்கவோ நேரமில்லை
சாப்பாடு வாங்கிவா -என
சகதர்மினி உத்திரவிட

அடிக்கடி விடுப்பா
அவளின் சம்பளத்தைப்பிடி
வழிக்கு வருவாள் தானாக
கட்டளையாய் முழங்கிவிட்டு
கடைக்குத்தான் புறப்பட்டார்
தொழிற்சங்க தலைவரும்
தூக்குவாளி கையிலெடுத்து..

Sunday, August 8, 2010

மறுக்கப்படும் நீதி….




சமீபத்தில் ஆந்திரப் பிரதேச போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி பணிக்காலத்தில் இறந்துவிட்ட தொழிலாளரின் மனைவி வாரிசுப் பணி கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ள “அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை கேட்பதற்கு அவரது வாரிசிற்கு உரிமையில்லை” எனவும், இந்த விஷயத்தில் “இறந்த அரசு ஊழியர் குடும்பத்தினரின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்” எனவும் தெரிவித்திருப்பது தொழிலாள வர்க்கத்தினரிடையே அதிர்ச்சியையும் வேதனையும் தோற்றுவித்திருக்கிறது.

படிக்கவில்லை. இந்த தனித் தீர்ப்பையும் விமரிசிக்க இதை எழுதவில்லை. தொழிலாளர்கள் சார்ந்த வழக்குகள் பல்வேறு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் மாதந்தோறும் முடிவடைவதின் தீர்ப்புக்கள் தொகுப்பாக பிரதிமாதம் வெளியிடும் லேபர் லா ஜர்னல் என்பதை கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சந்தா செலுத்தி படித்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பாக நீதியரசர்கள் மேதகு வி.ஆர்.கிருஷ்ணய்யர், மேதகு ஓ.சின்னப்பரெட்டி, மேதகு ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் நீதிபரிபாலனம் செய்த காலங்களில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் சுமார் 50 தீர்ப்புகளில் 35 தொழிலாளர்களுக்கு சாதகமாகவும், 10 நிர்வாகங்களுக்கு சாதகமாகவும், 5 தள்ளுபடி என்ற வகையிலும் தீர்ப்புக்கள் இருந்து வந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக 60 தீர்ப்புகள் வெளியானால் அவற்றில் 40 நிர்வாகங்களுக்கு சாதகமாகவும், 10 தொழிலாளிக்கு பகுதி சாதகமாகவும், 5 தள்ளுபடி என்ற வகையிலும் 5 நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற வகையிலும் அமைகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களெல்லாம் திருத்தப்பட்டு விட்டனவா? அல்லது முதலாளி / நிர்வாகி அனைவரும் மிகச் சரியாக செயல்படத் துவங்கிவிட்டனரா என்கிற ஐயம் எழுகிறது. இது போன்ற வழக்குகளில் மனுதாரர்களின் சமூக அந்தஸ்து என்பதை நீதியரசர்கள் / அரசு வழக்கறிஞர்கள் தாம் அமர்ந்து செல்லும் காரின் குளிரூட்டப்பட்ட கண்ணாடி வழியாக பார்க்கின்றனரோ என அச்சப்பட வேண்டியுள்ளது. இன்றைய உலகமயமாக்கம், தனியார் மயமாக்க சூழலில் பல நீதித்துறை சார்ந்தவர்களும் பங்கு வர்த்தகம், தொழில் போன்றவற்றில் பங்குதாரர்களாக / பகுதி முதலாளிகளாக இருப்பதால் முதலாளி அந்தஸ்தில் இருந்து போராடும் தொழிலாள வர்க்கத்தினரை காணுகின்றனரோ என்கிற ஐயம் எழுகிறது.

கற்ற கல்வி, அனுபவத்தின் அடிப்படையில் நடு நிலைமை வகிக்க வேண்டிய நீதித்துறையில் யார் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் அந்த கட்சி சார்ந்து வழக்கறிஞர் பிரிவு. அவரின் சமூக பார்வை என்பது அவர் கட்சித்தலைவாpன் சொல்சாரிந்தே இருக்கும் என்பதால் நடுநிலைமை சிந்தனை எங்கிருந்து வரும். இவர்களே பின்னர் நீதியரசராகின்றனர்.

குறிப்பாக அரசு போக்குவரத்துப் பணியில் 24 மணி பணி நேர சுழற்சியில் அன்றாடம் பணிக்கு சென்றால் திரும்புவது நிச்சயமில்லை என்ற அபாயத்தில் பணிபுரியும் தொழிலாளி 20 வருட பணிக்குப் பிறகு இறந்து போகிறார் என்று கொண்டால், அவரின் பணிமுடிவிற்கு கிடைக்கும் பலன் தொகைகளை மட்டும் வைத்து அவருடைய குடும்ப வாழ்க்கை அந்தஸ்தை தீர்மானிக்கிறது நீதிமன்றங்கள். ஆனால் அந்த 20 ஆண்டு பணியில் அந்த பணியாளருக்கு குடும்பத்தினால் ஏற்பட்ட சமூக பொறுப்புக்கள் அதாவது குழந்தைகள் கல்வி, தாய், தந்தை குடும்பத்தினரின் மருத்துவ செலவினங்கள் போன்றவற்றிற்கு உறவினர்கள், நண்பர்களிடம் வாங்கிய கடன்களுக்கே பணியில் இறந்தால் கிடைக்கும் ரூ 1 லட்சம், பணிக்கொடையில் ஒன்றிரண்டு லட்சம், பணிக்கால கடன்கள் போக எஞ்சியிருக்கும் சொற்ப வருங்கால வைப்பு நிதி இருப்பு ஆகியவை அனைத்தும் சில நாட்களில் கரைந்து விடும். அதன்பின் குடும்பத்தலைவரை இழந்த அந்த குடும்பத்தின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என்பதை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் முழுமையாக எடுத்துரைப்பதில்லை.

வழக்கறிஞர்களில் சிலர் என்மீது கோபப்படக் கூடாது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் தனது ஆதங்கமாக தெரிவித்தது என்னவெனில், தற்போது புதிய வழக்கறிஞர்களில் பலர் முந்தைய தீர்ப்புக்கள், கடந்த கால வழக்குகள் ஆகியவற்றை படிப்பதில்லை. குறிப்பாக பணிநிலை (service matters) வழக்குகளில் நிறைய படிக்க வேண்டும். மாறாக மனுதாரர் ஒரு தாவாவுடன் வந்தால் அதை அப்படியே முதலாளி / நிர்வாகிக்கு ஒரு மனுவாக பதிவுத் தபாலில் அனுப்பிவிட்டு அந்த ஒப்புதல் கார்டுடன் ஒரு மாதம் கழித்து வரச்சொல்லி “மனுதாரர் மனு மீது எந்தவித பதிலுமில்லை - மனுவை பரிசீலனை செய்து இருவார காலத்தில் தீர்வளிக்க வேண்டும்” என்ற வகையில் நீதிமன்ற உத்திரவு கேட்டு மனுச்செய்து சில-பல ஆயிரங்களை கட்டணமாக பெற்றுக் கொண்டு சிரமப்படும் வாதங்களின்றி அத்தகைய மேலோட்டமான எளிய உத்திரவுகளை பெற்று விடுகின்றனர். நிர்வாகமும் குறிப்பிட்ட மனுவை பரிசீலனை செய்து இன்ன காரணங்களினால் கோரிக்கை ஏற்க இயலாது என பதிலுரை கொடுத்து நீதிமன்ற உத்திரவை மதித்து விடுகின்றனர். இத்தகைய சட்ட வழிகாட்டுதல்களினால் தீர்வின்றி தெருவில் நிற்பது தொழிலாளர் வர்க்கம் மட்டுமே.

நாடோடி மன்னன் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வசனம் ஓரிடத்தில் “நீ மாளிகையிலிருந்து குடிசையை பார்க்கிறாய் - நான் குடிசையிலுள்ளோருடன் இணைந்து நின்று மாளிகையைப் பார்க்கிறேன் - அதுதான் நமக்குள் வித்தியாசம்” என்றொரு வசனம் வரும். வாரிசுப் பணி, தலைமை தண்டனையான பணிநீக்கம் போன்ற வழக்குகளில் நீதித்துறை இன்னும் சற்று மனிதாபிமானத்துடன் பார்த்தால் நீதி மறுக்கப்படுவது குறையும்.

இந்த கட்டுரை நான் எழுதி கடந்த 19 ஏப்ரல் 2008ல் தினமணி நாளிதழ் நடுப்பக்க கட்டுரையில் பிரசுரமாகியது -நன்றி - தினமணி (இதில் ஒன்றிரண்டு வரிகளை நீக்கியிருந்தனர்/என்னிடம் தற்போது பழைய பேப்பர் இல்லாததால் அன்று எழுதியதை அப்படியே தற்போது இடுகைக்காக வெளியிட்டுள்ளேன்)

ஊடகங்களுக்குத் தேவை ஒழுக்கம்

எனக்கு வயதிற்கு வந்த ஒரு பெண் குழந்தையும், இன்னும் வயதிற்கு வராத ஒரு பெண் குழந்தையும் கல்லூரி மற்றும் பள்ளியில் படித்து வருகின்றனர். அடுத்த வீட்டிலுள்ள அவர்களது தோழி அல்லது தோழியின் தாயார் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வித்தியாசமான ஓவிய பயிற்சி, சிறிய குழந்தைகள் பாடுவது, மந்திர-தந்திர நிகழ்ச்சிகள் வரும் போது அவர்கள் வீட்டுவாசலிலிருந்து எட்டிப்பார்த்து என் குழந்தைகள் பெயர் சொல்லி தொலைக்காட்சி சானல் பெயர் சொல்லி உடன் பார்க்கச் சொல்வார்கள் உடனடியாக என் வீட்டிலுள்ளவர்களும் அதை பார்ப்பார்கள். இது ஏறக்குறைய அனைத்து இடத்திலும் சகஜமே.

இரண்டு தினங்களுக்கு முன்பாக என் பெண் குழந்தைகள் வீட்டின் முன்புறம் அமர்ந்து அவரவர் வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருக்கும் போது இரவு, பக்கத்து வீட்டு பெரியவர் என்னை அழைத்து சன் டி வி பார் என்றார். உடனே எனக்கு முன்பாக என் பெண்கள் எழுந்து என்னவென்ற ஆவலுடன் உள்ளே சென்று தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்து விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருக்கையில் தமிழக மின்வாரியத்தின் உபயத்தால் நல்ல வேளை மின்சாரம் தடை ஏற்பட்டது. அதற்குள் எனது அலுவலக நண்பரிடமிருந்து வீட்டு தொலைக்காட்சியில் நீலப்படம் ஓடுகிறது என ஒரு ஆன்மீக சொற்பொழிவாளரின் அந்தரங்கம் சந்தி சிரிப்பதை தெரிவித்தார். நான் மெழுகு திரி தேடுவது போல் உடனடியாக கேபிள் இணைப்பை துண்டித்து விட்டேன்.

இப்படி தப்பித்தார்கள் என்றோ, எத்தனை குடும்பத்தில் குழந்தைகளுடன் அமர்ந்து பார்த்து சானலை மாற்ற முடியாமல் தவித்தார்கள் என்றோ தொpயாது. பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்கள் நாட்டில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது அவசியமே. ஆனால் அதை எவ்விதம் கொண்டு செல்வது என்பதிலும் ஒரு நாகரிகம் கடைபிடிக்க வேண்டும் என்பதே இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் தனித்து பேசிக் கொள்ளும் போது கவலைப்படும் பொருளாக உள்ளது.

பலரும் ஆன்மீக சொற்பொழிவாளராக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றி, அவரது எழுத்துக்களை ஆராதித்து வரும் வேளையில் அவரது சற்று மோசமான அந்தரங்கம் வெளிப்பட்டதென்றால் அதை மக்கள் மத்தியில் கொண்டு போவதொன்றும் தவறான செயல் அல்ல, என்பதுடன் மக்களும் திடீரென ஒருவர் மீது மாயை கொண்டு ஏமாறக்கூடாது என்பதற்காக இத்தகைய செய்திகள் அவசியம்தான் என்றாலும், அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு நாகரிகம் கடை பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

இன்றைக்கு எந்த வாரப் பத்திரிகை எடுத்தாலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் நடிகைகளின், சில பிரமுகர்களின் அந்தரங்கம் என்ற பெயரில் பாலியல் வக்கிரங்கள் இல்லாமல் பத்திரிக்கை இல்லை என்ற அவலமான சூழல் ஏற்பட்டுள்ளது வருத்தமான ஒன்றாகும். அது மட்டுமல்லாமல் தொலைக் காட்சியின் அனைத்து விதமான சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல் எனப்படும் நாடகங்களிலும் தவறாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தர்மம் கண்டிப்பாக மீறப்பட்டு உறவின் ஒழுக்கேடு கண்டிப்பாக இடம் பெற்றால்தான் அந்த தொடர் மக்கள் மத்தியில் பேசப்படும் தொடர்ந்து பார்க்கப்படும் என்கிற நெறிமுறையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டதோ என அஞ்ச தோன்றுகிறது.

இந்த செய்திக்கு அடுத்த நாள் நகரப் பேருந்தில் காலை அலுவலகத்திற்கு சற்று முன்னதாக செல்வதற்காக பயணிக்கும் போது முன் இருக்கையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் கைபேசியில் படம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். எனது இறங்கும் இடம் வந்து எழுந்திருக்கையில் பார்த்தால் கும்பகோணம் குருக்கள் படம் ஓடிக்கொண்டிருந்தது. மாணவர்களின் நிலையை நினைத்து அழுவதா, வருந்துவதா என தெரியவில்லை.

பலமுறை மேற்குறித்த நித்தியானந்தா செய்தி ஓளிபரப்பானபின் நாட்டின் முதல்வர் அது ஒளிபரப்பிய விதத்தை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னதாக சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக காண்பிக்க முனைந்த நிருபர் கூட ஒரு மாணவர் மிக அதிகமான காயம் பட்டு ஒரு மரக்கிளையை பிடித்து எழ முடியாமல் திணறுவதை கூட மனிதாபிமானத்தில் அவரை காக்க முனைவதை விட படம் பிடிப்பதில் அதன் மூலம் தனது ஊடக நிறுவனத்தில் இன்சென்டிவ் பெறுவதை நோக்கமாக மாறிப்போனது கூட ஊடக செய்தி வெளியிடுதலில் மாறிப்போன மனித நேயத்தை சுட்டிக்காண்பித்தது நினைவிருக்கலாம்.

குழந்தைகளின் பாடும் திறனை போற்றும் வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் வெவ்வேறு பெயரில் எடுத்துக்கொண்டிருக்கிற நிகழ்வில் கூட கணவன், மனைவி, காதலன், காதலி ஊடலையும் நாசுக்காக சொன்ன அந்தக்கால பாடல்கள் இல்லாமல் பாடும் குழந்தையின் வயதிற்கு சற்றும் பொருத்தமில்லாத இந்தக்கால கொச்சைப்படுத்தப்பட்ட காதல் பாடலை குழந்தைகள் பாடுவதை பெற்றோர் அமர்ந்து ரசித்து மகிழந்து தாங்களும் தங்களின் குழந்தையும் தொலைக்காட்சியில் வந்ததை காலமெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்ற பெயரில் வக்கிரமும் ரசனையாகிப்போனதும் வருத்தமளிக்கிறது.

பேருந்து பயணத்தின் போது படிப்பதற்காக எந்த வாரப்பத்திரிகையை வாங்கினாலும் அதை நினைவாக பேருந்தின் இருக்கையிலேயே விட்டு விட்டு வந்து விட வேண்டும். ஏனெனில் குழந்தைகள் உள்ள வீட்டில் வந்து தவறியும் கூட பிரித்து பார்த்துவிட முடியாது என்ற நிலைதான் உள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னால் தினசரி பேப்பருடன் வாரப்பத்திரிகையை வாசலிலிருந்து பேப்பர் பையன் தூக்கி போட்டவுடன் பெரியவர் முதல் குழந்தைகள் வரை ஆவலுடன் எடுத்து படித்து விபரங்களை தெரிந்து கொள்ள ஆவல் மேலிட்ட நிலை மாறி இன்றைக்கு வாரப்பத்திரிகை வீட்டிற்கு கொண்டு வந்தால் வயதானவர்கள் வாங்கி வந்தவனை வசவு பாடும் நிலைக்கு மாறிவிட்டது.

பத்திரிக்கை சுதந்திரம் போற்றப்பட வேண்டும், ஊடகங்களுக்கு பாரபட்சமற்ற வகையில் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுதந்திரம் வேண்டும் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் உறவின் மேன்மையை, வாழ்கை நெறிகளை பண்பாடுடன் கலந்து சொல்வதில் பெயர் பெற்ற நற்றமிழ் நாட்டில் எதிர்கால சந்ததியினரை பாழ்படுத்தும், பண்பாட்டை சீர்குலைக்கும் சுதந்திரமாக இல்லாமல் ஒழுக்கத்துடன் கூடிய சுதந்திரமாக அது நெறிப்பட வேண்டும்.

(இது நித்தியானந்தா விவகாரம் சந்தி சிரித்த போது நான் எழுதி தினமணி மார்ச் 8ம் தேதி பேப்பரில் நடுப்பக்க கட்டுரையாக வெளிவந்தது. -நன்றி தினமணி)

Friday, August 6, 2010

மலிவாகிப் போன மனித உயிர்கள்



ஜுலை 19, 2010 அதிகாலை மேற்கு வங்க மாநிலம் சைந்தியா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது அதிவேகமாக வந்த உத்தர் பங்கா விரைவு ரயில் மோதியதில் 67 பேர் உயரிழந்ததுடன், நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ரயில்வே அமைச்சகத்தை குறைசொல்லி மம்தா பதவி விலக வேண்டுமென்ற அறிக்கையோடு எதிர் கட்சிகளின் பணி முடிந்துவிட்டது. ஆளும் காங்கிரஸ் அரசு தனது கூட்டணியில் ஒரு அங்கமான திரிணமுல் காங்கிரஸின் தலைவி ரயில்வே அமைச்சர் என்பதை மறந்து அவர் வேறு யார் கட்டுப்பாட்டிலோ இருப்பது போல் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க ரயில்வே அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிக்கை. இறுதியில் இறந்த ரயில் ஓட்டுனர்களின்மீதும் குற்றம் சுமத்தி ஒருவாறு அறிக்கைகள் முடிவிற்கு வந்துவிட்டது. இனி மேல் விசாரணைகள் நடைபெறும் இதன் விபரங்கள் வெளிச்சத்திற்கு வரும் முன் பலர் இந்த விபத்தை மறந்திருப்பார்கள்.

இது போன்ற விபத்துக்கள் நடைபெற்றவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பவர் கள் அத்துடன் அதை மறந்து விடுகிறோமா என்கிற ஐயம் எழுகிறது. டிசம்பர் 2000 லிருந்து இன்று வரை நடைபெற்ற 19 ரயில் விபத்துக்களில் 810 பேர் இறந்திருக்கிறார்கள் ஆயிரக் கணக்கானோர் காயமுற்றிருக்கின்றனர். மே 2009 லிருந்து இந்த 14 மாதங்களுக்குள் 12 ரயில் விபத்துக்கள் நடைபெற்றிருக்கிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

குறிப்பாக நோக்கினால் ஜன 5, 2002 செகந்திராபாத் மன்மாட் விரைவு ரயில் மகாராஷ்டிராவின் காட்நண்டுர் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எழுது பொருள் சரக்கு ரயிலின் மீது மோதி விபத்து. டிச 15, 2004ல் அஹமதாபாத் ஜம்முதாவி ரயில் பஞ்சாப் ஜலந்தர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உள்ளுர் ரயிலில் மோதி விபத்து. அக் 21, 2009 ல் உத்திரபிரதேசம் பஞ்சண்ணா ரயில் நிலையத்தில் கோவா விரைவு ரயிலும், மேவாரி விரைவு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து. ஜன 16, 2010ல் உத்திரபிரதேசத்தில் கலிந்தி விரைவு ரயிலும், சிராம் சக்தி விரைவு ரயிலும் மோதி விபத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்த ஒவ்வொரு விபத்தின் முடிவிலும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என ஆட்சியாளர்கள் அறிக்கை விட்டதுடன் தமது கடமை முடிந்ததாக எண்ணியிருப்பார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.

பெரிய உணவகங்களில் கை கழுவும் இடத்தில், டாய்லெட் டில் நீர் விரையம் ஆகாமல் இருப்பதற்காக மனிதர் முன் சென்று நின்றவுடன் தண்ணீர் வரத் துவங்குவதும், அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் தண்ணீர் வரத்து நிற்கும் விதத்திலும் ‘சென்சார்’ என சொல்லப்படும் முறை செயல் படுத்தும் அளவிற்கு அறிவியல் முன்னேறியிருக்கிறது. சாலையில் பேருந்து இரவில் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் முகப்பு விளக்குடன் ஒரு வாகனம் வருமானால் பேருந்தின் முகப்பு விளக்குகள் தானாக வெளிச்ச அலை குறைந்து, கூடும் (டிம், பிரைட்) கண்டுபிடிப்புகள் வந்துள்ளது. இந்த சூழலில் ரயில்களுக்கான ‘சமிஞ்கை” (சிக்னல்)களை முறைப்படுத்த அறிவியலில் மேம்பட்ட முறை புகுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

தவிர, மனித உயிர்களை மதிப்பிடுவதிலும் பாகுபாடு என்பது பரவலாக துவங்கியிருப்பதும் வேதனை அளிப்பதாக உள்ளது. சமீப மங்களுர் விமான விபத்தில் இறந்த ஒவ்வொரு வருக்கும் மாநில, மத்திய அரசு மற்றும் விமானத்துறை சேர்ந்து மொத்தம் 78 லட்சம் நஷ்டஈடாக அறிவித் திருக்கிறது. தற்போதைய ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு 3 லட்சம் நஷ்ட ஈடாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அனுதினமும் நடைபெறுகிற சாலை விபத்தில் பலரின் கவனத்தை கவர்கிற விபத்திற்கு மட்டும் 50 ஆயிரமும், 1 லட்சமும் நஷ்ட ஈடாக அறிவிக்கப்படுகிறது. இன்றைய விலைவாசி மற்றும் வாழ்க்கை முறையில் 1 முதல் 3 லட்சங்கள் என்பது சில நாட்களில் கரைந்து விடக்கூடிய ஒன்றே.

பங்கு மார்க்கெட் சரிவிற்கும், பன்னாட்டு வியாபாரத்திற்கும், டீசல் விலை உயர்விற்கும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து பேசுகிற அமைச்சரவைக் கூட்டம் உடனடியாக இது போன்ற பொது மக்கள் உயிரிழப்பு விஷயத்திற்கும் ஒரு துறை சார்ந்த பிரச்சனை அவர் ஆளும் கட்சியினராக இருந்தால் அவரை பாதுகாக்கும் விதத்தில் அறிக்கைகள் விடுவது, இதர கட்சி சார்ந்தவர் என்றால் குறை சொல்லி அறிக்கை விடுவது என்ற நிலை விடுத்து, அமர்ந்து பேசி பாதுகாப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து விரைவு முடிவெடுக்க வேண்டும். ஒரு துறையில் ஊழல் என்றாலோ, விபத்து போன்ற நடவடிக்கை என்றாலோ சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச் சொல்லிவிட்டால் போதும் அதனை தொடர்ந்த எந்த மேல் நடவடிக்கையும் வேண்டாம் என எண்ணும் அரசியல் வாதிகளின் போக்கு மாற வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பார்க்கிற போது உயிரிழப்பிற்கான இழப்பீடு வழங்குவதிலும் பாரபட்சம் என்பது கூடாது. முன்பதிவு ரத்தாகும் போது திருப்பியளிக்காமல் குவியும் நிதியிலிருந்தும், தக்கல் முறை பதிவிற்கு பணம் திருப்பியளிக்கும் நிலைகளே எழுவதில்லை என்ற அடிப்படையில் சேரும் நிதியிலிருந்தும் உடனடியாக பயணிகள் காப்பீடிற்காக ஒரு திட்டம் வகுத்து விபத்தில் உயிரிழந்தால் 10 லட்சத்திற்கு குறையாமல் நஷ்ட ஈடு வழங்கப் படவேண்டும்.
சாலை விபத்துக்களுக்கான நஷ்ட ஈட்டிற்கும் மாநில அரசுகள் ஒரு காப்பீடு திட்டத்தை வகுத்து அரசே செலவினை ஏற்று உடனுக்குடன் நஷ்ட ஈடு 10 லட்சத்திற்கு குறையாமல் வழங்கப்பட வேண்டும். மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும்.

(இந்த எனது கட்டுரை தினமணி சென்னை பதிப்பில் 2 ஆக 2010 அன்று கருத்துக்களம் என்ற பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது - நன்றி தினமணி)